Friday, 6 March 2020

பாரம்பரிய மீன்பிடி தொழிலுக்கு தேவை நவீன தொழில்நுட்பம்...

மா.இளங்கோ, தலைவர், தேசிய மீனவர் பேரவை .

உலகின் எல்லா நாடுகளிலும் பாரம்பரிய பழங்குடி இனத்தின் பூர்விக தொழில் என்பது மீன்பிடித்தலும், கால்நடை வளர்த்தலுடன் கூடிய விவசாயமும்தான்.

இந்தியாவின் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 13 கடற்கரை மாநிலங்களில் வாழும் மீனவர்கள், 37 மாநிலங்களில் வாழும் உள்நாட்டு மீனவர்கள் போன்ற அனைவரும் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். கட்டுமரம், பாரம்பரிய படகு மற்றும் வலைகளைக் கொண்டு பாரம்பரிய முறையில் மீன் பிடித்து வந்த மீனவர்களுக்கு 1960-ம் ஆண்டுகளில் தமிழகத்திலும், இந்தியாவின் பிற கடற்கரை மாநிலங்களிலும் விசைப்படகு அறிமுகப்படுத்தப்பட்டது. நார்வே நாட்டின் விசைப்படகு தொழில்நுட்பம் பெரிய அளவில் நமது நாட்டில் பரவலாக்கப்பட்டது.

இத்தகைய விசைப்படகு மற்றும் நைலான் வலை பயன்பாடு அதிகரிக்கப்பட்ட போது மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு 33 சதவீதம் மானிய உதவி அளித்து ஊக்குவித்தது. பின்னர் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டதால் இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடு, குஜராத், மராட்டியம் போன்ற மாநிலங்களில் ஏராளமானோர் எந்திர மயமாக்கப்பட்ட விசைப்படகுகளைக் கொண்டு தொழில் செய்கின்றனர்.

ஆனால் இன்றும் ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் பெரும்பாலோர் பாரம்பரிய படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி மொத்த மீனவர்களில் 4.8 சதவீதம் பேர் மட்டும் எந்திர மயமாக்கப்பட்ட விசைப்படகை பயன்படுத்துகின்றனர். மற்றொரு 4.8 சதவீதம் பேர் மோட்டார் பொருத்தப்பட்ட சிறு பைபர் படகுகளை பயன்படுத்துகின்றனர். மீதம் உள்ளவர்களில் பெரும்பகுதியினர் எந்திரமோ, மோட்டாரோ பொருத்தப்படாத மரத்திலான கட்டுமரம், பைபர் கட்டுமரம் போன்றவைகளைக் கொண்டு பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

மீனவ குடும்பங்களால் கடந்த 72 ஆண்டுகளில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு சரியான அடிப்படை கல்வியை வழங்குவதில்கூட நாட்டம் செலுத்தியது இல்லை. முறையான உயர்கல்வி பெற இயலாததால் இதுவரை அரசு உயர் பதவிகளை மீனவ சமுதாய கடந்த கால தலைமுறையினரும், இன்றைய புதிய தலைமுறையினரும் அடையவில்லை, அடைய முடியவில்லை.

அரசியல் களத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் தேசிய, மாநில, மாவட்ட தலைவர்களாக மீனவர்களில் 1 சதவீதம் பேர் கூட இடம் பெற்றதில்லை.

மீனவர்கள் வாழ்வு முன்னேற அவர்களுடைய அடிப்படைத் தொழில் வளர்ச்சிபெற கடல்வளம் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். தேசிய மீனவர் பேரவை உள்ளிட்ட பல்வேறு மீனவ அமைப்புகள் வெளிநாட்டு படகுகளுக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி நீண்டகாலமாக போராடி வந்தனர்.

நாம் எடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக வெளிநாட்டு மீன்பிடி கலங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பெர்மிட்டுகளும் 2017-ம் ஆண்டில் மத்திய அமைச்சரால் ரத்து செய்யப்பட்டது.

இந்திய பாரம்பரிய மீனவர்கள் மட்டுமே ஆழ்கடல் சூறை மீன் பிடிப்பில் அனுமதிக்கப்பட வேண்டும், அதிலும் பெரிய அளவிலான மீன்பிடி படகுகளை உருவாக்க 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என்ற நமது கோரிக்கை ஏற்கப்பட்டு அத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

படகுகளின் கட்டுமான செலவினம் கூடுதல் ஆவதால் இத்திட்டம் இதுவரை போதிய முக்கியத்துவம் பெற முடியவில்லை. இத்திட்டத்தினால் இன்னும் உரிய பயன்பெற இயலவில்லை.

அண்மைக்கடலில், ஆழ்கடலில் பிடிக்கப்படும் மீன்கள் 1 சதவீதம்கூட கெடாமல் “பிரஷ்” ஆக கரைக்கு கொண்டுவந்து சேர்க்கப்படுவதற்கு உரிய நவீன தொழில்நுட்பங்கள் தற்போது மேலை நாடுகளில் உள்ளது. தற்போது ஆழ்கடலில் பிடிக்கப்படும் மீன்கள் 60 சதவீதத்துக்கு மேல் கெட்டுப்போன நிலையில்தான் கரைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் ரூ.35 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி கிடைக்கிறது என்றால் இன்னும் பலமடங்கு கூடுதலான மீன்கள் தரமானதாக கரைக்கு கொண்டு வரப்பட்டால் சுமார் ரூ.3 லட்சம் கோடி அன்னிய செலாவணி கிடைக்க வாய்ப்புள்ளது.

மக்களின் உணவு தேவையில் 60 சதவீதத்தை விவசாய விளை பொருட்கள் தந்தாலும், 40 சதவீத உணவு அசைவமாகவே உள்ளன. அசைவ உணவில் மீன் தவிர்த்த மற்றவை கொழுப்புச் சத்து மிகுந்ததாகவும், உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாகவும் இருப்பதாக கருதி பெரும்பான்மை மக்கள் அவற்றை தவிர்த்து வருகின்றனர். அதனால் குறைந்த விலையில் அதிக புரதச் சத்துக்களுடன் கிடைக்கும் கடல் உணவை விரும்பி சாப்பிடுவதில் ஏழைகள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையிலான அனைத்துவகை அசைவ பிரியர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

உணவுத் தேவையை பூர்த்திசெய்ய கூடுதலாக மீன்களை கடலில் இருந்து கரைக்கு கொண்டுவந்து சேர்க்க வேண்டும். இதனால் தற்போது மீன்வளம் மூலம் கிடைக்கும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அளவு 1.1 சதவீதத்திலிருந்து மிக அதிக அளவு கூடுதலாவதற்கும், விவசாய உள்நாட்டு உற்பத்தியில் மீன்உற்பத்தி 5.4 சதவீதமாக உள்ளதை கூடுதலாக்குவதற்கும் வாய்ப்புள்ளது. டீசல் செலவை குறைப்பதற்கான நவீன வெளிநாட்டு தொழில்நுட்பம் கொண்ட இந்திய தயாரிப்பு கருவி அனைத்து விசைப்படகு மீனவர்களுக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது ஜப்பான் நாட்டின் அதிநவீன “ஹைபிரிட் ஐஸ்” தொழில்நுட்பம், 200 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் ஆழ்கடலில் உள்ள மீனவர்களை தொடர்பு கொள்ளும் தென்கொரியா நாட்டின் அதி நவீன தகவல் தொடர்பு வசதி, சீனா கண்டுபிடிப்பான படகில் வைத்து உப்புநீரில் ஐஸ் தயாரிக்கும் ‘மினி ஐஸ்’ உற்பத்தி கருவி போன்றவற்றை பாரம்பரிய மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

புதிய லித்தியம் ஐயோன் பேட்டரியில் இயங்கும் மீன் விற்பனை இருசக்கர, மூன்றுசக்கர வாகனங்கள் மீனவ பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

அத்தகைய தொழில் நுட்பங்களை குறைந்தபட்சம் 50 சதவீத மானியத்துடனும், 50 சதவீத கடனுதவியுடனும் மீனவர்களுக்கு அரசுகள் வழங்க வேண்டும் என்பது தான் தற்போதைய எதிர்பார்ப்பு. மீன்வள அமைச்சகத்துக்கு தனி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் நவீன விஞ்ஞான மேலைநாட்டு தொழில் நுட்பங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் தயாரித்து இந்திய மீனவர்களுக்கு வழங்க முடியும்.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடலில் மீன்வளத்தை பலமடங்கு கூடுதலாக அறுவடை செய்வதால் மீன்பிடி தொழிலின் மூலம் நாட்டின் ஜி.டி.பி. யின் பங்களிப்பை கூடுதலாக்க முடியும். ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவணி வருவாய் பல மடங்கு அதிகரிக்கும். மீனவர்களின் வாழ்வு ஒளிமயமாகும். பொதுமக்களின் உணவு பாதுகாப்புக்கு உதவ முடியும். உண்மையான நீலப்புரட்சி ஏற்படும். இவை அத்தனையும் நிதி மந்திரியின் கரங்களில் உள்ளது.

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், உற்பத்திதுறை, கட்டுமானத்துறை உள்ளிட்ட பல துறைகளில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதுபோல், மீன்வளத்துறைக்கு சிறப்பு நிதி வழங்கி பாரம்பரிய மீனவர்களுக்கு மானியத்துடன் குறைந்த வட்டிக்கு கடன் வழங்கி, மீன்வளத்துறையிலும் நவீன நீலப்புரட்சியை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்ப்போம்.

No comments:

Popular Posts