Saturday 14 March 2020

ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த சிந்தனையாளர்

இரா.நல்லகண்ணு, மூத்த தலைவர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி.

இன்று (மார்ச் 14-ந் தேதி) காரல் மார்க்ஸ் நினைவு தினம்.

65 ஆண்டு காலமே வாழ்ந்த ஒரு மனிதன் வரலாற்றின் தத்துவார்த்த சிந்தனை வழியையே மாற்றியமைத்தார். நடுத்தர பொருளாதார வசதியுள்ள குடும்பத்தில் 1818-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் டையர் நகரத்தில் பிறந்தார் காரல் மார்க்ஸ். அங்கேயே ஆரம்ப கல்வியை கற்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் காரல் மார்க்ஸ் சட்டம் பயின்று கொண்டிருக்கும்போதே, ‘தத்துவம் இல்லாமல் எதுவும் முழுமை பெறாது’ என்று நம்பினார். அந்த காலகட்டத்தில் ஹெகலின் இயக்கவியல் தத்துவம், அன்றைய இளம் தத்துவவியல் மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. மார்க்சும் அதில் ஒருவராக தொடக்கத்தில் இணைந்தார்.

“தத்துவவாதிகள் உலக வாழ்க்கையை வியாக்கியானம் செய்கிறார்களே தவிர, சமூக அமைப்பை மாற்றுவது எப்படி என்பதே முக்கியமாகும். உலகைமாற்ற வெறும் சிந்தனை மட்டும் போதாது, நடைமுறை செயலாக்கம் தேவை” என்று கூறினார். 1844-ம் ஆண்டு பாரிசில் முதன்முதலில் பெடரிக் ஏங்கல்சை சந்தித்தார் மார்க்ஸ். முதல் சந்திப்பிலேயே ஏற்பட்ட நட்பு வாழ்நாள் இறுதி வரையில் இரட்டையர்கள் என்று அழைக்கும் அளவிற்கு தொடர்ந்தது. மார்க்சிய தத்துவத்தை, ‘வறுமையின் தத்துவம்’ என்று விமர்சித்த புரூதோனுக்கு பதில் கூறும் விதமாக மார்க்ஸ் 1847-ம் ஆண்டு எழுதி வெளியிட்ட நூல் தான் “தத்துவத்தின் வறுமை”.

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல் நகரத்தில் ரகசியமாக இயங்கி வந்த ‘லீக் ஆப் ஜஸ்ட்’ என்ற அமைப்பை மக்கள் மத்தியில் பகிரங்கமாக, வெளிப்படையாக இயங்க அறிவுறுத்தினர். கம்யூனிஸ்டு லீக்கிற்காக மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து எழுதி 1848-ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் முதல் பிரதியாக வெளியிட்ட கொள்கை விளக்க குறிப்பேடுதான், உலகில் 95 மொழிகளுக்கும் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட நூலான “கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை” ஆகும். அறிக்கையின் முதல் வரிகளை “இதுவரை உள்ள வரலாறுகள் அனைத்துமே வார்க்க போராட்டத்தின் வரலாறுகளே” என்று மனிதகுல வரலாற்றை முழுமையாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து எழுதியிருப்பர். தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கம்யூனிஸ்டு அறிக்கையை 1930-ம் ஆண்டு குடியரசு பத்திரிகையில் முதலில் வெளியிட்டவர் தந்தை பெரியார் ஆவார்.

மார்க்ஸ் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து படித்தும், பத்தாண்டுகளுக்கு மேல் குறிப்புகள் எடுத்தும், ஏங்கெல்சின் ஒத்துழைப்போடு எழுதிய நூல் தான் “மூலதனம்” ஆகும். மார்க்சின் ஆய்வில் மிக முக்கிய கண்டுபிடிப்பு உபரி மதிப்பாகும். அரசியல் பொருளாதாரத்தின் சாராம்சம்தான் உபரிமதிப்பு தத்துவமாகும் என்றார்.

மூலதனத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியாவின் நிலவுடைமை உற்பத்திமுறை பற்றி குறிப்பிடுகிறார். இந்திய உற்பத்தி முறை என்பது ஆசிய வகையான உற்பத்தி முறை என்கிறார். பல்வேறு படையெடுப்புகள், பிரிட்டிஷ் காலனியாதிக்கம், பஞ்சம், நோய், வெள்ளம், வறட்சி என பல வந்தபோதும் இந்திய கிராம அடிப்படை கட்டமைப்பை எதனாலும் மாற்ற முடியவில்லை. அதற்கு காரணம் சாதிய முறை மிகவும் கட்டுப்பட்டு கிடப்பதாக சுட்டிகாட்டுகிறார்.

பிரிட்டிஷ் அரசுக்கு இந்தியா, காலனி நாடாக மாறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காரணம் இங்கு மட்டும்தான் மக்கள் தங்களுக்குள் அனைவரும், அனைவருக்கும் எதிராக இருக்கின்றனர். இந்தியாவின் சமூக கூட்டமைப்பில் மிகவும் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக புரோகித வர்க்கம் விளங்கியது என்கிறார்.

உலகமயம், தாராளமயம், தனியார்மய கொள்கைகள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு முப்பது ஆண்டுகள் ஆகியும் வறுமையை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை, போரை, நவீன காலணி ஆதிக்கத்தை, வேலையின்மையை முதலாளித்துவத்தால் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. சமூக நல திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழிலாளர் நலன்கள் அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. போரால் ஏற்படும் பாதிப்புகளால் புலம் பெயரும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

உலக நாடுகள் இன்று சந்திக்கக்கூடிய முக்கிய பிரச்சினை புவி வெப்பமயமாகுதல் ஆகும். மார்க்ஸ் சூழலியல் குறித்து அன்றே குறிப்பிட்டுள்ளார். “முதலாளித்துவத்தின் கட்டுப்படுத்த முடியாத லாப வெறி, உழைப்பு சுரண்டலோடு நின்றுவிடாது. அதனையும் தாண்டி மனித குலமே வாழ தகுதியற்றவையாக பூமி மாறும் அளவிற்கு இயற்கை வளங்கள் மீது அவர்களது கோர கரங்கள் நீளும்” என்று எச்சரித்தார்.

உலகம் முழுவதும் கார்ப்பரேட்டுகள், வலதுசாரிகளின் பலம் சற்று ஓங்கி இருக்கும், இந்நேரத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், கல்வி, வேலை, மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகளுக்காக போராடும் இளைஞர்களின் கரங்களில் மார்க்சின் நூல்களையும், பதாகைகளையும் பார்க்க முடிகிறது.

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற உயரிய கொள்கைக்கு தடையாக இருப்பதை

‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்னும் வள்ளுவனின் வாக்குப்படி சுரண்டலுக்கான காரணிகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதனை மாற்ற பொதுவுடைமை தத்துவத்தை விஞ்ஞான பூர்வமாக முன் வைத்திருப்பதால்தான் மார்க்ஸ் இன்றும் தேவைப்படுகிறார். உலகம் முழுக்க நிலவிவரும் இன்றைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க வலதுசாரி பொருளாதார வல்லுனர்களே தவிர்க்க முடியாமல் மார்க்சிடமே தீர்வைத் தேடி வருகின்றனர்.

உலக வறுமையை தீர்ப்பதற்கு அறிவியல் வழி கண்டறிந்து சொல்லிய மாமனிதன் மார்க்ஸ். ஆனால், மார்க்ஸ் தனது வாழ்வில் அடைந்த துன்பங்களையும், வறுமையையும் யார் படித்து பார்த்தாலும் படித்தவர்களின் கண்களில் ரத்தம் வழிவதை தடுக்க முடியாது. மார்க்ஸ் இன்று நீங்கா புகழ் பெற்றிருப்பதற்கு காரணமானவர்கள் இரண்டே பேர் தான். ஒன்று, செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்து, அனைத்தையும் உதறித்தள்ளி தன்னை காதலித்து கரம்பிடித்த ஜென்னி. பெற்ற குழந்தைக்கு பால் வாங்கவும் காசு இல்லை, வறுமையில் மரணித்த குழந்தைக்கு சவப்பெட்டி வாங்கவும் காசு இல்லாத அளவிற்கு, கொல் வறுமையிலும் மார்க்சின் சிந்தனை தடைபட்டுவிட கூடாதென்று அனைத்தையும் தாங்கி கொண்டவர் ஜென்னி.

இரண்டாவது ஏங்கெல்ஸ். ஏங்கெல்ஸ் இல்லாமல் இருந்திருந்தால் மார்க்சின் வாழ்க்கை அவரது கொல் வறுமையால் இன்னும் விரைவாகவே முடிந்திருக்கும். இறுதிவரை மார்க்சின் குடும்பத்திற்கும் சேர்த்தே உழைத்து வந்தார் ஏங்கெல்ஸ். மார்க்சின் ஆய்வும், எழுத்துப் பணியும் முற்றுப் பெற்றது என்றால் ஏங்கெல்சால்தான். மூலதனத்தின் இறுதி பகுதியை முடிப்பதற்குள்ளாகவே மார்க்ஸ் தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார். ஏங்கெல்சுதான் மார்க்சின் மறைவுக்கு பின் அனைத்தையும் தொகுத்து மூலதனம் முழுமையாக வெளிவர காரணமானவர்.

2001-ம் ஆண்டு பிறந்தபோது கடந்து சென்ற ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த சிந்தனையாளர் யார்? என்ற கருத்துக்கணிப்பை பிபிசி நடத்தியது. ஓட்டு எண்ணிக்கை முடிவிலும், சென்ற ஆயிரம் ஆண்டின் தலைசிறந்த சிந்தனையாளராக காரல் மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அவருக்கு அடுத்த இரு இடங்களை, பிரபல விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டின், ஐசக் நியூட்டன் ஆகியோர் பிடித்தனர். சிறந்த கலை இலக்கிய வாதியாக ஷேக்ஸ்பியர் தேர்வு செய்யப்பட்டார்.

பி.பி.சி.யில் இதனை அறிவித்த அறிவிப்பாளர் “சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த நாளிலிருந்து சோசலிசத்தையும், மார்க்சிசத்தையும் எதிர்த்து ஏராளமாக பிரசாரம் செய்துவிட்டோம். ஆனாலும், இதுதான் மக்களின் கருத்தாக உள்ளது” என்று கூறினார்.

கம்யூனிஸ்டு அறிக்கையில் இறுதியாக சொல்லப்பட்டுள்ள “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமைச் சங்கிலியை தவிர, நீங்கள் அடைவதற்கு ஒரு பொற்காலம் காத்திருக்கிறது” என்ற நம்பிக்கை தரும் வரிகள் வரலாற்றின் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டவை.

No comments:

Popular Posts