Saturday, 1 February 2020

கோவில்களில் தமிழைப் புகுத்தியவர் ஓமந்தூரார்

கோவில்களில் தமிழைப் புகுத்தியவர் ஓமந்தூரார் | வெ.வைத்தியலிங்கம், எம்.பி.,| முன்னாள் முதல்-அமைச்சர், புதுச்சேரி மாநிலம் | இன்று (பிப்ரவரி 1-ந்தேதி) தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்தநாள்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அடிமை இந்தியாவின் சென்னை மாகாணத்தில் பல முதல்-அமைச்சர்கள் பதவி வகித்துள்ளனர். ஆனால், 1947 மார்ச் 23-ந் தேதி சென்னை மாகாணத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார். 1947-ல் சுதந்திரம் பெற்ற போது ஆகஸ்டு 15 அன்று டெல்லி செங்கோட்டையில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து வரலாற்றுப் புகழ்மிக்க உரையை நிகழ்த்தினார். அதேநாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்-அமைச்சராக விளங்கியவர் ஓமந்தூரார்.

பல முதல்-அமைச்சர்களை தமிழகம் பெற்றிருந்தாலும் ஓமந்தூராருக்கு தனி சிறப்பும், பெருமையும் உண்டு. அவர் ஆட்சி செய்ததே மொத்தம் 2 ஆண்டுகள்தான். இரண்டு ஆண்டுகளில் ‘உத்தமர் ஓமந்தூரார்’ என்ற நற்பெயர் இன்றைக்கும் போற்றி பாராட்டப்படுகிறது என்று சொன்னால், அவர் எந்தளவிற்கு நேர்மையான முதல்-அமைச்சராக பணியாற்றியிருக்கிறார் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

சென்னை மாகாணத்தின் முதல்-அமைச்சராக வர வேண்டுமென்று ஓமந்தூரார் விரும்பியதில்லை. அவரை முதல்-அமைச்சராக்க வேண்டுமென்று பலர் விரும்பியதன் அடிப்படையிலேயே சென்னை மாகாணத்தின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அவர் முதல்-அமைச்சராக இருந்த போது, சென்னை மாகாணத்தில் 102 ஐ.சி.எஸ். அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அதிகாரத்தின் உச்சாணியில் இருந்து பணியாற்றியவர்கள்.

முதல்-அமைச்சருக்கு ஐ.சி.எஸ். அதிகாரிகள்தான் அந்தரங்க செயலாளர்களாக நியமிக்கப்படுவார்கள். ஆனால், அந்த நடைமுறைக்கு மாறாக மதுரை மாவட்டம், பெரியகுளத்தில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஏ.அழகிரிசாமியை அந்தரங்க செயலாளராக ஓமந்தூரார் நியமனம் செய்தார். இப்பொறுப்பில் நியமிக்கப்படுகிற முதல் தமிழன் என்கிற பெருமை இவருக்கு உண்டு. இந்த நடவடிக்கை ஐ.சி.எஸ். அதிகார வர்க்கத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதுவே அவரது நிர்வாக திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாகவும் அமைந்தது.

ஒரு கிராமவாசி, விவசாயி, உயர்கல்வி பயிலாதவர், அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே உள்ள ஒருவர் எப்படி அரசு நிர்வாகத்தை சிறப்பாக நடத்தினார் என்பதற்கு இதைப்போன்ற பல சான்றுகளை கூற முடியும்.

ஓமந்தூரார் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது மதுவிலக்கு 8 மாவட்டங்களில் மட்டுமே இருந்தது. இதனால் மற்ற மாவட்டங்களும் பாதிக்கப்பட்டதால் எஞ்சிய 17 மாவட்டங்களிலும் ஒரே நாளில் மதுவிலக்கை அமல்படுத்திய பெருமை ஓமந்தூராருக்கு உண்டு. இதில் நிதி ஆதாரம் குறித்து அவர் கவலைப்படவில்லை. இந்தியாவுடன் ஐதராபாத் சமஸ்தானத்தை இணைப்பதற்கு சென்னை மாகாணத்தில் இருந்து ராணுவத்தை அனுப்பி உதவினார். அரிஜனங்களின் ஆலய பிரவேசத்தில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டவர். இதன் தொடக்கமாக தமது சொந்த ஊரிலேயே அதை செய்து காட்டியவர்.

கோவில் குடமுழுக்கு நிகழ்வுக்கு அழைக்கப்பட்டால் அவருடைய முன்நிபந்தனை அரிஜன ஆலய பிரவேசம் இருக்க வேண்டும் என்பதே. திண்டிவனம் சட்டமன்ற ரிசர்வ் தொகுதியில் தேர்வு பெற்ற குலசேகர தாஸ் என்பவரை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக நியமித்து அரிஜனங்களின் ஆலய பிரவேசத்திற்கு மகுடம் சூட்டிய பெருமை இவருக்கு உண்டு.

தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த ஜமீன்தாரி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தவர். கோவில் சொத்துகள் தவறாக பயன்படுத்துவது, சில சுயநல சக்திகளால் ஆக்கிரமிக்கப்படுவது, கோவில் சொத்துகளை கொள்ளையடிப்பது போன்றவற்றிற்கு முடிவுகட்டுகிற வகையில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் சட்டம் கொண்டு வந்தார். இதன்மூலம் கோவில் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை சென்னை மாகாண அரசு எடுத்துக் கொண்டது. புராதான கோவில்கள், மடங்கள், தர்ம ஸ்தானங்கள் இதன்மூலம் பாதுகாக்கப்பட்டன.

இந்து சமய அறநிலையத்துறையின் மூலமாக, அனைத்து கோவில்களிலும் வழிபாடு தமிழில் நடத்தப்பட வேண்டும். இறைவன், இறைவி பெயர்கள் தமிழில் எழுதப்பட வேண்டும். கோவில்களில் அனைத்து பயன்பாடுகளும் தமிழிலேயே இடம்பெற வேண்டும் என்று கோவில்களில் தமிழைப் புகுத்தியவர் ஓமந்தூரார்.

நெடுங்காலமாக புரையோடிப் போயிருந்த தேவதாசி முறையை ஒழிப்பதற்காக சட்டம் கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு. இதன்மூலம் அக்காலத்தில் பெண்களிடையே நிலவிய பொட்டு கட்டுதல், கடவுளிடம் ஒப்படைத்தல் என்கிற இழிநிலையில் இருந்து மீட்டெடுக்க டாக்டர் முத்துலட்சுமி போன்றவர்கள் கடுமையாக போராடி வந்தார்கள். இதிலுள்ள நியாயத்தை புரிந்து கொண்ட ஓமந்தூரார் தேவதாசி முறையை ஒழித்து மிகப்பெரிய புரட்சியாளராக அறியப்பட்டார்.

தமிழ் மொழியின் வளர்ச்சியில் ஓமந்தூராரின் பங்கை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த மகாகவி பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்கிய பெருமை ஓமந்தூராருக்கு உண்டு. சென்னை மாகாண அரசின் அரசவை கவிஞராக ஒருவரை நியமிக்க வேண்டுமென கல்கியும், சின்ன அண்ணாமலையும் ஓமந்தூராரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்டு தேசியக் கவி நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளையை சென்னை மாகாண அரசின் முதல் ஆஸ்தான கவிஞராக நியமித்தார்.

138 ஆண்டு காலமாக பிரான்ஸ் அரசின் பிடியில் இருந்த புதுச்சேரி மாநிலத்தை விடுவிப்பதில் ஓமந்தூராருக்கு நிறைய பங்கு உண்டு. புதுச்சேரி விடுதலை இயக்கத்திற்கு பாடுபட்ட குபேர், வெங்கட சுப்பாரெட்டியார், முத்துப்பிள்ளை ஆகியோரை திண்டிவனத்தில் பாதுகாப்பாக தங்க வைத்து துணைபுரிந்தார். இதற்காக பிரதமர் நேருவிடம் வாதாடிய பெருமையும் அவருக்கு உண்டு.

மக்கள் தொண்டராக, மக்கள் பிரச்சினைகளை அறிந்து, மக்கள் முதல்வராக விளங்கியவர் ஓமந்தூரார். ஆனால், அவரை முதல்வராக தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படாத காரணத்தால் அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. பொதுவான பிரச்சினைகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் தலையிடுவதை ஏற்றுக் கொண்டவர் ஓமந்தூரார். சுயநலத்தின் அடிப்படையில் வைக்கப்படுகிற கோரிக்கைகளை அவர் முற்றிலும் புறக்கணித்த காரணத்தால் சட்டமன்ற உறுப்பினர்களிடையே எதிர்ப்பு வலுத்தது. இந்நிலையில் அவர் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை திரும்பப் பெற வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதற்கு சம்மதம் தெரிவிக்க இயலாத காரணத்தினால் பதவி விலகுவதென முடிவெடுத்தார். இதுகுறித்து ஓமந்தூரார் கூறும் போது, “வரச் சொன்னார்கள், வந்தேன், இப்போது போகச் சொல்கிறார்கள், போகிறேன்” என்று சுருக்கமாக கூறி முதல்-அமைச்சர் பதவியிலிருந்து எவ்வித தயக்கமும் இல்லாமல் விலகிக் கொண்டார்.

தமது இறுதி காலத்தில் வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவி, வள்ளலார் வகுத்த பாதையில் தனது பணிகளை செய்து வந்தார். அங்கு தொண்டு நிறுவனங்கள், பள்ளிக் கூடங்களை நிறுவி சமூகப்பணி ஆற்றினார். இறுதியாக 25.8.1970 அன்று உயிர் நீத்த ஓமந்தூராரின் புனித உடல் அமர்ந்த நிலையில் சமாதியில் வைக்கப்பட்டது. ஊரன் அடிகளாரும், திருவலம் சுவாமிகளும் ஓமந்தூராருக்கான இறுதிச் சடங்குகளை செய்தனர்.

ஓமந்தூராரை விவசாய முதல்-அமைச்சர், நேர்மையின் மறுவடிவம், உத்தமர் என்றும் தமிழகம் இன்றைக்கும் போற்றி பாராட்டுகிறது என்று சொன்னால், அதற்கு காரணம் அவரது பொது வாழ்க்கையை தூய்மையாக, எளிமையாக, நேர்மையாக அமைத்துக் கொண்ட முறை தான்.

No comments:

Popular Posts