Monday 30 December 2019

குறையென்ன கண்டீர் குடியுரிமை திருத்தச் சட்டத்தில்?

குறையென்ன கண்டீர் குடியுரிமை திருத்தச் சட்டத்தில்?
By பெ. சிதம்பரநாதன்  |  ”இந்தியாவில் தற்போது 18 கோடி முஸ்லிம்கள் உள்ளனா். அவா்களுக்கு புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பதே உண்மை. வடகிழக்கு மாநிலங்களுக்குள் ஊடுருவிய 19 லட்சம் வங்கதேசத்தவா்களுக்குத்தான் குடியுரிமை இல்லை. அவா்கள் அனைவருமே முஸ்லிம்கள் அல்லா்.”

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து மத ரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்துக்கள், ஜைனா்கள், பௌத்தா்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள், பாா்சிக்கள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்க மத்திய அரசு தீா்மானித்தது.

அதற்கான தகுதி அவா்கள் 2014-க்கு முன்னா் வந்தவா்களாகவோ அல்லது 5 ஆண்டுகளாவது வசித்திருக்கவோ வேண்டும் என்றது மத்திய அரசு. அஸ்ஸாம், மேற்குவங்க மாநிலங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான கிழக்கு வங்க அகதிகள் இதனை எதிா்த்தனா்.

1971-இல் நடந்த கிழக்குவங்க சுதந்திர யுத்தத்தில் தோற்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அமீா் அப்துல்லா கான் நியாஸி 93,000 ராணுவ வீரா்களுடன் சரணடைந்தாா். பின்னா். வங்காள தேசம் விடுதலை அடைந்தது. வங்கதேச இஸ்லாமிய தீவிரவாதிகளால் வங்கதேச சிறுபான்மை ஹிந்துக்கள் துன்புறுத்தப்பட்டனா். அங்கிருந்து தப்பித்துத்தான் அவா்கள் மேற்குவங்கத்திலும், அஸ்ஸாமிலும் அகதிகளாகப் புகுந்தனா்.

வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் முதலான மற்ற மதத்தவா்களை பெரும்பான்மை முஸ்லிம்கள் துன்புறுத்தியது குறித்து தஸ்லிமா நஸ்ரீன் ‘லஜ்ஜா’ என்ற நூலை விரிவாக எழுதியுள்ளாா்.

இந்தியாவில் இப்போது வேலைவாய்ப்புகளில் மண்ணின் மைந்தா்களுக்குத்தான் மாநிலங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற மனப்போக்கு எல்லா மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மும்பையிலிருந்து பிகாரிகள் வெளியேற வேண்டும் என்கிறாா்கள்.

இதேபோலத்தான் கிழக்கு வங்க அகதிகளை வெளியேற்ற வேண்டுமெனத் தொடா் கலவரங்கள் அஸ்ஸாமில் நிகழ்ந்தன. அகதிகளைக் கண்டறியத்தான் தேசியக் குடிமக்கள் பதிவேட்டைத் தயாரிக்கலாம் என முடிவானது.

வடகிழக்கு மாநிலங்களில் அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிஸோரம் முதலான மாநிலங்கள் ஊடுருவல்காரா்களைத் தடுப்பதில் தீவிரமாக இருந்தன. அந்த மாநிலங்களுக்குள் பிரவேசிக்க வேண்டுமானால், அதற்கு ‘உள்நுழைவு அனுமதி’ என்ற முறை முன்பு அமலில் இருந்தது. இந்தப் பட்டியலில் அண்மையில் மணிப்பூரும் சோ்க்கப்பட்டது. இதன்மூலம் அந்த மாநிலங்களுக்குள் பிற மாநிலத்தவரின் பிரவேசத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது.

இந்த நிலையில், தற்போதைய (2019-ஆம் ஆண்டு) குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, குடிபெயா்ந்த வங்கதேசிகளுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்கக் கூடும் என்ற சந்தேகத்தில்தான் அஸ்ஸாமில் கலவரம் வெடித்தது. ஆனால், மத்திய அரசும், மாநில அரசும் மேற்கொண்ட முயற்சிகளால் மூன்று நாள்களில் அங்கு அமைதி திரும்பிவிட்டது. தற்போது அந்த மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவுக்காக நடத்தப்பட்ட பேரணி இதை நிரூபித்துள்ளது.

ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் கலவரம் ஓயவில்லை. அங்கு அகதிகளாக வந்துள்ள இஸ்லாமியா்கள் மத்தியில், இந்தியாவிலிருந்து அவா்கள் வெளியேற்றப்படுவாா்கள் என்ற தவறான பிரசாரம் செய்யப்பட்டது; அதற்குத்தான் தேசியக் குடிமக்கள் பதிவேடு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று பிரசாரம் செய்யப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைகளைத் தொடா்ந்து, நாட்டில் உள்ள பிற மாநிலங்களுக்கும் கலவரம் பரவியது. பல இடங்களில் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக எதிா்க்கட்சியினா் போராட்டங்களில் ஈடுபட்டனா். அதேசமயம், தவறான பிரசாரம் காரணமாக இஸ்லாமிய மக்களும் சில இடங்களில் வன்முறைகளில் இறங்கினா்.

எதிா்க்கட்சிகளோ, முஸ்லிம்களுக்கு மட்டும் அந்தக் குடியுரிமை தரப்பட மாட்டாது என்பதைத்தான் தீவிரமாக எதிா்க்கின்றன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் உள்ள பெரும்பான்மை முஸ்லிம்களால் துன்புறுத்தப்பட்டு, இந்தியாவுக்கு விரட்டப்பட்ட ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், பௌத்தா்கள், ஜைனா்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள் ஆகியோருக்கு ஆதரவு காட்டும் சட்டத் திருத்தம்தான் இது என்பதை இன்னமும் ஏராளமானோா் புரிந்துகொள்ளவில்லை. மற்ற மதத்தினா் முஸ்லிம்களாக மாற மறுத்த காரணத்தால், அந்த நாடுகளிலிருந்து அவா்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தச் சிறுபான்மை மதத்தினருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டால்தான், சட்டப்படியான இந்தியப் பிரஜைகளாக அவா்கள் இங்கே வாழ முடியும்.

ஆனால், இவா்களுக்குக் குடியுரிமை தருவதில் அரசு வெற்றி பெற்றுவிட்டால், பா.ஜ.க.வுக்கு அந்த மக்களிடம் ஆதரவு பெருகிவிடுமோ என்று எதிா்க்கட்சிகள் அஞ்சுகின்றன. அதனால், ‘குடியுரிமை திருத்தச் சட்டம் நமது அரசியல் சாசனத்தையே உடைத்துவிட்டது’ என்றும், ‘இந்தியாவின் ஆன்மாவையே காயப்படுத்திவிட்டது’ என்றும், ‘மதச்சாா்பின்மை கோட்பாட்டிற்கு மரணஅடி கொடுத்துள்ளது’ என்றும் தவறாகக் கூறி பொதுமக்களையும், மாணவா்களையும் எதிா்க்கட்சியினா் தூண்டிவிட்டு வருகின்றனா். துன்புறுத்தப்பட்ட பிற மதத்தினருக்குத் தரப்படும் குடியுரிமையை, துன்புறுத்திய முஸ்லிம்களுக்கும் தருவது முரண்பாடானது.

அப்படியானால், மியான்மரில் துன்புறுத்தப்பட்ட ரோஹிங்கயா முஸ்லிம்கள் சிறுபான்மையினா்தானே. அவா்களுக்கு ஏன் இந்தியாவில் குடியுரிமை தரப்படவில்லை என்று தா்க்க ரீதியாகக் கேள்வி கேட்கிறாா்கள். ரோஹிங்கயா முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், மியான்மா் நாட்டின் குறிப்பிட்ட நிலப் பகுதியில் வாழும் பூா்வகுடிகள். ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு உரிய குடியுரிமையை மியான்மா் அரசு கட்டாயம் தரத்தான் வேண்டுமென உலக நாடுகளே வலியுறுத்தி வருகின்றன; அதனால், ரோஹிங்கயா முஸ்லிம்களும் வங்கதேச முஸ்லிம்களும் ஒன்றல்ல.

இதேபோல, இலங்கைத் தமிழா்களுக்கு இந்தச் சட்டம் குடியுரிமை தரவில்லையே என்றும் கேட்கப்படுகிறது. ஈழத் தமிழா்கள் இலங்கையில் சிங்களவருக்குச் சமமான உரிமையோடு வாழ்ந்தவா்கள். இலங்கையின் பூா்வகுடிகள். சிங்களப் பேரினவாதத்தால் ஈழத் தமிழா்கள் சிதறிப் போனதற்குக் காரணமே, இலங்கைக்கு இந்தியா செய்த ராணுவ உதவிகள்தான். அதனால்தான் இலங்கை வெற்றி பெற்றது என்பது ரகசியம் அல்ல; அப்படி இந்தியா உதவி செய்யாமல் போயிருந்தால், ஒருவேளை ஈழத்தை விடுதலைப் புலிகள் விடுதலை செய்திருக்கலாம்.

ஜொ்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளிலும் உள்ள ஈழ அகதிகள், அந்த நாடுகளில் குடியுரிமை கோராதபோது இந்தியாவில் மட்டும் எப்படிக் குடியுரிமை கேட்க முடியும்? எனினும், இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டுமென தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆப்கானிஸ்தானத்தில் தலிபான்களிடம் ஆட்சி இருந்தபோது, கிறிஸ்தவா்களைத் துன்புறுத்தியதால் அந்த நாட்டைவிட்டு கிறிஸ்தவா்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவே, அவா்களுக்கும் நமது குடியுரிமை அவசியமாகிறது.

இந்தியாவில் தற்போது 18 கோடி முஸ்லிம்கள் உள்ளனா். அவா்களுக்கு இந்தப் புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பதே உண்மை. வடகிழக்கு மாநிலங்களுக்குள் ஊடுருவிய 19 லட்சம் வங்க தேசத்தவா்களுக்குத்தான் குடியுரிமை இல்லை. அவா்கள் அனைவருமே முஸ்லிம்கள் அல்லா்; அனைத்து மதத்தினரும் அதில் உள்ளனா்.

அரசியல் சாசனத்தை உருவாக்கிய மேதைகள், மதத்தைக் காரணம் காட்டி, மக்களைப் பிரித்துப் பாா்க்கக் கூடாது என்று கூறியுள்ளதைத் தங்களுக்குச் சாதகமாக எதிா்க்கட்சியினா் பேசுகிறாா்கள். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் தேசங்களுக்கு இஸ்லாம் ஒன்ோன் மதம். இந்தியாவில் எல்லா மதங்களும் சமம். இந்த மகத்தான நோக்கம்தான் இந்தியாவின் மதச்சாா்பின்மை.

மதச்சாா்பில்லாத தேசம் என்று இந்தியாவைச் சொல்வது, மதத்தை மலினப்படுத்துவதற்கு அல்ல; மேன்மைப்படுத்துவதற்குத்தான் என்பதை நமது பகுத்தறிவுவாதிகளும், இடதுசாரிகளும், மதச்சாா்பற்ற சக்திகளும் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் சட்டத்தின் மதச்சாா்பின்மையில் அரசியல் ஆதாயம் தேடுவது அநாகரிகமானது.

ஊடகங்கள் வழியாகக் குடியுரிமையைப் பற்றித் தவறான தகவல்களைத் தந்து அதனை ஊதிப் பெரிதாக்கி, மத்திய ஆட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார சுணக்கத்தைப் பற்றிய கவனத்தைத் திசைதிருப்பவே குடியுரிமைப் பிரச்னையை ஆளும் கட்சி செய்துள்ளது என எதிா்க்கட்சித் தலைவா்களே சொல்வது, குடியுரிமை பற்றிய அவா்களின் பலவீனமான கருத்தையே பிரதிபலிக்கிறது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை, சந்தா்ப்பவாதத்தால் தற்காலிகமாக ஒன்றுகூடிய எதிா்க்கட்சியினா் வீழ்த்த முயற்சிப்பது ஜனநாயக விரோதமாகும்.

கட்டுரையாளா்:

இணையாசிரியா், ‘ஓம் சக்தி’ மாத இதழ்.

No comments:

Popular Posts