Friday 14 September 2018

பொறியாளர் திலகம் விஸ்வேசுவரய்யா

பொறியாளர் திலகம் விஸ்வேசுவரய்யா என்ஜினீயர் ஆ.சவுரிராஜ் இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாட்டத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் சாரை சாரையாக படையெடுக்கும் துறை பொறியியல் துறை ஆகும். பொறியாளர்கள் அனைவருக்கும் முதன்மைப் பொறியாளராக இருந்த ஒருவரின் பிறந்தநாளே இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பிறந்த மோக்சகுண்டம் விஸ்வேசுவரய்யா தான் அந்தப் பெருமைக்குரிய பொறியாளர். “சர் எம்.வி” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். புனே பல்கலைக்கழகத்தின் ‘காலேஜ் ஆப் என்ஜினீயரிங் கல்லூரி’யில் படித்த இவர், மும்பை பொதுப் பணித்துறையில் பணியாற்றி, பிறகு இந்திய நீர்ப்பாசனத்துறை கமிஷனில் பொறியாளராக அரசால் நியமிக்கப்பட்டார். சுதந்திர இந்தியாவின் எதிர்காலத்திற்காக வியக்கவைக்கும் கட்டுமானப் பணிகளை ஏற்படுத்தி மாபெரும் சாதனையாளராக விளங்கிய எம்.விஸ்வேசுவரய்யா 1860-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி கர்நாடக மாநிலம் சிங்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் சீனிவாச சாஸ்திரிக்கும், வெங்கட லட்சுமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார்.15-வது வயதில் தந்தையை இழந்த விஸ்வேசுவரய்யா தன்னுடைய ஆரம்ப கல்வியை சிங்கபல்லபுராவிலும், உயர் கல்வியை பெங்களூருவிலும் பயின்றார். 1881 -ம் ஆண்டு, இளங்கலைப் பட்டப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்த அவர், பின்னர் தன்னுடைய கட்டிடப் பொறியியல் கல்வியை “புனே அறிவியல் கல்லூரியில்” முடித்தார். பிறகு, மும்பை பொதுப் பணித்துறையில் ஒரு பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர், இந்திய பாசன ஆணையத்தில் பணியைத் தொடங்கிய அவர், தானியங்கி வெள்ளமடை மதகை வடிவமைத்து, 1903-ம் ஆண்டு புனேவிலுள்ள “கடக்வசல” நீர்தேக்கத்தில் அதை செயல்படுத்தி வெற்றியும் கண்டார். வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்க “வெள்ளதடுப்பு முறை அமைப்பையும்“ மற்றும் துறைமுகங்களை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் “தடுப்பு அமைப்பையும்“ வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின்னர், ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்தேக்க அணைகளில் ஒன்றாக கருதப்படும் “கிருஷ்ணராஜ சாகர் அணையை” காவிரியின் குறுக்கே உருவாக்கி பெரும் புகழ்பெற்றார் விஸ்வேசுவரய்யா. இது மட்டுமல்லாமல், திருப்பதியில் இருந்து திருமலைக்கு சாலையமைக்கவும் மற்றும் மைசூருக்கு அருகிலுள்ள சிவசமுத்திரத்தில் நீர் மின் உற்பத்தி ஆலை அமைக்கவும் உறுதுணையாக இருந்தார். மைசூரு திவானாக ஏழு ஆண்டுகள் பதவி வகித்த இவர் “நவீன மைசூரின் தந்தை” எனவும் அழைக்கப்படுகிறார். மைசூரு அரசின் திவானாக நியமிக்கப்பட்ட அவர், மாநில கல்வி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். மைசூரூ பல்கலைக்கழகம், பெங்களூரு அரசு பொறியியல் கல்லூரி என பல நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். 1923-ம் ஆண்டு, இந்திய அறிவியல் காங்கிரசின் தலைவராகவும் பணியாற்றினார். 1934 -ம் ஆண்டு, ‘இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்‘ என்ற நூலை எழுதிய விஸ்வேசுவரய்யா பொருளாதாரத் திட்டமிடுதலை கூறிய முதல் அறிஞரும் ஆவார்.இவருக்கு “லண்டன் இன்ஸ்டிட்யூஷன் ஆப் சிவில் என்ஜினீயரிங்கில்” கவுரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது 1918 -ம் ஆண்டு திவான் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற அவர், தன்னுடைய ஓய்வுக்குப் பிறகும் கடுமையாக உழைத்தார். சிறந்த பொறியாளராக திகழ்ந்த சர்.எம்.விக்கு 1955 -ம் ஆண்டில் நாட்டின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. நூறு வயத்திற்கும் மேல் அயராது பாடுபட்ட எம். விஸ்வேசுவரய்யா 1962 -ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தன்னுடைய நூற்றியொன்றாவது வயதில் காலமானார். நாளை (செப்டம்பர் 15-ந்தேதி) இந்திய பொறியாளர் தினம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts