Thursday 26 March 2020

கொரோனாவை விரட்டியடிக்கும் தமிழ்ப் பண்பாடு

முனைவர் வெ.நல்லதம்பி,

மூத்த தொலைக்காட்சியாளர்.

உலகத்தில் 150-க்கும் மேலான நாடுகளை தாக்கியிருக்கும் கொரோனா நோய், இதுவரை 11 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை பலிகொண்டுவிட்டது. உலக பொருளாதாரத்தையே, ஓர் உலுக்கு உலுக்கி விட்டது. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உலகச்சந்தை அடிவாங்கி விட்டது. சுற்றுலாத் துறையிலும், போக்குவரத்துத் துறையிலும் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கணினி பொறியாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் நிலை வந்துவிட்டது. சர்வ வல்லமைமிக்க உலகத் தலைவர்கள்கூட, தாங்கள் செல்ல வேண்டிய அயல்நாடுகளுக்கு செல்ல முடியவில்லை. செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டாலும், ஒருவரை ஒருவர் வரவேற்க கைகுலுக்கிக் கொள்ள முடியவில்லை; கட்டியணைத்துக் கொள்ள முடியவில்லை.

அதற்குப் பதில் இரு கைகளையும் குவித்து வணக்கம் சொல்லிக் கொள்கிறார்கள். அத்துடன் மாற்று ஏற்பாடாக காணொலி மூலம் கருத்து பரிமாற்றமும் செய்து கொள்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி ‘சார்க்’ நாட்டுத் தலைவர்களுடன் காணொலி மூலம் உரையாடியதை தொடர்ந்து சீனாவும், பத்துக்கும் மேற்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆசிய ஐரோப்பிய நாடுகளோடு இரு தினங்களுக்கு முன் கொரோனாவை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக உரையாடியுள்ளது. தலைவர்களின் கைகுலுக்கல் முறை இப்போது உலக கவனம் பெற்றுள்ளது. இந்த புதிய மாற்றத்தை இந்திய பாரம்பரியத்திற்கு கிடைத்த சிறப்பு என்று பலர் பாராட்டுகிறார்கள்.

இரு கரம் கூப்பி வணங்குவது உண்மையில் நம் தமிழ்ப் பண்பாடு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் அதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். உயிர்க் கொலை செய்யாதவர்களையும், புலால் உணவைத் தீண்டாதவர்களையும் எல்லா உயிர்களும் ‘கைகூப்பித் தொழும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இருகை கூப்பி வணங்கும்போது, நம் முன்னோர் ஒரு நுட்பத்தோடு வணங்குவார்கள். இரு கைகளையும் நெஞ்சுக்கு நேரே வைத்துக் கும்பிடுவது, கண்களுக்கு நேரே வைத்துக் கும்பிடுவது, தலைக்கு மேலே உயர்த்திக் கும்பிடுவது என்பவை அந்த நுட்பங்கள்.

நண்பர்கள் நம் நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள் என்பதைக் குறிக்க அவர்களுக்கு நெஞ்சு வணக்கம்; ஆசிரியர்கள், சான்றோர்கள் நம்மை முழுமையடைய வைப்பவர்கள் என்பதைக் குறிப்பிட அவர்களுக்கு முக வணக்கம்; இறைவன் உலகத்தார் அனைவரையும் விட உயர்ந்தவன் என்பதை உணர்த்த தலைக்கு மேலே இரு கரத்தையும் உயர்த்திய தலையாய வணக்கம். இரு கைகளையும் சேர்த்து வணங்கும்போது உடலில் உள்ள பாசிடிவ், நெகடிவ் என்னும் நேர்மறை, எதிர்மறை ஒன்றிணைகின்றன என்கிற ஆன்மிகவாதிகளின் சிந்தனைகளையும் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. கொரோனாவை விரட்ட இப்போது ஊரடங்கு பற்றி குறிப்பிடுகிறார்கள். கலிபோர்னியா, நியூயார்க் ஆகிய அமெரிக்க நகரங்கள் ஊரடங்கை அறிவித்து விட்டன. இத்தாலி நாடும் தன் வடபகுதியில் ஊரடங்கை அறிவித்து விட்டது.

இந்த ஊரடங்கு என்பது வேறொன்றுமில்லை. நம் தமிழ் பண்பாட்டின் ஓர் அம்சம்தான். நம் நாட்டுப்புறத்தில் இன்றும் அது, ‘காப்புக் கட்டுதல்’ என்ற பெயரில் வழக்கத்தில் உள்ளது. கோவில் திருவிழா அல்லது ஊர்த் திருவிழா ஆகியனவற்றிற்கு தேதி குறிப்பிட்டுவிட்டால், அதையொட்டி ஊர் மக்கள், ஊர் எல்லையை தாண்டி எங்கும் செல்லக் கூடாது. அந்தப் பழக்கம் இன்றளவும் நாட்டுப் புறங்களில் கடைபிடிக்கப்படுகிறது. அதுதான் ‘லாக் டவுன்’ எனப்படும் ஊரடங்கு ஆகும்.

பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கு என்பதும் அந்த கருத்துக்கு அரண் சேர்ப்பதாக உள்ளது. கொரோனாவை விரட்ட முன்வைக்கப்படும் மற்றொரு உத்தி ‘தனித்திருப்பது’ என்பதாகும். கொரோனா நோய் தொற்றின் அடையாளமான இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ள ஒருவரை கண்டால் மூன்றடி தள்ளிப்போய் விடவேண்டும் என்கிறார்கள். வையகம் நன்றாக வாழவேண்டும் என்று கருதிய வள்ளல் பெருமானார் தமக்கே உரிய உயர் நெறியை மக்களிடம் பரப்ப ‘விழித்திரு, தனித்திரு, பசித்திரு’ என்று அருளிச் சென்றுள்ளார். ‘தனித்திருப்பது’ என்பது இன்றைய காலக்கட்டத்திற்கு எவ்வளவு பொருத்தமானதாகி விட்டது!. வள்ளலாரின் ‘பசித்திரு’ என்பதும் இக்காலத்திற்கெனவே சொல்லப்பட்டிருப்பது போன்று தோன்றுகிறது. பொதுமக்கள் அனைவருக்குமான உணவுக்கு தேவையான பொருள்களை வாங்கி பதுக்கி, தாம் மட்டுமே பயன் கொள்ளாமல், அதனால் பசியே ஏற்பட்டாலும் பலருக்கும் பரவலாக்கும் சிந்தனையை அது கொடுக்கிறதன்றோ! வணங்குவது, தனித்திருப்பது, பசித்திருப்பது போன்ற தமிழ் பண்பாட்டு கூறுகள் கொரோனா வைரசின் கொடிய தாண்டவத்தை விரட்டி அடிக்க உலகிற்கே உதவுகிறதல்லவா!

No comments:

Popular Posts