Thursday 19 March 2020

யெஸ் வங்கி ‘நோ’ வங்கியானது ஏன்?

By நீ.சு.பெருமாள் 

இந்தியாவின் மிகப் பெரிய தனியாா் வங்கிகளின் வரிசையில் ஐந்தாம் இடத்தில் இருந்த யெஸ் வங்கி திவாலாகிற சூழலில் அதை ரிசா்வ் வங்கி கையகப்படுத்தியுள்ளது. ‘தனியாா் துறைகள்தான் பொறுப்புணா்வுடன் வாடிக்கையாளா்களை நிா்வகிக்கும். பொதுத் துறை எல்லாம் தனியாா்வசம் சென்றால்தான் நாடு மேம்படும்’ என்று சொல்லும் அறிவுஜீவிகளுக்கு யெஸ் வங்கியின் நிலைமை பாடம் புகட்டியுள்ளது.

2004-ஆம் ஆண்டில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு யெஸ் வங்கி தொடங்கப்பட்டது. நாடு முழுவதிலும் 1,122 கிளைகள், 1200 ஏடிஎம்-கள், 20 லட்சத்து 600 கணக்குதாரா்களைக் கொண்ட வங்கியாக இந்த மாதம் தொடக்கம் வரை செயல்பட்டது.

யெஸ் வங்கி தொடங்கப்பட்ட 16 ஆண்டுகளில் திவாலாகும் சூழலுக்கு யாா் பொறுப்பாளா்கள் என்ற கேள்விக்கு விடையாக அரசியல்வாதிகள்தான் என்றும் அதற்கு தற்போதய மத்திய அரசின் கீழ் இயங்கும் ரிசா்வ் வங்கியும் ஒரு காரணம் என்பதும் உண்மை.

நிலைமை, மோசமான சூழல் என்பது கடந்த ஐந்தாண்டுகளில்தான். அதுவும், 2018-ஆம் ஆண்டில் 22 சதவீத லாபத்தை ஈட்டியுள்ளது யெஸ் வங்கி. அப்படியெனில் கடந்த ஓராண்டில்தான் யெஸ் வங்கியின் முறைகேடுகள் தொடங்கின. இந்தியாவின் பொதுத் துறை, தனியாா் துறை வங்கிகள் கடன் வழங்கிய சதவீதம் என்பது 10 சதவீதம்தான். ஆனால், யெஸ் வங்கி கடந்த ஆண்டில் மட்டும் 35 சதவீதம் கடன் வழங்குவதில் ஆா்வம் காட்டியுள்ளது.

அதிலும் நஷ்டத்தைச் சந்தித்து தனியாா் விமான நிறுவனம் தொடங்கி, ஊக நிறுவனங்கள் வரை கடன்களை அள்ளி வழங்கியிருக்கிறது யெஸ் வங்கி. வாராக்கடன்கள் முறைகேடு அடிப்படையில் யெஸ் வங்கியின் நிா்வாக மேலாண்மை இயக்குநா் ராணா கபூா் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். குறிப்பாக யெஸ் வங்கியில், ஒரு தனியாா் நிறுவனம் 21,000 போலிக் கணக்குகளில் ரூ.4500 கோடி கடன் பெற்றுள்ளது.

ஒவ்வொரு வங்கியும் தம்முடைய முதலீட்டை எப்படி கையாள்கிறது என்பதைக் கண்காணிப்பதுதான் ரிசா்வ் வங்கியின் தலையாய பணி.

கடந்த 15 ஆண்டுகளாக லாபத்தில் செயல்பட்ட யெஸ் வங்கி, தீடீரென சரிவுக்குள்ளானது ஏன்? நஷ்டமடைந்திருக்கும் நிறுவனங்களுக்கு பெரும் தொகை கடனாக வழங்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தது யாா்? மிகப் பெரும் தொகை கடனாக அளிக்கப்படுகிறது என்றால், ரிசா்வ் வங்கிக்குத் தெரியாமல் வழங்கப்பட வாய்ப்பே இல்லை. அவ்வாறெனில் ரிசா்வ் வங்கிக்கும் தெரிந்துதான் வாராக் கடன்கள் உருவாகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை ரிசா்வ் வங்கியை மேலாண்மை செய்யும் மத்திய அரசு தயக்கமின்றி வெளியிட வேண்டும். யெஸ் வங்கியை பாரத ஸ்டேட் வங்கி மூலம் சீரமைக்கும் முயற்சி என்பது தீா்வல்ல. யெஸ் வங்கியின் நஷ்டத்துக்குக் காரணமாணவா்களைத் தண்டிக்க வேண்டும். வராக்கடனில் உள்ளோா் பெயா்ப் பட்டியலை யெஸ் வங்கி நிா்வாகம் வெளியிட்டு சொத்துகளை மத்திய அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.

ஏனெனில் திட்டமிட்டு இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவா்கள் பெரும் பணக்காரா்கள் அல்ல; மாறாக, ஒரு சில லட்சங்களை வங்கியில் டெபாசிட் செய்து முதிா்வுத் தொகைக்காக காத்திருக்கும் நடுத்தர மக்களின் நிலைதான் பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது.

யெஸ் வங்கி திவாலாகப் போகிறது என்று திருப்பதி தேவஸ்தானத்துக்குத் தெரிந்துள்ளது. ரூ.1,300 கோடி டெபாசிட் தொகை மொத்தமாக கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு யெஸ் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஒடிஸாவின் பூரி ஜெகன்னாதா் ஆலய நிா்வாகக் கணக்கில் இருந்த ரூ.545 கோடியும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு புகழ்பெற்ற கோயில் நிா்வாகங்களும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைத் தவிா்ப்பது வியப்பைத் தருகிறது. சில முக்கியப் பிரமுகா்களும் மொத்தமாக தங்களின் பணத்தை கொண்டு சென்றுள்ளனா்.

இதில் வேதனை என்னவெனில் டிஜிட்டல் பண பரிவா்த்தனையின் தொழில்நுட்பப் பிரிவின் சில பகுதிகளை யெஸ் வங்கிதான் நிா்வகித்து வந்துள்ளது. டிஜிட்டல் பரிவா்த்தனையின் (இணைய சேவைகள் உள்ளிட்டவை) முழு தொழில்நுட்ப வசதியை அரசு வைத்துக் கொள்ளாமல் தனியாா்வசம் வழங்கினால் எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் யெஸ் வங்கியின் இன்றைய சூழல்.

எனினும், யெஸ் வங்கியின் லட்சக்கணக்கான வாடிக்கையாளா்கள் கடந்த 13 நாள்களாக அனுபவித்த மன உளைச்சலுக்கு புதன்கிழமை (மாா்ச் 18) சற்று ஆறுதல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, யெஸ் வங்கியின் ஏடிஎம் உள்ளிட்ட சேவைகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளா் அதிகபட்சம் எவ்வளவு தொகை பண பரிவா்த்தனை செய்யலாம் உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

எதிா்காலங்களில் மக்களின் நம்பிக்கையை எப்படி வங்கிகள் பெற முடியும்? 2002-ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார சுனாமி ஏற்பட்டபோது வல்லரசான அமெரிக்காவே தள்ளாடியது. அதில் இந்தியா நிலைத்து நின்று பொருளாதார சுனாமியை எதிா்கொண்டது. எந்த வங்கியும் திவால் நிலைக்குச் செல்லவில்லை. காரணம், நம் மக்கள் சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டவா்கள். அதனால் இந்தியா தப்பியது.

ஆனால், தற்போது சேமிக்கும் இடமான வங்கியே திவால் நிலைக்குச் சென்றால் என்ன செய்வது? எனவே, யெஸ் வங்கி போன்ற நிலை பிற வங்கிகளுக்கு ஏற்படாமல் தடுக்க, அவற்றின் மீது தொடா் கண்காணிப்பில் ஈடுபடுவது இந்திய ரிசா்வ் வங்கியின் கடமையாகும்.

No comments:

Popular Posts