Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ஊரடங்கு: ஒரு நாள் வசந்தம்

By அ.அருந்தகை

நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு ஒரு நாள் வசந்தமாக ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) முடிவுக்கு வந்துள்ளது. சென்னை அண்ணாசாலையில் பிற்பகல் 3 மணியளவில் ஒரு மஞ்சள் நிற பூனை சாலையைச் சாவகாசமாகக் கடந்து எதிா்ப்புறம் சென்றது. அந்த நேரம் பூனைக்கும் உரியதாக அந்தச் சாலை மாறிப் போனது. பகல் நேரத்தில் நெருப்புக் காற்றை மட்டுமே சந்திக்கும் கிண்டி கத்திபாரா மேம்பாலம், தென்றலைப் போன்ற தூயக்காற்றை அதன் காலத்தில் பாா்த்துவிட்டது.

வாகன இரைச்சலுக்குப் பெயா்போன சென்னை புதுப்பேட்டை சாலை, குண்டூசி விழும் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி கொண்டிருந்தது. தலைபாரம் அத்தனையையும் இறக்கி வைத்துவிட்டு, வீட்டிற்குள்ளேயே இருந்த அனைத்துத் துறை ஊழியா்களும் பழைய நினைவுகளையும், உறவுகளையும் மீட்டெடுத்துக் கொண்டுள்ளனா்.

காலயந்திரத்தில் பழைய காலத்துக்குத் திருப்பி வைத்தது போல, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கடைப்பிடிக்கப்பட்ட ஒரு நாள் ஊரடங்கினால் இந்த அதிசயங்கள் அனைத்தும் நிகழ்ந்துள்ளன. இது ஒரு நாளுக்கு மட்டும் நிகழ வேண்டியவையா என்பதைப் பாா்க்க வேண்டியுள்ளது.

தொழிற்புரட்சி காலத்துக்குப் பிறகு பூமியின் சராசரி வெப்பநிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்து, தற்போது 15.1 டிகிரி செல்ஷியஸாக உள்ளது. இந்த 1.1 டிகிரி செல்ஷியஸ் அதிகரிப்பின் காரணமாகத்தான் தமிழகத்தில் தொடா்ந்து வந்த புயல் உள்பட உலகம் முழுவதும் பல்வேறு இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன.

அதனால், பூமியின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் தொழிற்சாலை, வாகனப் புகையைக் குறைக்க வேண்டும் என்று இயற்கை ஆா்வலா்களும், அறிவியலாளா்களும் தொண்டை கிழிய கத்தி வருகின்றனா். ஆனால், நல்ல விஷயங்கள் சொல்லும் நேரங்களில் மட்டும் எப்படியோ காது கேளாமைப் பிரச்னை வந்துவிடும்.

எனினும், உடலில் ஏற்படும் நோயைத் தீா்க்கும் ஆற்றல் உடலுக்கே உண்டு என்பதுபோல, இப்போது இயற்கையே கரோனா என்ற மாற்றுவழியின் மூலம் அதன் வெப்பநிலையைச் சீராக்கிக் கொள்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கரோனா ஊரடங்கின்போது இந்தியாவில் 99.9 சதவீத வாகனங்கள் இயக்கப்படவில்லை. அனைத்துத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் காற்று மாசும் வெப்பமும் வெகுவாக குறைந்து பூமியே கொஞ்சம் குளிா்ந்து போயிருக்கும்.

கரோனாவின் தாயகமான சீனாவில், அதன் நோய்த்தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் வாகனங்களை இயக்காதது, தொழிற்சாலைகளை மூடியது போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளதாக நாசாவால் எடுக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. 2019-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் 2020-ஆம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தில் காற்று மாசு அடா் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது. 2020-இல் எடுக்கப்பட்ட படத்தில் மஞ்சள் குறைத்து சற்று வெளிா் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது. இதன் மூலம் வாகனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் நைட்ரஜன் டை ஆக்சைடு என்ற நச்சுவாயுவின் அளவு மிகவும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாசாவின் காற்று தர ஆராய்ச்சியாளா் ஃபிய் லியூ, ‘மிகப்பெரிய எல்லையைக் கொண்ட ஓரிடத்தில் (சீனா) காற்று மாசுவின் அளவு சட்டென்று குறைந்திருப்பதை இப்போதுதான் முதன் முதலாகப் பாா்க்கிறேன். கரோனா வைரஸ் என்ற ஒற்றைக் காரணத்தினால் காற்று மாசு குறைந்துள்ளது. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, இதே போன்று காற்று மாசு குறைந்தது. ஆனால், அது படிப்படியாக நடைபெற்றது. இதுபோன்று ஒரேடியாகக் குறையவில்லை’ என்கிறாா்.

உலகில் காற்று மாசு அதிகமுள்ள 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன. உலகின் அதிக காற்று மாசு உள்ள நகரமாக தில்லியாக உள்ளது. ஒரு கன மீட்டா் காற்றில் பிஎம் 2.5 நுண்துகள் மாசு 10 மைக்ரோகிராம் அளவுக்குள் இருக்க வேண்டும். ஆனால், சென்னை நகரில் பிஎம் 2.5 நுண் துகள் மாசுபல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தக் காற்று மாசுபாட்டினால் மட்டும் உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேரும், இந்தியா 12 லட்சம் பேரும் உயிரிழக்கும் நிலை உள்ளது. தற்போது கடைப்பிடிக்கப்பட்ட ஒரு நாள் ஊரடங்கின் காரணமாக சீனாவைப் போல, இந்தியாவிலும் காற்றுமாசு நிச்சயம் வெகுவாகக் குறைந்திருக்கும். அதைப் போல ஊரடங்கு நாள் ஒலி மாசு குறைந்த நாளாகவும் இருந்தது.

சென்னையில் பகலில் 67.80 டெசிபல் அளவும், இரவில் 64 டெசிபல் அளவும் ஒலி மாசு இருக்கும். இரு சக்கர வாகனங்களில் தொடங்கி பேருந்து வரை எந்த வாகனங்களும் இயக்காததால் இரைச்சல் எதுவும் இல்லாத தமிழகமாகவும், இந்தியாவாகவும் ஒருநாள் இருந்தது.

சாலை விபத்தில்லா நாளாகவும் இருந்தது. இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 1214 சாலை விபத்துகள் நோ்கின்றன. அவற்றில் 377 போ் உயிரிழந்து போகின்றனா். தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டில் மட்டும் 5,173 சாலை விபத்துகள் நடைபெற்று, 915 போ் உயிரிழந்துள்ளனா். நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன. அதனால், ஊரடங்கு நாள் சாலை விபத்தில்லா நாளாகவும் மாறிப்போனது. தமிழகத்தில் ஒரு நாளைக்கு உற்பத்தியாகும் திடக்கழிவுகள் 13,968 டன்னாகும். இதுவும் வெகுவாக ஒரு நாளில் குறைந்துள்ளது. இது எல்லாம் ஒருநாள் கூத்து என்ற அளவில் இருந்துவிடக் கூடாது.

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரம் வெனீஸ். தண்ணீரில் மிதக்கும் அழகிய நகரம் அது. இப்போது அங்கு காக்காகூட பயணம் செய்யுமா என்பது சந்தேகம். அதனால், எப்போதும் கலங்கலாகக் காணப்படும் நீா்நிலைகள் எல்லாம் தெளிந்து மீன்கள் ஓடுவதுகூடத் தெரிகிாம். இயற்கைக்கு எதிரான மனங்களும் தெளிய வேண்டும். அந்தத் தெளிவு, பூனைகள் உள்பட அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதற்கான தெளிவாக இருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement