Thursday 5 July 2018

காலத்துக்கு ஏற்ற கற்பனையே நவீன ஓவியம்

காலத்துக்கு ஏற்ற கற்பனையே நவீன ஓவியம் ஓவியர் பாண்டு மனித வரலாற்றின் தொன்மையான கலை ஓவியம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் கருத்து தெரிவிப்பதற்காக மொழி தோன்றுவதற்கு முன்னர் ஓவியத்தை தான் பயன்படுத்தினர். கருத்து வெளிப்பாட்டுக்கு வழி அமைத்த ஓவியம் கலைநயத்துக்கு மணி முடியாக திகழ்ந்தது. தொன்மையான சரித்திர சின்னங்களில் குகை ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. அதனால் கலைகளில் பழமையானது ஓவியம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஓவியத்தை புரிந்துகொள்வதற்கு மொழி தேவையில்லை. மொழி, இன, மத, தேச வேறுபாடற்ற கலை ஓவியமாகும். இந்த ஓவியத்தில் தான் எத்தனை எத்தனை வகைகள்... கோட்டு ஓவியம், வண்ண ஓவியம், தொன்மையான ஓவியம், நவீன ஓவியம் என்று பல வகையான ஓவியங்கள் காணப்படுகின்றன. இன்று முழுமையாக தொன்மை ஓவியம், நவீன ஓவியம் என இரு வகை ஓவியங்கள் நிலவி வருகின்றன. தொன்மை ஓவியங்களை வரவேற்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதழ்களும், இணையத்தின் வரவும் ஓவியத்தில் புதுவகைகளை அறிமுகப்படுத்தி உள்ளன. தொடர்படக் கதைகள், கார்ட்டூன் படங்கள் ஆகியவை வளர்ந்து வரும் ஓவியர்களுக்கு வணிக வகையில் வருவாய் ஈட்டித்தருகின்றன. இந்த சூழலில் ஓவியங்களின் வலிமையையும், வேறுபாட்டையும் ஓவியக் கலையில் முனைவர் பட்டம் பெற்ற ஓவியர் பாண்டு விவரிக்கிறார்: இயற்கை காட்சிகளை கண்களால் பார்த்து அதை அப்படியே வரைவது இயற்கை ஓவியம். அந்தக் காலத்தில் ஓவியர் ரவிவர்மா ராஜா, ராணியை நேரில் பார்த்து ஓவியமாக வரைவார். மேலும் அவர் வரைந்த லட்சுமி, சரஸ்வதி, நள தமயந்தி போன்ற ஓவியங்களும் தத்ரூபமாக அமைந்து இருக்கும். அப்போது போட்டோகிராபி வசதி இல்லாததால் ஓவியங்கள் பெரிதாக பேசப்பட்டன. கூத்துக்கலை நாடகமாகவும், நாடகம் சினிமாவாகவும் வளர்ச்சி பெற்றதைப் போன்று ஓவியக்கலை நவீன ஓவியமாக உருமாற்றம் பெற்றது. நவீன ஓவியத்தின் பிதாமகன் என்று ஜெர்மனியைச் சேர்ந்த பிகாஸோ போற்றப்படுகிறார். அவர் ஓவியத்தில் மாற்றம் செய்து அதை நவீன ஓவியமாக வரைந்து புகழ் பெறச் செய்தார். இதற்கு முதலில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நாளடைவில் மக்கள் அவரின் ஓவியத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர். இதை ஓவியக் கலையின் வளர்ச்சி என்று சொல்ல முடியும். பின்னோக்கிய நிலை என்று சொல்ல முடியாது. ரவிவர்மா வரைந்த ஓவியங்களுக்கு இன்றும் மரியாதை உள்ளது. இயற்கை ஓவியம் உள்ளதை உள்ளபடி பார்த்து வரைவது, அதை வரைந்து முடிப்பதற்கு சில மாதங்கள், வருடங்கள் வரை பிடிக்கும். ஓவியத்தை வரைந்தவர் அதை முடிக்கும் முன்னரே இறந்துவிடுவதும் உண்டு. மற்றவர்கள் வரைந்து முழுமை செய்வர். நவீன ஓவியத்தை அரை நாளில் கூட வரைந்து முடித்துவிட முடியும். வரைபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கற்பனைத் திறனுக்கு ஏற்ப புதுமையான படைப்புகளை உருவாக்க முடியும். ஒரு கலைஞன் மனதில் என்ன நினைக்கிறானோ, அதை உள்வாங்கி தூரிகை மூலம் வண்ணத்தில் தேய்த்து பேப்பரில் வரைகிறான். அது எண்ணத்தின் கற்பனையின் பிரதிபலிப்பு. ஒருவருக்கொருவர் கற்பனைத் திறன் மாறுபடும். மனதில் தோன்றும் கற்பனையை ஓவியத்தில் வடிப்பவன் தான் ஓவியன். அதை பேனா மூலம் எழுதுபவன் எழுத்தாளன். மனதில் தோன்றும் ஆலாபனைகளை வாயால் பாடுபவன் பாடகன். இசைக் கருவிகளுடன் கற்பனைக் கேற்ப ராகங்களை இசைப்பவன் இசையமைப்பாளன். கற்பனை திறனோடு கல்லில் சிலை வடிப்பவன் சிற்பி. படைப்பாற்றல் உள்ளவர்கள் அனைவருமே கலைஞர்கள் தான். இயற்கை ஓவியங்கள் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையாகிறது என்றால், நவீன ஓவியங்கள் ரூ.2 கோடி வரை விற்பனையாகும். இருவகை ஓவியங்களுக்கும் ஆயுள் ஒன்றுதான். தற்போது நவீன ஓவியங்கள் முதலிடத்தில் உள்ளன. பழைய காலத்து ஓவியத்தை காட்சிப் பொருளாக வைத்து இருக்கிறார்கள். அதற்கு மதிப்பு உண்டு. தஞ்சை கோவில் கோபுரத்தை இன்று வரைந்தால் அது எடுபடாது. அதை செல்போனில் கூட கேமராவில் படம் பிடித்துவிட முடியும். அதை இன்றைய உலகம் ஏற்காது. நவீன ஓவியத்தை தான் உலகம் ஏற்றுக்கொண்டு இருக்கிறது. பெயிண்ட் கண்டுபிடிப்பதற்கு முன்பு இலை, தழை, செடி, கொடி, கலங்காரை மூலிகை சாற்றால் ஓவியமாக வரைந்தனர். அதன் மூலம் நான்கு அல்லது ஐந்து வண்ணத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். இன்று 36 வகையான கலர்கள் வந்துவிட்டன. அதனால் மூலிகை சாறு கொண்டு ஓவியம் வரைய தேவையில்லை. நவீன ஓவியங்களுக்கு ஈடு இணை எதுவுமில்லை. ஓவிய கல்லூரியில் படித்து முடித்துவிட்டு வருவோருக்கு சினிமாவில் ‘ஆர்ட்’ (கலை) கலைஞர்களாக நல்ல வரவேற்பு உள்ளது. பாகுபலி சினிமா படம் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தியது. அதில் 30 ஆர்ட் கலைஞர்கள் வேலை செய்தனர். அப்படத்தில் படைப்பாற்றலை வெளிப்படுத்தியவர்கள் ஓவியக் கல்லூரியில் படித்துவிட்டு வந்தவர்கள் தான். நவீன ஓவியத்தின் பிதாமகன் பிகாஸோவை போல் இந்தியாவில் எம்.எப்.உசேன் திகழ்ந்தார். எந்த ஓவியக் கல்லூரியிலும் அவர் படிக்கவில்லை. இயற்கை ஓவியம் வரைவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர். பிகாஸோ மீதான அன்பால் நவீன ஓவியத்துக்கு மாறினார். அவர் படம் வரையப்போகிறார் என்று பத்திரிகையில் விளம்பரம் வெளியாகும்போது படத்தை பார்க்கும் முன்பே அதை விலைக்கு வாங்க கோடீஸ்வரர்கள் போட்டிப்போடுவார்கள். ஒருமுறை அவர் வரைய இருந்த படத்தை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் ரூ.17 கோடிக்கு ஏலம் கேட்டார். 50 சதவீதம் பணத்தையும் முன்பணமாக அனுப்பிவைத்தார். பின்னர் உசேன் படம் வரைய தொடங்கியபோது, மீதம் உள்ள பணத்தில் 25 சதவீதம் பணத்தையும், வரைந்து முடித்த பின்னர் 25 சதவீதம் பணத்தையும் கொடுத்து படத்தை வாங்கி சென்றார். அந்த படத்தை அவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கூடுதலாக ரூ.5 கோடி லாபத்தில் விற்றுவிட்டார். நினைத்த மாத்திரத்தில் ஓவியனாக வந்துவிட முடியாது. சித்திரமும் கைப்பழக்கம் என்பது பழமொழி. ஓவிய உணர்வு ரத்தத்தில் ஊறி இருக்க வேண்டும். ஓவியம் வரைவது கடவுள் கொடுத்த வரம் என்று நினைக்க வேண்டும். அந்த உணர்வும் படைப்பாற்றல் திறனும் இருந்தால் தான் ஓவியனாக பரிமளிக்க முடியும். எங்கள் பரம்பரையில் யாரும் ஓவியர் கிடையாது. 5-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது ஓவியம் வரைய தொடங்கினேன். குமாரபாளையத்தில் பள்ளிப்படிப்பை முடித்ததும், சென்னை ஓவிய கல்லூரியில் சேர்ந்தேன். அகமதாபாத்தில் முதுகலை படிப்பை முடித்துவிட்டு பிரான்சு பல்கலைக்கழகத்தில் ஓவியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் (பி.எச்டி.) வாங்கினேன். தென்இந்தியாவில் முதன்முதலாக பி.எச்டி. பட்டம் வாங்கியது நானாகத்தான் இருக்கும். படிப்பை முடித்ததும் ஆர்ட் தொடர்பான தொழிலை தொடங்கினேன். சினிமாவில் நடிக்க தொடங்கி 574 படங்களில் நடித்து முடித்துவிட்டேன். 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோது என்னிடம் கட்சிக்கு கொடி வரையும்படி சொன்னார். அப்போது நான் வரைந்துகொடுத்த கொடிதான் அ.தி.மு.க. கொடியாகும். ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஓவியத் திறமை உண்டு. இது ஆதாம், ஏவாள் காலத்தில் இருந்தே உள்ளது. அதை வெளிக்கொண்டு வருவது அவரவரின் திறமையை பொறுத்தது. ஆதாம், ஏவாள் காலத்தில் தங்கள் தேவைகளை ஓவியமாக வரைந்து காட்டினர். அப்போது வரையப்பட்ட ஓவியமே நவீன ஓவியம். ஒவ்வொருவருடைய கையெழுத்தும் ஒரு ஓவியம் தான். அதை மரணம் வரை அழிக்க முடியாது. இதற்கு மாற்றமோ, மாற்றுக் கருத்தோ இல்லை. ஒவ்வொருவரின் கையெழுத்தை வைத்தே அவருடைய தலையெழுத்தை நிர்ணயிக்க முடியும். கையெழுத்தை ஒழுங்கு பண்ணிக்கொண்டால் வாழ்க்கையில் ஏற்படும் சோக நிகழ்வுகள் நீங்கி வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts