Thursday 11 October 2018

பெண்மையைப் போற்றுவோம் டாக்டர் கே.மீனா, முன்னாள் துணை வேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் இன்று (அக்டோபர் 11-ந்தேதி) உலக பெண் குழந்தைகள் தினம். பெண்ணால் படைக்கப்பட்ட இந்த உலகத்தில் பெண்ணை தவிர்த்து பார்க்க முடியாது. பெண் என்பவள் அவளுக்காக வாழ்பவள் அல்ல. பிறருக்காக வாழ்பவள். அதனால் தான் மகாத்மா காந்தியடிகள் கூறினார் பெண்கள் முன்னேற வேண்டும் என்று. இதையே தான் இன்றைய ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோரும் வலியுறுத்துகிறார்கள். ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்து விட்டால் வருத்தப்படுபவர்களின் எண்ணிக்கை இன்று குறைந்து விட்டது. பெண்களை கொண்டாடும் காலமாக மாறிக் கொண்டு இருக்கிறது. எனவே வீட்டில் பெண் குழந்தை பிறந்து விட்டால் கொண்டாட வேண்டும். பெண்கள் இன்று கல்வி, கலை, விளையாட்டுகளில் ஆண்களை விடமுன்னேறி பல சாதனைகளை படைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.பிறக்கும் போது பெண்ணாக பிறப்பவள் பல உறவுகளுடன் இந்த உலகத்தில் வாழ்கிறாள். ஒரு ஆண் கல்வி கற்றால் அந்த கல்வி அவருக்கு மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு பெண் கல்வி கற்பது என்பது அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பம், இந்த சமுதாயத்துக்கே பயன்படும்.மேலும் பெண் குழந்தை பிறந்து விட்டால் அவர்களை நிறைய படிக்க வைக்க வேண்டும். அவர்களை குறுகிய வட்டத்தில் அடைத்து விடக்கூடாது. இன்று பெண்கள் பல சாதனையாளர்களாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு வேலை இருந்தாலும் ஆண்களை விட பெண்கள் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றலை பெற்று இருக்கிறார்கள். பெண்கள் என்ன தான் சாதனைபடைத்தவர்களாக வலம் வந்தாலும் அவர்கள் ஒருவரை சார்ந்து இருக்கும் நிலை சமுதாயத்தில் இருந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் வாழ வேண்டும். பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும் என்பதில் எந்த கருத்து மாறுபாடும் இல்லை. பெற்றோர் தான் அவர்களது வாழ்க்கையில் முதல் வழிகாட்டி என்பதை மறந்து விடக்கூடாது. ஒரு பெற்றோர் இருக்கிறார்கள் என்றால் அந்த பெற்றோரை ஆண்களை விட பெண் குழந்தைகள் தான் கடைசி வரை பொறுப்போடும், கடமையோடும் பார்த்துக்கொள்வார்கள். இது நமது சமுதாயத்தில் இப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது. பெண்கள் குழந்தை பருவத்தில் கல்வி, கலை, விளையாட்டு துறையில் முத்திரை பதிக்ககூடியவர்களாக விளங்கினாலும் திருமண பந்தத்துக்குள் வரும் போது அவர்களது கல்வி, கலை, விளையாட்டு என அத்தனை தனித்திறமையும் அப்படியே மூழ்கடிக்கப்படுகிறது. திருமணத்துக்கு பிறகும் பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த இந்த சமுதாயம் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் அவர்களது குடும்பமும் இந்த சமுதாயமும் முன்னேற்றத்தை காண முடியும். திருமணத்துக்கு பின்னர் பெண்கள் படிக்க விரும்பினால் அவர்களை கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும். கல்விக்கு தடை போடக்கூடாது. இன்று பல பெண்கள் திருமணத்துக்கு பிறகு உயர்கல்வி பெற்று இன்று சாதனையாளர்களாக மாறி இருக்கிறார்கள். பெண்கள் விருப்பத்தை அவர்களது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஒரு தொழில் முனைவோராக, கல்வியாளராகவோ வர விரும்பினால் அதற்கு தடை போடாமல் அவர்களது ஆசையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளப்போகிறாயே இது எல்லாம் வேண்டாம் என அவர்களது கனவை சிதைத்து விடக் கூடாது.அதே போன்று பெண் குழந்தைகள் படித்தால் மட்டும் போதாது. சொந்த காலில் நிற்க பணமும் தேவைப்படுகிறது. எனவே பொருளாதாரத்திலும் கால்பதிக்க வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக கருத முடியும். தயக்கம், தன்னம்பிக்கை, மனதில் உறுதி இவற்றை எல்லாம் மனதில் நிறுத்திக்கொண்டு பெண்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தங்களுக்கு எதிரான தடைகளை முறியடித்து முன்னேற வேண்டும். பெண் குழந்தைகள் மீது பெற்றோர் மட்டுமல்ல அவர்களை சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பெண் குழந்தை பிறப்பை பிறவியிலேயே தடுக்கும் செயல் முன்பெல்லாம் நடந்து வந்தது. அந்த குற்ற செயல் இப்போது குறைந்து வருகிறது. அப்படி ஒரு செயல் இன்றும் நடந்து வந்தால் அதனை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும். பெண் குழந்தை பிறப்பை தடுப்பது என்பது ஒரு மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். பெண் குழந்தை பிறப்பை சந்தோஷமாக பார்க்க வேண்டும்.கொண்டாட வேண்டும். பெண்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் வகையில் ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படை, ரெயில்வே என பல துறைகளில் இன்று பெண்கள் தடம் பதித்துக்கொண்டு இருக்கிறார்கள். ராணுவத்தில் பெண்கள் அதிக அளவில் சேர வேண்டும் என சமீபத்தில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பெண்கள் அதிக அளவு ராணுவத்தில் சேர வேண்டும். விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா போன்று ஒவ்வொரு பெண்களும் ஒரு வீராங்கனையாக வர வேண்டும். தன்னம்பிக்கை, துணிச்சல், திறன் மேம்பாடு போன்றவற்றை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். பெண்ணை தாயாக மதிக்கும் இந்த சமுதாயத்தில் பெண் குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. படிக்கிற இடத்திலும் சரி அல்லது பணி செய்யும் எல்லா இடங்களிலும் சரி பெண்களுக்கு பாலியல் ரீதியாக வரும் துன்புறுத்தல், கொடுமைகள் களையப்படவேண்டும். அத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக தண்டிக்க வேண்டும். அப்போது தான் பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் குறையும். மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ குற்றம் இழைப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இந்த சமுதாயத்துக்காகவே படைக்கப்பட்ட பெண்ணினம் தன்னை மட்டும் கவனிக்க தவறி விடும். எனவே எல்லா பெண்களும், பெண் குழந்தைகளும் தங்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும். தங்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்றால் பெண்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டும். பெண்கள் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மகாத்மா காந்தியடிகள் நமது நாட்டில் கிராமம் முன்னேற வேண்டும் விரும்பினார். கிராமமாக இருந்தாலும் நகரத்தின் முன்னேற்றமாக இருந்தாலும் அது பெண்கள் முன்னேற்றத்தை பொறுத்தே அமையும்.பெண்ணை இந்த உலகத்தின் பூமியாகவும், கடவுளாகவும், நதியாகவும் சித்தரித்து கொண்டாடும் நாம் பெண்ணினத்துக்கு துரோகம் இழைப்பதை விட்டு விட்டு பெண்மையை போற்ற உறுதிமொழி ஏற்போம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts