Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

உலகம் போற்றும் உன்னத போராளி நேதாஜி...!

உலகம் போற்றும் உன்னத போராளி நேதாஜி...! நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இன்று (ஜனவரி 23-ந் தேதி) சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். உலகம் போற்றும் உன்னத போராளியான நேதாஜி 1897-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ஜானகிநாத் போசுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, பிறந்தார். லண்டனுக்கு சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திரபோசுக்கு வெறுப்புகளை அதிகரித்தது. இதனால் லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். நேதாஜிக்கு ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர்களின் சந்திப்பு பின்பு காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942-ம் ஆண்டு அனிதா போஸ் என்ற மகளும் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர்.தாசை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவும் செய்தார். சி.ஆர்.தாஸ் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று ‘சுயாட்சி கட்சியை’ தொடங்கியதோடு மட்டுமல்லாமல் ‘சுயராஜ்ஜியா’ என்ற பத்திரிகையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்புகளையும் ஒப்படைத்தார். 1938-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் நேதாஜி. ரவீந்திரநாத் தாகூர் அவரை அழைத்து பாராட்டு விழா நடத்தியதோடு, நேதாஜி என்ற பட்டத்தையும் வழங்கினார். காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து விலகினார். அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார் எனக்கூறி 1940-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு நேதாஜியை கைது செய்து சிறையில் அடைத்தது. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த கால கட்டம் அது. இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம் எனக் கருதிய நேதாஜி, மாறுவேடம் அணிந்து சிறையில் இருந்து தப்பித்து, பெஷாவர் வழியாக காபூலை அடைந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தான் சென்றடைந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே ஜெர்மன் தலைநகர் பெர்லினில், ஹிட்லரை சந்தித்து இந்திய சுதந்திரத்தைப்பற்றி அவரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார். ‘சுதந்திர இந்தியா மையம்’ என்ற அமைப்பை தொடங்கிய நேதாஜி, சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல் இந்திய விடுதலை போராட்டத்தை மையப்படுத்தியும், உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒலிபரப்பினார். 1943-ம் ஆண்டுசுதந்திர இந்திய அரசாங்கத்தை சிங்கப்பூரில் அமைத்தார்.பிரதமர் பதவியையும் பிரதம ராணுவத் தளபதி பொறுப்பையும் அவர் ஏற்றார்.பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப்பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். தேசிய அரசாங்கம் புதிய நாணயங்களை வெளியிட்டது. நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன.இந்திய தேசிய ராணுவத்தில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். மேஜர் லட்சுமி தலைமையில் இருந்த பெண்கள் ராணுவம் ஜான்சி ராணிப்படை என்ற பெயரில் இயங்கியது .இதில் 1,200 பெண்கள் இருந்தனர். இதையடுத்து பர்மாவில் இருந்துகொண்டு இந்திய தேசிய ராணுவ படைமூலம் ஆங்கிலேயரை எதிர்த்தார். இந்தியாவை நிரந்தரமாக அடிமைப்படுத்தி கட்டிக்காக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை, ‘ஜெய்ஹிந்த்’ என்று உரையாற்றினார். 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என்று ஜப்பானிய வானொலி அறிவித்தது. இது இந்திய மக்களை நிலைகுலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவரது மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது. ‘எனக்கு ரத்தம் கொடுங்கள் உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்’ எனக் கூறிய புரட்சி நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாரத நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, ராணுவ ரீதியாக போராடிய ஈடு இணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறக்க முடியாது. இந்தியாவில் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை அசைத்துப்பார்த்த அவர் அதில் சற்று பின்னடைவை சந்தித்தாலும் அவரது வீரம் என்றும் நினைவு கூரத்தக்கது. - ச.நிசார் அகமது, பெங்களூரு.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement