Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

மூளையின் ‘ராஸ்’ நினைவகத்தை வெற்றிக்கு பயன்படுத்துவது எப்படி?

மூளையின் ‘ராஸ்’ நினைவகத்தை வெற்றிக்கு பயன்படுத்துவது எப்படி? கோ. ஒளிவண்ணன் மனித மூளையின் செயல்பாடுகள் அளப்பரியது. உலகத்தின் அதிநவீன கணினியைவிட மனித மூளையின் செயல்பாடு நுட்பமானது, வேகமானது என்கிறார்கள் விஞ்ஞானிகள். சமீபத்தில் மூளையின் சிறப்பு நினைவுப் பகுதியைப் பற்றி ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. ‘ராஸ்’ என சுருக்கமாக அழைக்கப்படும் அந்த நினைவுப்பகுதியே நமது வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது என்பதுதான் ஆய்வில் தெரிய வந்திருக்கும் முக்கியச் செய்தி. மாணவர்கள் மூளையின் ராஸ் நினைவகத்தை வெற்றிகரமாக பயன்படுத்துவது எப்படி? என்பது பற்றி பார்ப்போம்... ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் மூலமாக நமது மூளைக்கு தகவல்கள் செல்கின்றன. தினம் காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும்வரை, ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நம் முன்னால் நடக்கின்றன. எல்லாமே மூளைக்கு கடத்தப்பட்டாலும் அவை எல்லாவற்றையும் மூளை பதிந்து வைத்துக்கொள்வதில்லை. அது ஏன்? என்பது பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சி வியத்தகு மூளைச் செயல்பாடு ஒன்றை கண்டறிந்து கூறியுள்ளது. எவற்றை மூளைக்குள் கொண்டு செல்ல வேண்டும், எதை புறம்தள்ள வேண்டும் என்கிற இன்றியமையாத பணியை மேற்கொள்ளும் மூளையின் சிறப்பு நினைவகப்பகுதி ஒன்று இருப்பது விஞ்ஞானிகளால் அறியப்பட்டது. நுண்வலை செயலாற்றும் அமைப்பு என அந்தப் பகுதியை விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலத்தில் ‘ரெட்டிக்யுளர் ஆக்ட்டிவேட்டிங் சிஸ்டம் (ராஸ்-RAS)’ என்றழைக்கப்படுகிறது. இது நமது மூளையின் கீழ்பகுதியில், நரம்பு மண்டலங்கள் மூளையோடு இணையும் பகுதியில் உள்ளது. நாம் காணும் காட்சிகளில், கேட்கும் ஒலிகளில், நுகரும் மணங்களில், சுவைக்கும் உணவுகளில், உடலால் தொட்டு உணரப்படுவதில் எவைகளெல்லாம் மூளைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மிகமுக்கியமான வேலைகள் நுண்வலை செயலாற்றும் அமைப்பிடம் (ராஸ்) உள்ளது. இது நமது மூளையின் வாயில் காவலன் போன்றது. தேவையானதை மட்டுமே உள்ளே அனுப்பும். ராஸ் அமைப்பு, நாம் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றோமோ அதை சிரத்தையாக செய்து முடிக்கிறது. தன்னுடைய குழந்தையின் மீது தாய்க்கு அதீத கவனம் இருக்கும். வீட்டில் அனைவருடன் உட்கார்ந்து சத்தமாக பேசிக் கொண்டிருப்பார். உள்ளறையில் உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் சிறு சிணுங்கல் சத்தம், அங்கிருக்கும் இரைச்சல் மற்றும் சூழல்களைக் கடந்து மற்றவர்களுக்கு கேட்கும் முன்பே தாய்க்கு மட்டும் தெளிவாக கேட்கும். உடனே பதறி அடித்து எழுந்து செல்வார். இதை நாம் பல நேரங்களில் கண்டிருப்போம். தாய்க்கு மட்டும் குழந்தையின் குரல் கேட்க என்ன காரணம்? அம்மாவின் கவனம் குழந்தையின் மீது. நாம் எதில் கவனம் செலுத்துகிறோமோ, அதற்கு ‘ராஸ்’ முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆகவே, குழந்தையின் சிணுங்கல் ஒலிமற்ற ஒலிகளையெல்லாம் புறந்தள்ளி தாயின் செவிக்கு சென்றுவிடுகிறது. இது போன்ற எண்ணற்ற உதாரணங்கள் சொல்லலாம். நீலநிற உடை அணிந்து செல்லும்பொது, அன்றைக்கு அந்தநிற உடை அணிந்தவர்களை நாம் அதிகம் பார்க்கலாம். ஒருவர் புதிதாக ஷூ ஒன்றை வாங்கி அணிந்திருந்தால் அன்றைக்கு அவர் தன்னை அறியாமலேயே பலரது கால்களை பார்ப்பார். இதுவும் ராஸ் நினைவகத்தின் செயல்பாடுதான். சிலர் சிறந்த ஆற்றலாளர்களாகவும், வெற்றியாளர்களாகவும் திகழ்வதற்கு மிகமுக்கியக் காரணம் அவர்களது கட்டுப்பாடான செயல்பாடுகள் என்பதை நாம் அறிவோம். அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு பின்னணியில் முக்கிய காரணமாக இருப்பது நுண்வலை செயலாற்றும் அமைப்பு என்கிற ராஸ். அது இயங்கும் விதத்தினை அறிந்துக் கொண்டால் நாம் இந்த தரணியை ஆளலாம். நாம் எதை கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கிறோமோ, அது சம்பந்தமானவற்றை எண்ணற்ற தகவல்களிலிருந்து ‘ராஸ்’ சலித்து பிரித்து எடுத்து நமக்கு தந்துவிடுகிறது. உதாரணமாக, நாம் கல்லூரி படிப்பு முடித்துவிட்டு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்று முடிவுசெய்து அதற்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வை எழுத வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், நம்மை அறியாமலேயே ராஸ் நமக்கு எண்ணற்ற உதவிகளை செய்ய தொடங்கிவிடும். அதுசம்பந்தமான செய்திகள், பத்திரிக்கையில் வந்தால் நமது கண்களில் தெளிவாக தெரியும். யாராவது அதை குறித்து பேசினால் நமது கவனம் அதில் செல்லும். இதில் வியப்பான செய்தி என்னவென்றால், நாம் எந்த பெருமுயற்சி எடுக்காமலேயே நமக்கு தேவையானதை அறிந்து ராஸ் செயல்படுகிறது. இதுவே, நாமும் முயற்சி செய்து ராஸிற்கு கட்டளைகள் வழங்கினால், நமது இலக்கு விரைவில் எட்டுவது நிச்சயம், நாம் சாதனையாளராவது நிச்சயம். ராஸ் நினைவுப் பகுதியை எப்படி பயன்படுத்திக் கொள்வது? என்பதை கவனிப்போம். நாம் எந்த ஒன்றை உறுதியாக நம்புகிறோமோ, ராஸ் அதனை சிரத்தையுடன் ஏற்றுக் கொள்கிறது. உதாரணமாக, எனக்கு மேடையில் நன்கு பேச வரும், நான் பேச்சாளராக வருவேன் என்று நம்பினால், ராஸ் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. அதன்பின், நம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரங்கள் திரட்டுகிறது. ஆயிரக்கணக்கான செய்திகள் நம்மை சுற்றி வந்தாலும், அவைகளில் ராஸ் நமது நம்பிக்கையை வலுப்படுத்தும் செய்திகளை மட்டும் நமது மூளைக்கு அனுப்புகிறது. ஒன்றின் மீது நம் நம்பிக்கை இன்னும் அதிகரிக்க, ராஸின் கவனம் அதன் மீது இன்னும் கூடுதலாகி அதிக அளவில் நமக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுத் தருகிறது. இதனால் நாம் திட்டமிட்ட இலக்கை நோக்கி வெகுவாக முன்னேற முடியும். இப்படித்தான் உலகத்தில் வெற்றிப் பெற்றவர்கள் எல்லாம், முதலில் தாங்கள் எடுத்துக்கொண்ட செயலில் முழுநம்பிக்கை வைக்கிறார்கள். இத்தகைய நேர்மறையான எண்ணங்கள் அவர்களை முன்னோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கும். அதே நேரத்தில், நம்மால் ஒன்றினை செய்ய முடியாது என்று நம்பிவிட்டால், ராஸ் அப்பொழுதும் உண்மையான ஊழியனாக நம்மால் ஏன் செய்ய முடியாது என்பதற்கான தகவல்களை திரட்டி நமது மூளைக்கு அனுப்பிவிடும். அதுமுடியாது என்கிற நமது நம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டிவிடும். என்னாலே காலையிலே எழுந்து நடைப்பயிற்சி எல்லாம் செய்ய முடியாது என்று சொல்பவர்கள், என்றைக்கும் நடக்க மாட்டார்கள். எனக்கு கணக்கு பாடம் வராது என்று ஒருவர் நம்பினால், அவருக்கு கணக்குபாடம் வராது. ‘கணக்கு பாடமென்ன பெரிய இதுவா, எனக்கு வரவில்லையென்றால் யாருக்கு வந்துவிடும் என்று நம்பிக்கையோடு சொல்பவர்கள், கணிதத்தை கற்று அறியும் சாத்தியங்கள் அதிகம்’. ஆகவே சாதனையாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள பெரும் வித்தியாசம் அவர்கள் அறிந்தோ, அறியாமலோ ராஸ் என்கிற மூளை நுண்வலை செயலாற்றும் அமைப்பை திறம்பட பயன்படுத்துகின்றனர். நாமும் ராஸ் நினைவுப்பகுதியை செம்மையாக நேர்மறையாக பயன்படுத்தி வெற்றியாளராக திகழ்வோம்!

கல்விச்சோலை - kalvisolai Articles

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement