Tuesday, 10 March 2020

கொரோனாவும், பாதிக்கப்பட்ட பொருளாதாரமும்

கொரோனாவும், பாதிக்கப்பட்ட பொருளாதாரமும்

டாக்டர் சோம வள்ளியப்பன்.

சீ னாவில் தொடங்கி அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், இந்தியா என உலகில் இருக்கும் பல்வேறு பெரிய பங்குச்சந்தைகளின் குறியீட்டு எண்கள் ஒரே நாளில் மூன்று, நான்கு சதவீத வீழ்ச்சி என பல நாட்களாக தொடர்ந்து சரிந்துகொண்டு இருக்கின்றன. நல்ல லாபம் தரும் நிறுவனப் பங்குகளின் விலைகளும் தலை குப்புற விழுந்துகொண்டு இருக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக அமெரிக்காவில் வேலை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்பது போன்ற சந்தைக்கு சாதகமான புள்ளி விவரங்களையும், பங்குச்சந்தைகள் சட்டை செய்யவில்லை. தொடர்ந்து சரிகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் முதலீட்டாளர்களின் பணம், பல லட்சம் கோடி ரூபாய்கள் காணாமல் போய்விட்டது. இழப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து இறங்கிக்கொண்டே போகிறது. நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தியைக் குறைக்கிறோம் என்று என்று கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான ‘ஓபெக்’ அறிவித்தபின்பும் விலையில் ஸ்திரத்தன்மை வருவதாகத் தெரியவில்லை. 30 சதவீதம் குறைந்து, பீப்பாய் 32 டாலருக்கும் கீழ் போய் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. டாலருக்கு எதிராக இந்தியா உள்பட பல்வேறு தேசங்களின் பண மதிப்புகள் தொடர்ந்து குறைகின்றன. பிப்ரவரி மாதம் 71 ரூபாய் ஆக இருந்த அமெரிக்க டாலர் விலை இப்போது 74. ஆக அமெரிக்காவில் 2008-ம் ஆண்டில் வந்ததுபோல இப்போதும் பொருளதார பெருமந்தம் வந்துவிடுமோ என்ற அச்சத்திலும், தவிர்க்கும் நடவடிக்கையாகவும், யாரும் கேட்காமலேயே அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை அரை சதவீதம் குறைத்திருக்கிறது. அமெரிக்க அரசு 7.8 பில்லியன் டாலர் அளவு சிறப்பு நிதிக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஐரோப்பிய யூனியனின் ரிசர்வ் வங்கி அதன் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சீன அரசு, 2008-ல் செய்தது போல மீண்டும் 450 பில்லியன் டாலர் அளவு கட்டுமான செலவுகள் செய்து நிலைமையை சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் தொடர்ந்து உயர்கின்றன. ஒரு வார காலத்திற்குள் 5 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஜப்பானில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படுமா? என்கிற சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. ஒன்பது வெவ்வேறு நகரங்களில் 56 போட்டிகளாக நடக்கவிருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டு, ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் இல்லாத ‘குளோசுடு டோர்’ பந்தயங்களாக நடத்தப்பட்டு, தொலைக்காட்சிகளில் காட்டப்படுமோ என்கிற யூகங்கள் எழுந்திருக்கின்றன.

இவற்றுக்கு எல்லாம் யார் அல்லது எது காரணம்?

ஒரே ஒரு காரணம்தான் இவ்வளவு நாடுகளையும், பெரும் அரசாங்கங்களையும், இத்தனை சந்தைகளையும், முதலீட்டாளர்களையும், உற்பத்தியாளர்ளையும், வியாபாரிகளையும் மிரட்டிக்கொண்டு இருக்கிறது. அதற்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர் கோவிட்19. ஆம், கொரோனா வைரசுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர் கோவிட்19.

சீனாவின் உகான் என்ற மாகாணத்தில் அமைந்திருக்கும் இறந்த மற்றும் உயிரோடிருக்கும் விலங்குகள், பறவைகள், மீன்கள் விற்பனை செய்யப்படும் சந்தையில் இருந்து கிளம்பியிருக்கிறது, இந்த கோவிட்19 வைரஸ்.

சீனாவில் தொடங்கி தென்கொரியா, இத்தாலி, ஈரான், சிங்கப்பூர் என்று நகர்ந்து இப்போது அமெரிக்கா, இந்தியா உள்பட 108 நாடுகளில் வசிக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரைத் தாக்கியிருக்கிறது. இதுவரை சுமார் 3,840 பேர் நோய்க்குப் பலியாகிவிட்டார்கள்.

இந்த புதிய வைரஸ் தாக்குதல் வராமல் தடுக்கும் மருந்து மற்றும் வந்தபின் சரிசெய்யும் மருந்துகள் இல்லை. கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. பரவாமல் தடுப்பதே இப்போதைக்கு இதைக் கட்டுப்படுத்தும் ஒரேவழியாக இருக்கிறது.

அதனால் சீனாவில் பாதிப்பு அதிகம் இருக்கும் மாவட்டங்களில், மக்கள் கூடும் இடங்களுக்கு வரவேண்டாம் என்று கட்டுப்பாடுகள் விதித்தார்கள். , பல பெரிய உற்பத்திக்கூடங்களை மூடினார்கள். கல்விக் கூடங்களுக்கு தொடர் விடுமுறை அளித்தார்கள். பயணங்களைத் தவிர்க்க வைத்தார்கள். ஆனால், அதற்கெல்லாம் முந்தியே வைரஸ் பரவிவிட்டது.

வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருட்களும், உதிரி பாகங்களும் வேறு சில நாடுகளில் இருக்கும் தொழிற்கூடங்களில் ஒன்று சேர்க்கப்பட்டு, வேறு பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றன. உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையும் இவ்வாறே பல்வேறு நாடுகளில் இருந்து வேறுபல நாடுகளுக்குப் போகின்றன, வருகின்றன. இவற்றால் நாள்தோறும் லட்சக்கணக்கான மனிதர்களும், கோடி டன்கள் எடையுள்ள பொருட்களும் கடல், வான் மற்றும் தரை மார்க்கமாக தேசம் விட்டு தேசம் போய்வந்து கொண்டே இருக்கின்றன.

இப்படிப்பட்ட நிலையில் ஓரிடத்தில் உருவாகும் தொற்றுநோய், அதுவும் வெளிப்பட்டு பல நாட்களுக்கு இன்னதென்று வெளித்தெரியாத தொற்றுநோய் சுலபமாக பல்வேறு நாடுகளுக்கும் பரவாமல் இருக்குமா? பரவிவிட்டது.

இதனால் தென்கொரியா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளிலும் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று தெரியவந்தது. நிலைமையை உணர்ந்த ஏனைய நாடுகள் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதித்திருக்கிறார்கள். ஆனாலும் அண்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களுக்கும் கோவிட்19 பரவிவிட்டது.

இந்தியாவில் உற்பத்தியாகும் பல எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல்ஸ், மருந்து பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், சீனாவில் இருந்து வரவேண்டும். இந்த வைரஸ் தாக்குதலால் சுமார் 2.1 லட்சம் கோடி ரூபாய்க்கான சீனா-இந்தியா வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டுமே குறைகின்றன.

‘டிமாண்ட்’ குறைவு மற்றும் ‘சப்ளை செயின் பாதிப்பு’ ஆகிய இரண்டு வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினைகள். இதனால் இந்தியா மட்டுமல்ல உலகின் பொருளாதாரமே பாதிக்கப்படும் என்கிற அச்சம் இருக்கிறது. 2003-ம் ஆண்டு வந்த இதேபோன்ற “சார்ஸ் வைரஸ்” தாக்குதலால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 1 சதவீதம் குறைந்தது. உலக அளவில் 40 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. அப்போது 2003-ல் உலக பொருளாதாரத்தில் சீனா 4 சதவீத பங்கு மட்டுமே வகித்தது. இப்போது 16 சதவீத பங்கு வகிக்கிறது.

வைரஸ் பயத்தால் மக்கள் பொழுது போக்குகள், பயணம் மற்றும் ஏனைய செலவுகளையும் குறைக்கிறார்கள். பல்வேறு உற்பத்திக்கூடங்கள், கல்வி நிறுவனங்கள், விமான சேவை நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் வியாபாரம் இன்றி மூடிக்கிடக்கின்றன. வியாபாரங்களும், பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றன. ‘இந்த நோயின் தாக்கத்தால் ஆசியா மற்றும் உலக அளவில் உள்நாட்டு தேவைகள், சுற்றுலா மற்றும் வியாபாரப் பயணங்கள் குறைந்து, அதனால் சுமார் 5 லட்சத்து, 69 ஆயிரத்து 809 கோடி ரூபாய் முதல் 25 லட்சத்து, 67 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வரை பொருளதார இழப்பு ஏற்படும்’ என்று ‘ஏசியன் டெவலப்மெண்ட் பேங்க்’ கணிப்பு வெளியிட்டிருக்கிறது.

இவை எல்லாவற்றையும் விட மோசமானது, இந்த வைரசுக்கு தடுப்பு மற்றும் தீர்க்கும் மருந்து இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்பதும், இது இன்னும் எவ்வளவு நபர்களுக்கு பரவி மேலும் என்ன தாக்கம் கொடுக்கும் என்றும் புரிந்துகொள்ள முடியாத ‘அன்சர்ட்டன்’ நிலையும்தான். தங்கம், கச்சா எண்ணெய், பங்குகள், டாலர், ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி என்று பல்வேறு சந்தைகளில் நிலவும் இவ்வளவு பதற்றத்திற்கும், பெரும் ஏற்ற இறக்கங்களுக்கும் காரணம், இந்த ‘நிச்சயமற்றதன்மை’ தான்.

இப்படிப்பட்ட சிக்கல்கள் வந்தால் உற்பத்தி, வியாபாரம், முதலீடுகள், பொருளாதாரம் போன்றவை பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. அவற்றைப் பின்னால் சரிசெய்துவிட முடியும். ஆனால், சரிசெய்யவே முடியாதது உயிரிழப்புகளைத்தான். எனவே அரசுகளும், அமைப்புகளும் இப்போதைக்கு கோவிட்19 வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மற்றவற்றைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Popular Posts