Saturday 29 September 2018

‘ஆஸ்பிரின்’ ஆபத்து!

‘ஆஸ்பிரின்’ மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்தை ஓர் ஆய்வு விவரித்துள்ளது. நல்ல உடல்நிலையில் உள்ள முதியோர்கள் ஒரு நாளைக்கு ஓர் ஆஸ்பிரின் மாத்திரையைச் சாப்பிட்டால் கடும் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்று அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. மாரடைப்பாலோ அல்லது பக்கவாதத்தாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் பயனுள்ளதாக இருப்பது குறித்து இதற்கு முந்தைய ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், நல்ல உடல்நிலையில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் எவ்வித நன்மையையும் உண்டாக்குவதில்லை என்றும், மாறாக உயிரிழப்புக்கு வித்திடும் உட்புற ரத்தப்போக்கை அவை ஏற்படுத்து வதாகவும் இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், தனக்குத் தானே மருந்து, மாத்திரை வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் களின் ரத்தம் கெட்டியாவதற்கு ஆஸ்பிரின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மீண்டும் நோய்த்தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு இது உதவும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்நிலையில், மாரடைப்பு, பக்கவாதம் தங்களைத் தாக்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சிலர் ஆஸ்பிரின் மாத்திரைகளைச் சாப்பிடுகின்றனர்.

இது உண்மையில் நோயை வராமல் தடுப்பதற்குப் பயன்படுகிறதா என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதுதொடர்பான ஆய்வுகள் மத்திய வயதுடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்டபோது, தொடர்ந்து ஆஸ்பிரின் சாப்பிடுவதால் அவர்கள் முதுமை அடையும்போது குறிப்பிடத்தக்க வகையில் உடல்நலத்துக்கு ஆபத்து அதிகரிப்பது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட, நல்ல உடல்நிலையில் உள்ள 19 ஆயிரத்து 114 பேர்களிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் பாதிப் பேருக்கு குறைந்த அளவிலான ஆஸ்பிரின் ஐந்து ஆண்டுகளுக்குக் கொடுக்கப்பட்டது. நல்ல உடல்நிலை கொண்டவர்களிடம் ஆஸ்பிரின் மாத்திரைகள் இதயம் சார்ந்த பிரச்சினைகளையோ அல்லது எவ்வித நன்மைகளையோ தருவதில்லை என்றும், மாறாக அவை உட்புற ரத்தப்போக்கை அதிகரிப்பதாகவும் நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகள் கூறுகின்றன.

‘‘இதன் மூலம், குறைந்த அளவிலான ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல்நலம் சார்ந்த பிரச்சினையைத் தவிர்க்கலாம் என்ற உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கானோரின் எண்ணம் தவறானது என்பதும், அதனால் ஒரு பயனும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது’’ என்று மொனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் மெக்நீல் கூறுகிறார். ‘‘நல்ல உடல்நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் மாத்திரைகளைப் பரிந்துரைக்கலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்துவரும் மருத்துவர்களுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும்’’ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், இந்த ஆராய்ச்சியில் புற்றுநோயின் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது களநிலவரத்துக்கு மாறாக உள்ளதால் இதுகுறித்து மேலதிகத் தகவல்களைத் திரட்ட வேண்டியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மாரடைப்பாலோ அல்லது பக்கவாதத்தாலோ பாதிக்கப்பட்டு ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டு வருபவர்கள் தங்களது மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து அவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மருந்துப் பயன்பாட்டைக் குறைக்கும்படிதான் நம் முன்னோர்கள் முற்காலத்திலேயே கூறியுள்ளனர்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts