Monday 22 April 2019

பணத்தை இழக்கும் அப்பாவி

ஆண்டுதோறும் போலி நிதித் திட்டங்களில் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதலீடுகளுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியின் அளவு குறைந்து வருவதும் இதுபோன்ற திட்டங்களில் மக்கள் முதலீடு செய்வது முக்கியக் காரணமாகும். ஓரளவுக்கு இப்போதுதான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வங்கிக்கும், மோசடி திட்டங்களுக்கும் மாற்றாக பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கியிருக் கிறார்கள். ஆனால், அதற்குள்ளேயே பரஸ்பர நிதித் திட்டத்தின் மீது உள்ள நம்பிக்கையையும் சந்தேகிக்கும்படியான செய்திகள் வெளியாகி பேரிடியாக விழுந்துள்ளன. கடந்த வாரம் பரஸ்பர நிதித் திட்டங்களை நிர்வகிக்கும் இரண்டு பிரபல நிறுவனங்கள், தங்களது முதலீட்டாளர்களுக்கு முதிர்வுக் காலத்தில் பணத்தை திருப்பித் தர இயலாத நிலையை அறிவித்தன. கோடக் பரஸ்பர நிதி மற்றும் ஹெச்டிஎப்சி பரஸ்பர நிதி நிறுவனங்கள் இரண்டும் தங்களிடம் முதலீடு செய்த நிரந்தர முதிர்வு திட்டங்களுக்கான (எப்எம்பி) முதிர்வு தொகையை அளிக்க போதிய நிதி இல்லை என்று குறிப்பிட்டன. ஐஎல் அண்ட் எஃப்எஸ் மற்றும் எஸ்ஸெல் குழும நிறுவனங்களில் முதலீடு செய்ததால் தங்களது நிதிதொகை முற்றிலுமாக இதில் முடங்கிவிட்டதாக இந்நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பித் தரும்போது தாங்களும் முதலீட்டாளர்களுக்கு சேமிப்பு தொகையை திரும்ப அளிப்பதாக கூறியுள்ளன. ஹெச்டிஎப்சி நிறுவனம் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கோடக் நிறுவனம் அசலை மட்டும் அளித்துவிட்டு வட்டியை பிறகு தருவதாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சில நிதி நிறுவனங்கள் எஸ்ஸெல் குழும நிறுவனர்களுக்கு பங்குகளை அடமானமாகப் பெற்று கடன் வழங்கின. ஆனால் உரிய காலத்தில் அவற்றுக்குரிய பணம் கிடைக்காததால் நிதி நிறுவனங்களின் முதலீடுகள் முடங்கின. இதுதான் நிரந்தர முதலீட்டு திட்ட முதலீட்டாளர் களின் பணம் முடங்கியதற்கு ஆரம்பமாக அமைந்தது. இதில் வினோதமான விஷயம் என்னவெனில் மொத்தம் 6 நிதி நிறுவனங்கள் எஸ்ஸெல் குழுமம் அல்லது ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த 6 நிறுவனங்கள் 56 நிதித் திட்டங்களை நிர்வகிக்கின்றன. ஆக எப்எம்பி முதலீட்டாளர் கள் மட்டுமின்றி பிற நிதித் திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களின் பணமும் அந்தந்த முதிர்வுக் காலத்தின் போது கிடைப்பது கேள்விக்குறியாகும் அபாயம் எழுந்துள் ளது. பரஸ்பர நிதித் திட்ட விளம்பரங்கள் வெளியாகும்போது, வேகமான வாசகம் ஒன்று கேட்கும். அதாவது பரஸ்பர முதலீட்டுத் திட்டங்கள் அனைத்தும் சந்தை அபாயத்துக் குரியவை. இதனால் இதில் ஏற்படும் லாப, நஷ்டங்களுக்கு முதலீட்டாளரே பொறுப்பு என்பதாக பொறுப்பு துறப்பு வாசகம் வெளியாகும். அந்த வகையில் எப்எம்பி முதலீட்டாளர்கள் தங்களது முதலீடு கிடைக்காதது குறித்து எங்குமே புகார் தெரிவிக்க முடியாது. சட்ட ரீதியாகவும் தீர்வு காண முடியாது. கடந்த ஜனவரி மாதத்திலேயே தங்களது முதலீடு முடங்கிப் போயுள்ளதாக இவ்விரு நிறுவனங்களுக்கும் தெரியும். இதனால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க முடியாது என்பது முன்கூட்டியே தெரிந்த நிலையில் கடைசி நிமிஷத்தில் இது குறித்த அறிவிப்பை இந்நிறுவனங்கள் வெளியிட்டதற்கான காரணம்தான் புரியவில்லை. இதே போல மற்ற நிறுவனங்களும் தங்கள் நிதி குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. தங்களது முதலீட்டாளர்களுக்கு தகவல் தெரிவிப்பதில் எந்த அளவுக்கு நிதி நிறுவனங்கள் அக்கறை காட்டுகின்றன என்பதையே இது காட்டுகிறது. பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி எப்போதும் தவறு நடந்த பிறகுதான் கடுமையான விதிகளை பிறப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ஏனெனில் அது எதிர்பார்க்காத வகையில் புதிது புதிதாக தவறுகள் நடக்கின்றன என்பதும் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். இந்த தவறுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டிய பொறுப்பு செபி-க்கு உள்ளது. நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் நிதியை பெற்றவுடன், அந்த நிதி எந்த திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிவிக்க வேண்டியதை கட்டாயமாக்க வேண்டும். அதேபோல குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும். இதன் மூலம் பெருமளவிலான நிதி ஒரே திட்டத்தில் குவிவதை தடுக்க முடியும். முதலீட்டாளர்களின் பணத்தைக் கையாள்கிறோம். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பெற்று நடத்து கிறோம் என்பதை நிதி நிறுவனங்களும் ஆத்ம சுத்தியோடு உணர வேண்டும். அப்போதுதான் அதிக லாபம் கிடைக்கும் என்பதற்காக கூடுதல் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கும். வங்கியில் குறைந்த வட்டி, தனியார் நிதி நிறுவனங்களில் மோசடிக்குள்ளாகும் ஆபத்து, இப்போது பரவாயில்லை என கூறப்பட்ட பரஸ்பர நிதி நிறுவனங்களின் செயல்பாடும் நம்பிக்கை தரவில்லை என்றால் முதலீட்டாளர்கள் எங்குதான் போவது. 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கண்டுபிடித்து விட்டேன்' (யுரேகா)

புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்களின் பின்னே நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் கிரேக்க விஞ்ஞானி, கணிதமேதை ஆர்க்கிமிடீஸ். ஒரு நாள் குளிப்பதற்காகக் தன் குளியல் தொட்டியில் இறங்கிப் படுத்திருக்கிறார். உடனே அத்தொட்டியில் நீரின் அளவு உயர்வதையும், தன் உடல் எடை குறைவது போலத் தோன்றுவதையும் பற்றிப் பலமாக யோசிக்கத் தொடங்கி விட்டாராம் அவர்! பிறவி விஞ்ஞானி அல்லவா? உடனே அவருக்குப் பொறி தட்டியுள்ளது. ‘ஒரு பொருள் ஒரு திரவத்தினுள் மூழ்கி யிருக்கும் பொழுது, அப்பொருள் இழப்பதாகத் தோன்றும் எடை, அதனால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம்' எனும் விஞ்ஞான உண்மையைக் கண்டு பிடித்து விட்டார்! அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில், தான் குளித்துக் கொண்டிருப்பதை மறந்து விட்டு `கண்டுபிடித்து விட்டேன்' (யுரேகா) என்று கத்திக் கொண்டே வெளி யில் ஓடி வந்தார் என்பார்கள்! இந்த பௌதிக விதியைத் தான் இன்றைய உலகம் `ஆர்க்கிமிடீஸ் கோட்பாடு' எனக் கொண்டாடுகிறது! கிபி பதினேழாம் நூற்றாண்டில் நடந்த இந்த சம்பவத்தைப் பற்றியும் படித்து இருப்பீர்கள். புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்த ஆங்கிலேய விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவராகப் படித்துக்கொண்டிருந்த காலம் அது. பிளேக் நோய் காரணமாக சிலகாலம் அவரது கல்லூரி மூடப்பட்டு இருந்த பொழுது, சொந்த ஊருக்குச் சென்று நாட்களைக் கடத்த வேண்டியதாயிற்றாம் நியூட்டனுக்கு! தன் கிராமத்திலிருந்த பழத் தோட்டத்தில் ஓர் ஆப்பிள் மரத்தின் அடியில் ஏதோ யோசனையில் படுத்து இருந்தாராம் இளைஞர் ஐசக் நியூட்டன். அப்பொழுது ஓர் ஆப்பிள் அவர் கண்முன்னே தரையில் விழுந்துள்ளது. `இந்த மாதிரி ஆப்பிள் ஏன் ஒவ்வொரு முறையும் நேரே தரையில் போய் விழுகிறது? ஒரு முறை கூடப் பக்க வாட்டிலோ மேல் நோக்கியோ பறந்து செல்வது இல்லையே ஏன்?' எனப் பலவாராகச் சிந்தித்தாராம்! உடனே அவருக்கு மூளையினுள் ஒரு மின்னல்! அன்று பிறந்தது இன்று உலகம் கொண்டாடும் புவியீர்ப்பு விதி! அதாவது எளிமையாகச் சொல்ல வேண்டு மென்றால், ஆப்பிளை விட எடையில் மிகமிகப் பெரியதான பூமி ,ஆப்பிளை தன் பால், அதாவது பூமியின் மையத்தை நோக்கி ஈர்க்கிறது! தம்பி, தினமும் தொட்டியில், குளத் தில், ஆற்றில் குளிப்பவர்கள் கணக்கற் றோர். ஆனால் அந்த குளிக்கும் அனுபவத்தையே வேறு விதமாகப் பார்த்தார் ஆர்க்கிமிடீஸ்! மாம்பழம் போன்ற பழங்கள் மரத்திலிருந்து விழுவ தைப் பார்ப்பவர்களும் ஏராளமானோர்.ஆனால் பழம் விழுவதை வேறு கோணத்தில் பார்த்தார், சிந்தித்தார், ஆராய்ந்தார் நியூட்டன்! அதனால் ஞானம் பிறந்தது. உலகம் உய்ந்தது! நம்ம தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஷிவ் கேராவைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ‘உங்களால் வெல்ல முடியும் ' ( You can win ) எனும் அவரது நூல் இலட்சக்கணக்கான பிரதிகள் விற்றுள்ளது. அவர் சொல்வதைப் பாருங்கள். ‘வெற்றி பெறுபவர்கள் வேறு செயல்களைச் செய்வதில்லை.அதே செயல்களையே வேறு விதமாகச் செய்கிறார்கள்' என்கிறார். பின்னே என் னங்க? செய்த முறையிலேயே செய்து கொண்டிருந்தால், முன்னர் நடந்தது தானே நடந்து கொண்டேயிருக்கும்? தம்பி, உண்மை இது தான்.யாராலும் எந்தப் பொருளையும் அதன் 360 கோண பரிமாணத்தில் பார்க்க முடியாது.ஒருவரது பார்க்கும் பார்வை சரியில்லை என்றால் அவரது புரிதலும் சரியாக இருக்காது.போகும் வேகத்தை விட ,செல்லும் திசை முக்கியமல்லவா? நம்ம வள்ளுவர் இதையே ‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்கிறார்! ராம்ராஜ் காட்டன் நாகராஜின் அனுபவத்தைப் பற்றிப் படித்து இருப்பீர்கள்.ஆரம்ப காலத்தில் வேட்டி விற்க நிறையச் சிரமப் பட்டிருக்கிறார்.காரணம் வேட்டி கட்டுபவர்களை மக்கள் உயர்வாகப் பார்க்கவில்லை என்று புரிந்து கொண்டார். மனிதர் அதற்காக வேட்டி விற்பதை நிறுத்தினாரா என்ன? பிரச்சினை வேட்டியில் இல்லை,வேட்டியை மக்கள் பார்க்கும் பார்வையில் இருக்கிறது எனப் புரிந்து கொண்டார்! வேட்டிகட்டுபவர்களை மற்றவர்கள் மதித்து சல்யூட் அடிக்கும் தொழிலதிபர்களாக சித்தரிக் கும் பிரத்யேக விளம்பரங்களை உரு வாக்கினர். இன்று சக்கை போடு போடுகிறார்! உண்மை என்னவென்றால், உங் களுக்குப் பிரச்சினை தரக்கூடியது உங்கள் பிரச்சினையல்ல; அதைப் பற்றிய உங்களது அணுகுமுறை தான்! வள்ளல் அழகப்ப செட்டியார், காமராஜர், அன்னை தெரசா, விஸ் வேஸ்வரையா, சத்யஜித் ராய், பகத் சிங்,லீக்குவான் யூ, விவசாயி நம்மாழ்வார் போன்றோர் தம் மாற்றுச் சிந்தனைகளால் மாற்றங்களை நம் கண் முன்னே செய்து காட்டி சரித்திரத்தில் இடம் பெற்றார்கள். `எந்தவொரு செய லையும் தொடங்குவதற்கு முன் அதை நீங்கள் பார்க்கும் பார்வை தான் உங்கள் வெற்றியை நிர்ணயிக்கும். எனவே எப்பொழு தும் அதனைச் சரியாக செய்யுங்கள்' என்கிறார் சாணக்கியர்! எந்தத் துறையிலும் மாற்றுச் சிந்தனையும் சரியான புரிதலும் மண்ணுயிர்க் கெல்லாம் இனிதல்லவா?

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday 14 April 2019

மக்கள் மனம் கவர்ந்த மாமேதை...!

மக்கள் மனம் கவர்ந்த மாமேதை...! டாக்டர் அம்பேத்கர் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் இ ன்று (ஏப்ரல் 14-ந்தேதி) டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள். பன்னெடுங்கால இந்திய வரலாற்றில், மனிதர்கள் தங்கள் மதங்களாலும், பண்பாட்டு நம்பிக்கைகளாலும், கலாச்சார வேறுபாட்டாலும் சக மனிதர்கள் மீது செலுத்திய சொல்லொண்ணா துயர்களை, இழிவுகளை, சாதி ஏற்றத்தாழ்வுகளை, சுரண்டல்களை, மனித தன்மையற்ற செயல்களை, பிரச்சினைகளின் அடிப்படையில் வீழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வை மாற்றியமைக்க, வீரியமிக்க தன் அறிவுத்திறனால் நெஞ்சுறுதியோடு செயல்பட்டவர் டாக்டர் அம்பேத்கர். “யாரும் யாருக்கும் அடிமையில்லை. சாதி என்பது ஒரு வித மனநோய், தன்னை உயர்ந்தவனாகவும், பிறரை தாழ்ந்தவனாகவும் பார்ப்பவன் மனநோயாளி,” என்று சூளுரைத்து நவீன இந்தியாவிற்கான வடிவத்தை தந்தவர், “நவீன இந்தியாவின் தந்தை” புரட்சியாளர் அம்பேத்கர். சாதி ஏற்றத்தாழ்வு, வருணாசிரம அடுக்குகள் கடந்து இன்று எல்லோரது மனநிலையையும், வாழ்வையும் எப்படி இறுக பற்றிக் கொண்டிருக்கிறது என்று புரிய வைத்து அதற்கு எதிராக நம்மை தற்காத்துக்கொள்வதற்கான அரிய மருந்தாக புரட்சியாளர் அம்பேத்கர் இன்றும் திகழ்கிறார். பொது சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை பற்றி பேசுவது இன்றும் கூட அவ்வளவு எளிதில் நிகழ்ந்துவிடுவதில்லை அல்லது புரிந்துகொள்ளப்படுவதில்லை என்னும் பட்சத்தில் இந்திய சுதந்திரத்திற்கு முன் இருந்திருக்கக் கூடிய நிலைமையை எண்ணிப் பாருங்கள். அன்னிய ஏகாதிபத்திய அடிமை முறைக்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போது, அம்பேத்கரின் குரல் மட்டும் தான், சொந்த மக்கள் மீது இந்நாட்டு மக்கள் இத்தனை ஆண்டுகாலமாக செலுத்தி கொண்டு வந்த சாதி இழிவை, அடிமை முறையை போக்குவதை குறித்து ஒலித்துக்கொண்டிருந்தது. பல்வேறு எதிர்ப்புகள், பயமுறுத்தல்கள், கல் எறிதல், நேரடியான வன்முறை, சொந்த சமூக மக்களின் பழிதீர்ப்பு படலங்கள் என எதற்கும் அஞ்சாது, தான் கொண்ட கொள்கையிலிருந்து பின் வாங்காது தொடர்ந்து போராடினார். அம்பேத்கர் நியூயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து கொண்டு அப்படியே லண்டன் சென்று பொருளாதார துறையில் முதுகலைப்பட்ட படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, பரோடா மன்னரின் நிதியுதவி திடீரென நிறுத்தப்பட்டதன் பேரில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பரோடா அரசாங்கத்திற்கு வேலை செய்ய இந்தியா திரும்பி வந்தார். லண்டன் சென்று படித்து வரும் தன்னை வரவேற்க யாரும் வரவில்லை என்று அவர் மனம் வருந்தவில்லை. அவருக்கும் ஏற்கனவே இந்தியாவின் மனம் தெரிந்தது தான். ஆனால் தான் தங்குவதற்கு கூட யாரும் இடம் தராமல் அலைக்கழிப்பார்கள் என்று அவர் சற்றும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தான் லண்டன் சென்று படித்து வருகிறோம், பரோடா அரசாங்கத்தில் நல்ல மதிப்புடைய பணி, தன் கையில் வாடகைக்கு எடுக்கும் அறைக்கு கொடுத்து விடக்கூடிய பணம், என எல்லாம் இருந்தும் தீண்டத்தகாதவன் என்ற காரணத்தினால் தங்குவதற்கு அறை கிடைக்காமல் பட்ட அவதி அவரை நிம்மதியிழக்க வைத்தது. பின் எப்படியோ தன்னை பார்சி என்று சொல்லி ஒரு பார்சி விடுதியில் தங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்கிறார். ஆனால் சில நாட்களில் அங்கும் “தீண்டத்தகாதவன்” என்று அவரை தெரிந்து கொண்ட பார்சிகள், “பார்சிகள் தங்கும் இடத்தில் ஒரு தீண்டத்தகாதவன் தங்கி புனிதத்தை போக்கிவிட்டான்,” என்று அவரை அடிப்பதற்கு பெரும் கூட்டம் கூடியிருக்க, அந்த கூட்டத்தின் முன் நின்று கொண்டிருந்தார் அம்பேத்கர். இந்த காட்சி அவருக்கு என்ன மாதிரியான மனநிலையை கொடுத்திருக்க முடியும் என்று யோசித்து பார்க்க வேண்டும். அப்போது அவர் மற்றவர்களை போல நல்ல உடை உடுத்தியிருந்தார், அரசு வேலை செய்து கொண்டிருந்தார், விடுதிக்கு கொடுக்க வேண்டிய பணம் அவருக்கு இருந்தது. அதிகப்படியான பணத்தை வாடகையாக கொடுத்துக் கொண்டிருந்தார். இவையெல்லாம், இருந்தும் அவர் எப்படி இந்துகளுக்கு “தீண்டத்தகாதவனோ”, பார்சிகளுக்கும் அப்படியே. இத்துணை அவமானங்கள் பட்டாலும், பெருந்துயர் அடைந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் தன் எழுத்தாலும், அயராத உழைப்பாலும், தீண்டத்தகாத மக்கள் அவர்களின் அடிமை நிலையை எப்படியாவது உணர்ந்து அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதில் மட்டும் விடாப்பிடியாகவே இருந்தார். தனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, கிடைக்காத பட்சத்தில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு தன் மக்களுடைய உரிமைகளை நிலைநாட்டினார். வேறெந்த தலைவர்களுக்கும் இல்லாத பெரும் பொறுப்பு அம்பேத்கருக்கு தன் மக்கள் மேல் இருந்தது. ஒரே நேரத்தில் சமூக தளத்திலும், அவர்களை அரசியல் தளம் நோக்கி அழைத்து செல்வதிலும் முனைப்போடு இருந்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் பொறுப்புக்கு வந்த பின்பு, இந்து சட்ட திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் தர மறுத்த நேரு தலைமையிலான சொந்த அரசை எதிர்த்து தன் பதவியை துச்சமென நினைத்து தூக்கியெறிந்தவர் அம்பேத்கர். குழந்தை திருமண தடை, பெண்ணின் திருமண துணையை அவளே தேர்ந்தெடுத்தல், விதவை மறுமணம், விவாகரத்து பெறும் உரிமை, பெண்ணுக்கும் சொத்தில் பங்கு இவைகள் தான் அம்பேத்கர் முன்மொழிந்த சட்ட வரைவு. ஆனால் இதை அப்போது இருந்த எதிர்கட்சிகள், ஆளும் அரசு என அனைவரும் எதிர்த்தனர். “இந்த சட்டங்களை நிறைவேற்ற முடியாத சட்ட அமைச்சர் பதவியே எனக்கு வேண்டாம்,” என தன் பதவியை முதன் முதலில் உலகிலேயே பெண்களுக்காக தூக்கியெறிந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் தான். இப்படியாகவே யாருக்கும், எவ்வித பயமுறுத்தலுக்கும் எப்போதும் அஞ்சாது, “நாய்கள் குரைப்பதால் பயணம் நின்று விடாது” என்ற பழமொழி போல, “எனது எதிராளிகள் என்ன சொன்னாலும் எனது கடமையை நான் செய்தாக வேண்டும்,” என்று அறிஞர் வால்டேர் சொன்னது போல, தன் காலத்தின் வரலாற்றை எழுதுகிறவன் தான் கூறிய ஒவ்வொன்றுக்காகவும், தான் கூறாத ஒவ்வொன்றுக்காகவும் தாக்கப்படுவதை, விமர்சிக்கப்படுவதை எதிர்பார்த்தாக வேண்டும். ஆனால், “சத்தியத்தையும், சுதந்திரத்தையும் நேசிக்கிறவனும், எதையும் எதிர்பார்க்காதவனும், எதற்கும் அஞ்சாதவனும், எதையும் கேட்காதவனும், அறிவுலகில் உண்மையைப் பேணி வளர்ப்பதன்றி வேறு எதற்கும் ஆசைப்படாதவனுமாகிய ஒருவனை இந்த சின்னஞ்சிறிய அற்பமான குற்றச்சாட்டுகள் ஊக்கமிழக்கச் செய்திடலாகாது,” என்ற புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் மனம் கவர்ந்த மாமேதையாக இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தான் போராடி பெற்ற சட்டங்களின் வாயிலாக எப்போதும் பிறந்து கொண்டேயிருக்கிறார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பழந்தமிழர் கண்டறிந்த நெருப்பின் பயன்பாடுகள்...!

பழந்தமிழர் கண்டறிந்த நெருப்பின் பயன்பாடுகள்...! ம.தாமரைச்செல்வி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சூ ரியன், நெருப்பு, நிலவு ஆகிய முச்சுடர்களையும் வணங்குவது தெய்வ வழிபாட்டுக்கு சமமாகும் என்று தொல்காப்பியர் கூறியிருக்கிறார். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் பெயர்களால் அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். விளக்கேற்றி வழிபடுவதை அனைத்துக் குடும்பங்களிலும் காண்கிறோம். அச்சத்தினால் அல்லது அன்பினால் தெய்வத்தை வணங்குங்கள் என்று தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டார். நெருப்பை கண்டு தமிழர்கள் யாரும் அஞ்சவில்லை. அன்பினால் நெருப்பை வணங்கினர். மழை தரும் கதிரவனும், குளிர்தரும் நிலவும், ஒளிதரும் நெருப்பும் மிகுந்த அன்புக்குரியன. அன்புடையவர்களுக்கு நாம் நன்றி செலுத்துகிறோம். அதனால்தான் நெருப்பு வழிபாடு தமிழர்களிடம் தோன்றியது. ஐம் பூதங்களில் நிலம், நீர், தீ, வளி, வான் என்னும் வரிசையில் நெருப்பு நடுவில் வைத்து எண்ணப்படுகிறது. நெருப்பு கண்ணுக்குப் புலப்பட்டும், கையால் தொடும் திடப்பொருள் ஆக புலப்படாமலும் உள்ளது. இதனால்தான், நெருப்பின் வடிவம் கொண்ட சிவனை அருவுருவாக போற்றினர். நெருப்பு தன் இருப்பைக் காட்டிக்கொள்கிறது. ஆனால், நீளம், அகலம் உயரம் என்னும் திடப்பொருளுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்வதில்லை. மாணிக்க வாசகர் நெருப்பு வடிவான சிவனை, வாழ்முதலாகிய பொருளே என்றார். தமிழர் பழக்க வழக்கங்களில் நெருப்பை வழிபடுவது மற்றும் பயன்கொள்வது மட்டும் அடங்கவில்லை. வாழ்வில் இன்பதுன்ப நேரங்களில் அரவணைக்கும் தாயாகவும் தீயைக் கருதினார்கள். தாங்க முடியாத துன்பங்களின்போது, தவிர்க்க முடியாத சூழலில் நெருப்பில் பாய்ந்து உயிர் விட்டனர். போர்க்களத்தில் தோற்றுப் போன மன்னனின் அந்தப்புர மகளிர் பகைவரின் கைகளில் கிடைக்காமல், தீப்பாய்ந்து உயிர்விட்டனர். தமிழ்ப்பெண்கள் மானத்தோடு வாழ்ந்து மானத்தோடு மடிவதைப் பெருமையாகக் கருதினர். இது போர்க்காலத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட நெருப்பில் பாய்ந்து உயிர்விடும் முறையாகும். ஏனைய காலங்களில் கணவன் இறந்தால், மனைவியும் இறந்துவிட வேண்டும் என்னும் கட்டாயம் இருந்ததில்லை. பூதப் பாண்டியன் இறந்தபின் அவன்மனைவி பெருங்கோ பெண்டு தீப்பாய்வதை அனைவரும் தடுத்தனர் என்பது ஒன்றே உடன் கட்டை ஏறுவது கட்டாயமாக இருந்ததில்லை என்பதைக் காட்டுகிறது. ஆனால் வடநாட்டில், இது மூடநம்பிக்கை போல் பரவி சககமணம் என்னும் வழக்கமாக மாறியது. இதனை ராசாராம் மோகன்ராய் போன்ற பெருமக்கள் தடுத்ததால் அறவே தடைசெய்யப்பட்டு விட்டது. நெருப்பின் மேல் சத்தியம் செய்வது, நெருப்பை தாண்டுவது, தீக்குண்டத்தில் இறங்கி நடப்பது, தீச் சட்டி எடுத்து கோவிலை வலம் வருவது போன்ற வழக்கங்கள் நாளடைவில் தோன்றின. வெள்ளிக்கை வேளாளருள் ஒருபிரிவினர் எந்தப் பெண்ணின் மீதாவது களங்கம் கற்பிக்கப்பட்டால், அப்பழியிலிருந்து அவளை மீட்பதற்காக கன்னிப்பழி கழித்தல் என்னும் சடங்கை நடத்தி வந்தனர். மூத்த மகளிர் பலர் நள்ளிரவில் ஓரிடத்தில் ஒன்று கூடி, கன்னிப்பழி கழித்தல் சடங்கை நடத்தி வைப்பார்கள். ஒரு குச்சியால் பெரிய வட்டம் வரைவார்கள். அந்த வட்டத்தை சுற்றிலும் முள் மர விறகுகளை வைப்பார்கள். பழி சுமத்தியபெண்ணை ஈரப் புடவையோடு அழைத்துச் சென்று வட்டத்தின் நடுவில் நிறுத்துவார்கள். அவள் தலையில் ஏழுவகை முட்களால் ஆன முள் முடி சூட்டுவார்கள். பிறகுவட்ட விளிம்புள்ள விறகுக்குத் தீ வைப்பார்கள். வட்டமாக நெருப்பு எரியும்போது. அந்தப் பெண் தன் தலையில் உள்ள முள் முடியையும் அணிந்த ஈரப்புடவையையும் எரியும் நெருப்பில் எறிந்துவிட்டு, நெருப்பைத் தாண்டி ஓடிவந்துவிட வேண்டும். மூத்த மகளிர் அந்தப் பெண்ணுக்கு கன்னிப்பழி தீர்க்கப்பட்டதாக அறிவித்தபின் அந்தப்பெண்ணின் திருமணத்திற்கு எந்தத் தடையும் இருக்காது. இதுவே புராணக் கதைகளில் நெருப்பில் இறங்கி கற்பை நிரூபிக்கும் கதைகளாக மாறிவிட்டது. ராமாயணத்தில் சீதை நெருப்பில் இறங்கிய செய்தியும் இத்தகைய பழைய வழக்கத்தின் தொடர்ச்சி எனக் கருதப்படுகிறது. எனவே தீமிதிப்பது, தீச் சட்டி எடுப்பது போன்றவை தன்குற்றங்களிருந்து தன்னை நீக்கிக் கொள்ளும் அடையாளங்களாக பின்பற்றப்பட்டுவருகிறது எனலாம். காமன் பண்டிகையின் போது காமனைத் தீயிட்டு எரிப்பது, காமக் கோளாறுகளால் ஏற்படும் பண்பாட்டுச்சீரழிவை உணர்த்தியது. சூரியன், நிலவு, தீ ஆகிய மூன்றும் மூவேந்தர்க்குரிய குல அடையாளங்கள். வடநாட்டு ராசபுத்திரர்களிலும் சூரியன், நிலவு, தீ ஆகிய முப்பிரிவு குலங்கள் உள்ளன. சேர மன்னர் தீயை வழிபடும் பிரிவைச் சார்ந்தவர்கள். எனவே, அண்டையிலுள்ள கன்னடத்தார் தமிழர்களை தீக் குலத்தவர் என்னும் பொருளில் திகளர் என அழைக்கின்றனர். எனவே தீ தொடர்பான பழக்கவழக்கங்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்தது என அறியமுடிகிறது. வள்ளல் பெருமானும் ஒளி வழிபாடே தமிழரின் உண்மையான தெய்வ வழிபாடு என நிலைநாட்டியதை உலகத் தமிழர் அனைவரும் போற்றத்தக்க பழந்தமிழர் தெய்வ நெறியாக உணர வேண்டும். தீ என்னும் சொல்லில் இருந்தே தெய்வம் என்றும் சொல் தோன்றியதாக வேர்ச்சொல் ஆராய்ச்சி வித்தகர் மொழி ஞாயிறு பாவாணர் புலப்படுத்தியிருக்கிறார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விவேகானந்தர் சொன்னது.. விவேகமானது..

சுவாமி விவேகானந்தர், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் 27-1-1897 அன்று சொற்பொழிவாற்றினார். அவரது உரையில் இருந்து கொஞ்சம் இங்கே தொகுத்து தரப்பட்டு உள்ளது.

* அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும் தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை.

* ஒருவன் உடலும், மனமும் தூய்மையாக இல்லாமல், கோவிலுக்கு செல்வதும், வழிபடுவதும் பயனற்றவை.

* உடலும், மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்து கொண்டு, பிறருக்கு மத போதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள்.

* புற வழிபாடு என்பது அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே. அக வழிபாடும், தூய்மையும் தாம் உண்மையான விஷயங்கள். இவையின்றி செய்யப்படும் புற வழிபாடு பயனற்றது. இதை நீங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

* ‘நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம். பிறகு ஒரு திருத் தலத்திற்கு சென்றால், அந்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விடும்’ என்று நினைக்கும் அளவிற்கு கீழான நிலைக்கு இந்த கலியுகத்தில் மக்கள் வந்து விட்டார்கள்.

* தூய்மையற்ற உள்ளத்துடன் கோவிலுக்கு செல்லும் ஒருவன், ஏற்கனவே தன்னிடம் இருக்கும் தன் பாவங்களுடன் மேலும் ஒன்றை அதிகப்படுத்துகிறான். கோவிலுக்கு புறப்பட்டபோது இருந்ததை விட, இன்னும் மோசமானவனாக அவன் வீடு திரும்புகிறான்.

* திருத்தலங்கள், புனிதமான பொருள்களாலும், மகான்களாலும் நிரம்பி இருப்பவை.

* மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோவில் எதுவும் இல்லையென்றாலும், அந்த இடங்கள் திருத்தலங்கள் தான்.

* 100 கோவில்கள் இருந்தாலும் அங்கே புனிதமற்றவர்கள் இருப்பார்களானால் அங்கு தெய்வீகம் மறைந்து விடும்.

* திருத்தலங்களில் வாழ்வது மிகவும் கடினமான செயலாகும். காரணம், சாதாரண இடங்களில் செய்யும் பாவங்களை சுலபமாக நீக்கி கொள்ள முடியும். ஆனால் திருத்தலங்களில் செய்யும் பாவத்தை நீக்கவே முடியாது.

* மனதை தூய்மையாக வைத்திருப்பதும், பிறருக்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்.

* ஏழை-எளியவர்களிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனை காண்பவன் தான் உண்மையாக கடவுளை வழிபடுகிறான். விக்ரகத்தில் மட்டும் தெய்வத்தை காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குண்டு உடலால் உருவாகும் பாலியல் திருப்தியின்மை..

நாம் வாழும் இந்த உலகம், குண்டான மனிதர்களால் நிரம்பி வழியப்போகிறது. கிட்டத்தட்ட இப்போது 50 கோடி பேர் அளவுக்கு அதிகமான உடல் எடையோடு வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள். அதாவது நூறு பேரில் பத்துபேர் உடல் எடை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் பிரசவத்திற்கு பின்புதான் பெண்களின் உடல் எடை அதிகமாகும் என்ற கருத்து இருந்தது. இப்போது பள்ளியில் படிக்கும் பருவத்திலே, பூப்படையும் காலத்திலே சிறுமிகள் அதிக எடைகொண்டவர் களாக இருக்கிறார்கள். கல்லூரிப்பருவத்திலும், கல்யாண காலகட்டத்திலும் பெண்கள் குண்டாக இருப்பது தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலக அளவில் ஆண்களைவிட பெண்களே பெருமளவில் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் நகரப்பகுதிகளில் வாழும் மக்களில் 5.5 சதவீதம் ஆண்களும், 12.6 சதவீதம் பெண்களும் அதிக எடை கொண்டவர்கள். இதில் நகரக் குடிசைவாசி ஆண்கள் 1.9 சத வீதம், பெண்கள் 7.2. சதவீதம். கிராமங்களில் அதிக எடை உள்ளவர்கள் குறைவு. ஆண்கள் 1.6 சதவீதம், பெண்கள் 3.8 சத வீதம். சமூக நிலையும், பொருளாதார நிலையும்கூட அதிக உடல் எடைக்கு காரணமாகிறது. உயர் சமூகப் பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களின் அதீத உடல் எடை 10.4 சதவீதமாக இருக்கிறது. குறைந்த சமூகப்பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களில் 0.9 சதவீதம் மட்டுமே அதிக எடை கொண்டவர்கள் இருக்கிறார்கள். சமூகப் பொருளாதார அந்தஸ்து உயரும்போது எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கலோரிகளின் அளவும் அதிகரிக்கிறது. ஏழைகள் அதிக கலோரி கொண்ட உணவுகளை உண்பதில்லை. உண்டாலும், அவர்கள் உழைக்கும் வர்க்கமாக இருப்பதால் கலோரி எளிதாக செலவாகிவிடுகிறது. குறைந்த கலோரிகள் உள்ள உணவு, அதிக நார்ச்சத்துள்ள உணவு, அதிகம் குடிநீர், புகைத்தல்- மதுபானம் அருந்துவதை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாது கடைப்பிடித்தாலே உடல் எடையைக் குறைக்கலாம். உடல் எடையை குறைப்பதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகமாக இருக்கின்றன. ஆனால் அதை தொடர்ச்சியாக கடைப்பிடிப்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். மாயாஜாலம்போல் அதிரடியாக உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணமே பலரிடமும் இருக்கிறது. அப்படி அதிரடியாக உடல் எடையை குறைப்பது ஆபத்தான செயல் என்பதை பலரும் புரிந்துகொள்வதில்லை. உடல் எடையை குறைக்க 1 மணி நேரம் வேகமாக நடத்தல், ஜாகிங் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான சமச்சீரான உணவு பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வேகமாக நடப்பது இருதய நோய்கள், மாரடைப்பு வரும் வாய்ப்புகளையும் குறைக்கும். அதீத உடல் எடை காரணமாக உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்களை அது அதிகமாக தாக்குகிறது. தற்போது பெரும்பாலான பெண்கள் மாதவிலக்கு பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். அதற்கு அதிக உடல் எடை ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. அதிக உடல் எடை, அதீத உதிரப்போக்கு அல்லது குறைந்த உதிரப்போக்கு ஏற்பட காரணமாக இருக்கிறது. அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படையும் நிலையும் உருவாகிறது. இப்போது ஆணும், பெண்ணும் அதிக எடையுடன் இருப்பதால், கல்யாண வாழ்க்கையில் இணையும் ‘எடை கூடிய தம்பதிகளின்’ எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதிக எடைகொண்ட தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை அவ் வளவு திருப்திகரமாக அமைவதில்லை. குண்டான உடல் அவர்களது பாலியல் செயல்பாடுகளுக்கு தடையாக இருக்கிறது. மனது நிறைய ஆசை இருந்தாலும், அதை நிறைவேற்ற பெரும்பாலன நேரங்களில் உடல் ஒத்துழைக்காத நிலை தோன்றுகிறது. விரும்பியதுபோல் எல்லாம் அவர்களால் பாலியல் உறவு நிலைகளை மாற்றிக்கொள்ளவும் முடிவதில்லை. அதனால் அவர்களுக்கு பாலியல் உறவு மீது சலிப்பும், விரக்தியும் தோன்றுகிறது. அப்படிப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் வரை பாலியல் உறவுகளில் இருந்து விலக விரும்புகிறார்கள். அப்போது அவர்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்காக நீலப்படங்களை பார்க்கத் தொடங்குகிறார்கள். அதுவே அவர்களை, அதற்கு அடிமையாக்கிவிடுகிறது. அதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். உடல் எடை அதிகரித்தவர்கள் எண்ணிக்கை இப்போது உயர்ந்துகொண்டிருப்பதால், அவர்களை கருத்தில்கொண்டும் பாலியல் நிபுணர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் பாலியல் உறவை மேம்படுத்திக்கொள்ளவும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் வழிகாட்டுகிறார்கள். அவர்களுக்கு தக்கபடியான உணவு வகைகளையும் பரிந்துரைக்கிறார்கள். மனோரீதியாக அவர்கள் பாலியல் நாட்டம் கொள்ள தேவையான ஆலோசனை மற்றும் சிகிச்சைகளும் வழங்குகிறார்கள். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க... உடல் எடை என்பது அதிரடியாக கிடுகிடுவென உயர்வதில்லை. வெகுகால உணவுப் பழக்கமும், பல வருட வாழ்வியல் முறைகளும் படிப்படியாக உடல் எடையை உயர்த்துகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அதனால் ஒவ்வொருமுறை உணவுக்காக வாயை திறக்கும்போதும் உங்களுக்கு அது தேவைதானா? தேவையில்லாமல் ருசிக்காக அதை திணிக்கிறீர்களா என்பதை நினைத்துப்பாருங்கள். உணவின் அளவைக் குறையுங்கள். சாப்பிட்ட உணவும் உடலில் அப்படியே கொழுப்பாக படிந்துவிடாத அளவுக்கு என்ன செய்யவேண்டும் என்றும் சிந்தியுங்கள். வயது கூடும்போது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்கும் சக்தி குறையும் என்பதை கவனத்தில்கொள்ளுங்கள். உடலுழைப்பு குறையும்போது உடல் எடை அதிகரித்துவிடும் என்பதால், உடலை வேலைக்கு பழக்குங்கள். உடலை சொகுசுக்கு அடிமையாக்கிவிடாதீர்கள். தைராய்டு நோய் காரணமாக ஹார்மோன் அளவுகளில் சீரற்ற நிலை தோன்றுவதாலும் உடல் எடை அதிகரிக்கும். அதனால் தேவைப்படும்போது மருத்துவ ஆலோசனை பெறுங்கள். பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வதாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடும். மூளையில் இருக்கும் ஹைபோதாலமஸ், பசி மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தூண்டுகிறது. இதன் காரணமாகவே திருப்தி ஏற்பட்ட பிறகே உண்பதை நிறுத்து கின்றனர். அதனால் பாதி அளவு திருப்தி ஏற்பட்டதும் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். குழந்தைகளுக்கு தாய்மார்கள் அதிக உணவை ஊட்டிக்கொண்டே இருப்பது, அவர்களது உடல் உடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. அதிக கொழுப்பு சத்துள்ள பீட்சா, பர்கர், கேக், குளிர்பானங்கள் அருந்துவதால் உடல் எடை கூடும். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதும் ஏதாவது உணவைக் கொறித்துக்கொண்டே இருப்பது மிக தவறானது. இதனால் உடல் எடை வேகமாக அதிகரித்துவிடுகிறது. உணவை வீணாக்கக்கூடாது என்ற உணர்வில் பெண்கள் மீதம் இருப்பதையும் சாப்பிடுவது தவறான முன்னுதாரணம். பெண்கள் உடல் எடையால் அவதிப்பட இது முக்கிய காரணம். புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பல காரணங்களாலும் உடல் குண்டாகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts