Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ஆரோக்கிய இந்தியாவை உருவாக்குவதே லட்சியம்

ஆரோக்கிய இந்தியாவை உருவாக்குவதே லட்சியம்

டாக்டர் ஹர்சவர்தன், மத்தியமந்திரி,

சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை.

உலக மக்கள் தொகையில் 2-வது இடம் வகிக்கும் நம் நாட்டில் நம் மக்கள்தான் நமக்கு மிகப் பெரிய பலம். நமது மக்களின் முழு திறனையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் என்று அரசு உறுதியாக நம்புகிறது. இதன் காரணமாக, சுகாதாரத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளது.

சுகாதாரத்துக்காக ஆண்டு தோறும் அதிகமான தொகை செலவிடப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே செல்லும் நிலை ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நோய் காரணமாக ஏற்படும் மூன்று வகையான சுமைகள், நமக்கு மிகப்பெரும் சவாலாக அமைகிறது. முதலாவதாக, மகப்பேறு கால உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது. சிசு மரண விகிதம், தொற்றும் வகையிலான நோய்கள் நீடித்திருப்பதும் இதில் அடங்கும். இரண்டாவதாக, புற்றுநோய், நீரிழிவு மற்றும் உயர் பதற்றம் போன்ற தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதைக் கூறலாம். மூன்றாவதாக, டெங்கு, மலேரியா, காசநோய், நிபா, மஞ்சள் காமாலை, தீவிர மூளையழற்சி நோய் போன்ற கிருமிகளால் பரவும் நோய்களின் சுமை அமைகிறது.

நாட்டில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஏழை மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் கிடைக்க செய்ய வேண்டும் என்பதே பிரதமரின் கனவு. இதற்காக இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சரியாக ஓராண்டுக்கு முன்பு, ஆயுஷ்மான் பாரத் (ஆரோக்கிய இந்தியா) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 55 கோடி ஏழை எளிய மக்களுக்காக இந்த மாபெரும் திட்டம் தொடங்கப்பட்டது. ஒருங்கிணைந்த சுகாதார வசதிகள் என்ற இலக்கை அடையும் வகையில், கொண்டு வரப்பட்டது தான், ஆரோக்கிய பாரத சுகாதார பாதுகாப்பு இயக்கம்.

இதில் இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன. முதலாவதாக 1.5 லட்சம் சுகாதாரம் மற்றும் நல மையங்களை தொடங்கி அதை செயல்படுத்துவது ,,இதன் மூலம், ஒருங்கிணைந்த ஆரம்ப நிலை சுகாதார வசதிகளை மக்கள் உறுதியாக பெறமுடியும். ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் அளவுக்கு சுகாதார வசதிகளை பெறலாம். இதில், தீவிரமான நோய்களுக்காக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைகளை பெறமுடியும். ஏழை மக்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் தான் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் என்ற சுகாதார காப்பீட்டுத் திட்டம். நாட்டில் உள்ள கடைசி மனிதனுக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்ற பண்டித தீனதயாள் உபாத்யாயாவின் கனவை நிறைவேற்றுவதற்கான அழைப்புக் குரலே ஆரோக்கிய இந்தியா திட்டம்.

ஆரோக்கிய இந்தியா என்பது மாற்றத்துக்கான நடவடிக்கை. இது அனைவருக்கும், அனைத்து வயதினருக்கும் உயர்ந்தபட்ச ஆரோக்கியத்தை கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தேசிய சுகாதார கொள்கை 2017-ன் இலக்கை நிறைவேற்றுவதற்கான முயற்சியாக உள்ளது. ஆரோக்கிய இந்தியா, குறிப்பாக பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் என்பது, அரசு மருத்துவமனைகள் மற்றும் இணைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றின்மூலம், சுகாதார சேவைகளை குறைந்தகட்டணத்தில், கிடைப்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அனைத்து மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கு இது முக்கியமானதாக திகழும். ஒருங்கிணைந்த சுகாதார வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை இது அங்கீகரிக்கிறது.

பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம், மிகவும் சிறப்பான தொடக்கம். இந்தத் திட்டம், தற்போது 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருங்கிணைந்த கூட்டாட்சி கொள்கையை அதிக அளவில் பின்பற்ற வேண்டும் என்ற எங்களது கொள்கையை வெளிப்படுத்துகிறது.

பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில், மூன்றாம் நிலை சிகிச்சைக்காக இணையும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. அளவு மற்றும் தொகை அடிப்படையில் இது மேலும் அதிகரிக்கும். இந்தத் திட்டத்தின் அற்புதமான அம்சமாக, பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தை செயல்படுத்தும் எந்த மாநிலத்தையும் சேர்ந்த தகுதிவாய்ந்த நோயாளி, இந்தியாவின் எந்தப் பகுதியிலும், இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள எந்த மருத்துவமனையிலும் இலவசமாக சிகிச்சை பெற முடியும். தங்களது மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு வெளியே சுமார் 40 ஆயிரம் பேர் இதுபோன்ற சிகிச்சையைப் பெற்றுள்ளனர். உலகின் மிகப்பெரும் சுகாதார காப்பீடு உறுதியளிப்புத் திட்டமாக படிப்படியாக மாறிவருவதால், ஆரோக்கிய இந்தியா திட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச சமூகத்திடம் பெருமளவில் ஆதரவையும், பாராட்டையும் பெற்றுள்ளது. நமது நாட்டில் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக, மருத்துவத் தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மருத்துவர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் முதல்நிலை சுகாதாரப் பணியாளர்களாக வருவதற்கு அதிக அளவிலான மக்கள் முன்வரும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். மருத்துவக் கல்வித் துறையில் மைல்கல்லாக தேசிய மருத்துவ ஆணைய மசோதா திகழ்கிறது.

இது மாணவர்களின் சுமையைக் குறைக்கிறது. மருத்துவக் கல்வியின் தரம், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் நேர்மையை உறுதிப்படுத்துகிறது. அரசு துறையில் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 82 மருத்துவமனைகளை அமைப்பதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. இது மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். மேலும், நாட்டில் மருத்துவக் கல்விக்கான கட்டமைப்பை வலுப்படுத்தும். அதோடு, மருத்துவக் கல்விக்கான செலவைக் குறைக்கும். தரமான கல்வியை உறுதிப்படுத்துவதோடு, தரமான மருத்துவ வசதிகளை அதிக அளவிலான மக்களுக்கு கிடைக்கச் செய்ய வழிவகை செய்யும்.

பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில், டாக்டர்களும், பொதுமக்களும் இணைந்து, இந்த சுகாதார இயக்கத்துக்கு ஆதரவு தர வேண்டும். நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக என்னை நானே மறு அர்ப்பணிப்பு செய்கிறேன். நோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவதும், ஒவ்வொரு இந்தியருக்கும் சர்வதேச தரத்தில் மருத்துவ வசதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் எனது வாழ்க்கையின் லட்சியமாக மாறியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement