Tuesday 5 May 2020

திரையரங்கிலிருந்து வீட்டுக்குள்... By தங்கர் பச்சான்

ஊரடங்குக் காலங்களில் உலகிலுள்ள 780 கோடி மக்களில் பெரும்பாலானோருக்குத் துணையாக இருப்பது திரைப்படங்கள்தான். திரைப்படங்களை மையமாகக் கொண்டே இயங்கும் தொலைக்காட்சி, நாளிதழ், வார இதழ், இணையதள ஊடகங்கள் அனைத்தும் எப்போதும் இல்லாத அளவில் சுறுசுறுப்போடு இயங்குகின்றன.

தனது மொழிகளில் உள்ள திரைப்படங்களைத் தவிர பிறமொழிப் படங்களைக் கண்டிராத மக்களெல்லாம் உறங்கும் நேரம் தவிர இவற்றை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஓர் ஆண்டு முழுக்கக் காண வேண்டிய திரைப்படங்கள் எல்லாம் ஒரே மாதத்தில் பார்க்க முடிந்தது. முப்பது பைசா கட்டணமாகக் கொடுத்துத் திரைப்படம் பார்த்த நமக்கு, கைக்குள்ளேயே இருக்கும் செல்லிடப்பேசிக்குள் உலகத்தின் எல்லா நாடுகளிலும் உருவாக்கப்பட்ட திரைப்படங்களையெல்லாம் நினைத்த நேரத்திலெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் எனும் வசதியை அறிவியல் அமைத்துத் தந்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்தியாவில் எல்லா திரையரங்கங்களும் மூடிக் கிடக்கின்றன.

திரைப்படப் படப்பிடிப்புகள் கிடையாது. புதிய திரைப்பட அறிவிப்புகள் இல்லை. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியாமல் தொங்கலில் இருக்கும் படங்கள் ஒருபுறம். படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரக் காத்திருக்கும் படங்கள் இன்னொருபுறம்.     உலகம் முழுவதும் 1,37,000 திரையரங்குகள் உள்ளன. திரையரங்குகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம், இந்தியா மூன்றாமிடம். அமெரிக்காவில் மட்டும் ஏறக்குறைய 40,000 திரைகள் கொண்ட அரங்கங்கள் உள்ளன. மக்கள்தொகையில் அமெரிக்காவைவிட மூன்று மடங்கு அதிகம் கொண்ட நம் நாட்டில் 11,000 திரைகள் கொண்ட அரங்குகள் மட்டுமே உள்ளன.    இவற்றுள் ஒரே ஒரு திரையரங்கைக் கொண்ட செனகல் எனும் தனி நாடான தீவும் இருக்கிறது. உலகிலேயே திரைப்படம் பார்க்க மிகக் குறைந்த கட்டணம் கொண்ட நாடு இந்தியாதான் எனும் செய்தியையும் அறிய முடிகிறது. கொவைட் 19 தீநுண்மி தாக்குதலிலிருந்து தப்பிக்குமா எனப் பட்டியலிடும்போது திரைத் துறைதான் முதலில் நிற்கிறது. ரூ.5 கோடி முதல் ரூ.2,500 கோடி வரை செலவழித்து உருவாக்கிய அமெரிக்கத் திரைப்படங்கள்கூட எப்போது திரைக்கு வரும் எனத் தெரியாமல் முடிவெடுக்க முடியாமல் தவிக்கின்றன.

திரைப்படங்களைத் தயாரிப்பவர்கள் மட்டும் திரைப்படத் தொழிலில் முதலீட்டாளர்கள் இல்லை. திரையரங்கு உரிமையாளர்களும்தான். தங்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது என்று மக்களுக்கு நம்பிக்கை உருவாகி, வருவாய் ஈட்டும் நிலைமை ஏற்பட்டு, திரையரங்கில் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்க முன்வரும் வரை திரையரங்குகள் காத்திருக்கத்தான் வேண்டும். ஆனால், முடித்து தயார் நிலையிலுள்ள திரைப்படங்கள் அதுவரை திரையரங்குகளுக்கு காத்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால், அதுவரை மக்கள் காத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஏதோ ஒரு வடிவில் காணக் கிடைக்கின்ற திரைப்படங்கள்தான். அவற்றை எந்த வடிவத்தில் எந்தக் கருவிகளில் பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல என நினைக்கிறார்கள்.

இனி வரும் காலங்களில் உயிர்வாழவே பணத்துக்கு அலையப் போகும் மக்களுக்கு இவ்வாறு வீட்டுக்குள்ளேயே திரைப்படங்களைப் பார்ப்பதால் பெரும் பணம் மிச்சம். ஒரு குடும்பம் ஒரு படத்துக்கு செலவழிக்கும் தொகையில், சில ஆண்டுகள் முழுக்க நினைத்த இடத்தில், மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கி...இப்படி தங்களின் வசதிக்கேற்ப குடும்பமே எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இதுபோக இதனால் நேரம் மிச்சம், அலைச்சல் மிச்சம், சுகாதாரச் சீர்கேட்டிலிருந்து விடுதலை, தின்பண்டங்கள், வாகன நிறுத்தக் கட்டணம் போன்ற செலவுகளிலிருந்தும் விடுதலை. இதுபோக எரிபொருள் மிச்சம் என இப்படிப்பட்ட எண்ணற்ற பலன்களை அனுபவித்துவிட்டதால் இதுவே பின்னர் பழக்கமாகவும் ஆகிவிடலாம். இதனால் முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கு செலவழித்த தொகை கிடைக்குமா என்றால்...கட்டாயம் அதற்கு மேலும் கிடைக்கும் என ஹாலிவுட் தயாரிப்பாளர்களே கூறுகிறார்கள்.

திரையரங்கில் பார்க்கும் பார்வையாளர்களைவிட மின்திரையில் ("அமேசான்', "நெட்ஃபிளிக்ஸ்', தொலைக்காட்சி முதலானவை) பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு கூடிவிட்டதாம். இதற்கு காரணம், திரையரங்கு சென்று படம் பார்ப்பதையே மறந்து விட்டவர்கள் ஏராளம். கொவைட் 19 தீநுண்மியால் ஊரடங்கு வந்ததும் வந்தது, திரைப்படமே பார்க்காமல் விட்டவர்கள்கூட இப்போது மீண்டும் திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்தியா போன்ற பல மொழிகள் உள்ள நாட்டில், அவரவர்களுக்கான மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை எல்லாம், இன்று ஆங்கில துணை எழுத்துக்களுடன் (சப் - டைட்டில்ஸ்) உலகத்திலுள்ள மக்கள் அனைவராலும் பார்க்க முடிகிறது. கலாசாரம், பண்பாடு, வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டிருந்தால் தமிழ்த் திரைப்படங்களும் உலக மக்கள் அனைவராலும் கவனிக்கப்படும். கடந்த ஆண்டில் தமிழில் வெளியான "டூலெட்' எனும் திரைப்படம் உலகம் முழுக்க அதிகப் பார்வையாளர்களால் ஈர்க்கப்பட்டிருப்பதை அறிகிறேன். இந்தப் படம் எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய சிக்கலையும், தனிப்பட்ட கலாசாரங்களையும் பதிவு செய்ததால் மட்டுமே இது நிகழ்ந்திருக்கிறது.

அதே நேரத்தில் கதாநாயகர்களை மூலதனமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படங்கள் எல்லாம் தமிழர்கள், அதையும் தாண்டி மிகச் சிறிய அளவில் இந்தியர்களால் மட்டுமே பார்க்கப்பட்டன. வீட்டுக்குள் வந்துவிட்ட மின்திரை ஊடகங்கள் திரைப்படப் பார்வையாளர்களின் திரைப்படம் குறித்த பார்வையை மாற்றியிருக்கின்றன. சுவையைக் கூட்டியிருக்கின்றன. கதை என்றால் கதாநாயகர்களை முன்னிறுத்தித்தான் உருவாக்க வேண்டும், கதாநாயகிகள் களிப்பூட்டுபவர்களாக, கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் எனும் காலங்காலமாக உருவாக்கி வைத்திருந்த விதிகளை உடைத்திருக்கின்றன. இனி கதாநாயக வழிபாடும், கற்பனை பிம்பங்களும் உடைந்து போகும். இதுவரை பேசாமல் ஒதுக்கி வைத்திருந்த அனைத்தையும் திரைப்படங்கள் இனி பேசும். இந்த மாற்றங்கள் மற்ற மொழிகளில், நாடுகளில் எழுபது ஆண்டுகளுக்கு முன்பே வரத் தொடங்கிவிட்டன.

முப்பது வயதாகிவிட்ட பெண்களை கதாநாயகியாக்க, முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கவைக்க முன்வர மாட்டார்கள் என்பதெல்லாம் இனி இல்லாமல் போகும். உலகில் தமிழ் மொழி, சில மொழிகளைத் தவிர்த்து அனைத்திலும் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் எப்போதோ பெண்களை மையமாகக் கொண்ட படங்களாக மாறிவிட்டன. ஒரு கதாநாயகனை முன்வைத்து மாபெரும் வெற்றிப் படத்தை 25 லட்சம் பேர் இதுவரை பார்த்தார்கள் என்றால், யாரென்றே முன்பின் அறியாத புது நடிகர்களைக் கொண்ட திரைப்படங்களை ஒரு கோடி பேருக்கும் மேல் உலகம் முழுவதிலும் இருந்து பார்ப்பார்கள். ஒவ்வொரு நாட்டிலும் டிசம்பரிலேயே வெளியாக வேண்டிய படங்கள் ஆயிரக்கணக்கில் முடங்கிக் கிடக்கின்றன. ரூ.1,500 கோடி முதல் ரூ.2,500 கோடி வரை செலவழிக்கப்பட்ட படங்கள்கூட திரையரங்குகள் செயல்படும் நாளுக்காக காத்திருக்காமல் மின்திரையின் மூலமாக மக்களைச் சென்றடைவதற்கான திட்டங்களை ஆராயத் தொடக்கிவிட்டன எனும் செய்திகளை இணையங்களில் காண முடிகிறது. அனைத்துக் கலைகளையும் உள்ளடக்கி திரைப்படக் கலை செயல்படத் தொடங்கிவிட்டதால், மக்கள் அதை எப்போதும் இழக்க மாட்டார்கள். திரைப்படக் கலை அழிந்துபோகும் எனக் கவலைகொள்ள வேண்டியதில்லை. அதன் வடிவம்தான் மாறிக்கொண்டே இருக்கும்! ""எவ்வாறு பேசாத படங்கள் பேசும் படங்களாக மாறியதோ, எவ்வாறு கருப்பு - வெள்ளை படங்கள் வண்ணப் படங்களாக மாறியதோ, படம் இயக்கும் கருவிகள் ஆளில்லாத முறைக்கு மாறியதோ, படச்சுருளில் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் சிறிய மின்விசை கேமராக்களில் உருவாக்கப்படுகிறதோ, அதேபோல திரையரங்குகளில் மட்டும் இருந்த சினிமா, மின்திரைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது'' என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

திரைப்படம் என்பது ஒலி, ஒளி, காட்சிகளின் தனித்துவ சிறப்புத் தன்மை ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்படும்; ஒவ்வொருவரின் கற்பனைகளையெல்லாம் கடந்த வித்தைக் கலை. சில படங்கள் தரும் அனுபவத்தை திரையரங்குகளில் மட்டுமே பெற முடியும். அந்த அனுபவத்தை அடைய விரும்பும் மக்கள் தொடர்ந்து திரைப்படங்களை திரையரங்கில் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள். சுமார் 40,000 அரங்குகளைக் கொண்ட அமெரிக்காவில்தான் வீட்டிற்குள்ளேயே மின்திரையில் அதிகப்படியானவர்கள் திரைப்படத்தை பார்க்கிறார்கள் எனும் உண்மையையும் உணர வேண்டும். எந்தப் படத்தை எங்கே காணலாம் என முடிவெடுப்பதும், தேர்ந்தெடுப்பதும் பார்வையாளனின் உரிமை. திரைப்படத்தை காற்றில் பார்க்கும் காலத்துக்கும் அறிவியல் அழைத்துக்கொண்டு போகலாம். அதையும் நம்மால் தவிர்க்க முடியாது. கட்டுரையாளர்: திரைப்பட இயக்குநர்.

No comments:

Popular Posts