Tuesday 31 December 2019

உறுதிகளுடன் பிறக்கட்டும் புத்தாண்டு!

உறுதிகளுடன் பிறக்கட்டும் புத்தாண்டு! By ஆர்.வேல்முருகன்  |   |ஒவ்வொரு புத்தாண்டின்போதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறுதி எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால், எத்தனை பேர் அந்த உறுதியைக் கடைப்பிடிக்கிறோம் என்பது அவரவரின் தனிப்பட்ட விஷயம்.

புத்தாண்டு தொடக்கத்தின்போதும் பலர் குறிப்பிட்ட கோயில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.  ஒவ்வோர் ஆண்டும் அதிகாலையில் கோயில்களுக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது சில விஷயங்களை தெய்வத்திடம் வேண்டுகோளாக வைத்து வந்திருப்பார்கள்.

வேலைக்குச் செல்வோராக இருந்தால் பதவி உயர்வு, அதிகபட்ச ஊதிய உயர்வு ஆகியவற்றுக்காக வேண்டியிருப்பார்கள்.  அரசு ஊழியராக இருந்தால் பணிக்குச் சேர்ந்த ஆண்டு மட்டுமே பிரதானம்.  பதவி உயர்வும் ஊதிய உயர்வும் வழக்கம்போல வந்துவிடும்.  ஆனால், தனியார் நிறுவனங்களில் அப்படியில்லை. உழைப்புக்கும் நீங்கள் நிறுவனத்துக்காகச் செலவிடும் நேரத்தையும் கணக்கில் வைத்துத்தான் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். ஆனால், இதற்காக நிறைய சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும்; அதாவது, பெரும்பாலோர்  தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடாமல் உழைப்பார்கள்.

புத்தாண்டிலிருந்து குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட உறுதிமொழி எடுங்கள். தந்தையும் தாயும் அவரவர் வேலைகளில் மூழ்கி விடுவதால், குழந்தைகள் அன்புக்கு ஏங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பணம் சம்பாதிப்பது முக்கியம்தான்; ஆனால், அது மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதைப் புரிந்துகொண்டு குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் நேரத்தைச் செலவிடுவது மிகவும் முக்கியம்.

முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் அதிகமாக இருந்தன. அதனால், ஒரு குழந்தையின் பெற்றோர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா, அவர்களின் குடும்பத்தினர் எனக் குடும்பமே கலகலவென்று இருக்கும்.

ஒவ்வொரு விடுமுறைக்கும் அனைவரும் ஒன்று கூடி இருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும் நெஞ்சை விட்டு அகலாத நினைவுகளும் எப்போதும் மறக்க முடியாது. இதேபோல ஒவ்வொரு விடுமுறைக்கும் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்பதை இப்போது மீண்டும் புத்தாண்டு உறுதிமொழியாக எடுத்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் இருக்கும் மனவேறுபாடுகளைக் களைந்து இரண்டு அல்லது மூன்று குடும்பங்களாவது இணைந்து தொடரலாம்.
இன்றைய கணினி உலகில் மகிழ்ச்சிக்காக அவசர ஓட்டத்தை அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் அடுத்தவர்களுக்கு எப்படி உதவுவது என்பது நம் அனைவருக்குள்ளும்  எழும் கேள்வி.

பெரும்பாலான விபத்துகளில் "கோல்டன் ஹவர்' எனப்படும் உயிரைக் காப்பாற்றும் நேரத்தில்கூட, நமக்கெதற்கு இந்தப் பிரச்னை என்று அனைவரும் ஒதுங்கி விடுகின்றனர். இதனால்தான் ஈடுசெய்ய முடியாத மனித உயிர், பல நேரங்களில் பிரிந்து விடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே, உதவி செய்வதை இந்த ஆண்டு முதல் உறுதியாக்கிக் கொள்ளுங்கள்.
தற்போது பெரும்பாலான இளைஞர்கள் புகைப் பிடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். புகைப் பிடித்தால் புற்றுநோய் வரும் என்று தெரிந்தும் பழக்கத்தைவிட யாரும் விரும்புவதில்லை.  ஒவ்வொரு புத்தாண்டின்போதும் புகைப்பழக்கத்தை நிறுத்தப் பலர் நினைத்தாலும் முடிவதில்லை என்பது எதார்த்தம். அதே போன்றதுதான் மதுப் பழக்கமும்.

புகைப்பதாலும், குடிப்பதாலும் உடல் நலத்துக்குக் கேடு என்பதுடன், உழைக்கும் பணம் விரயமாவதை உணருங்கள்.  உடல் நலம் கெட்டு, குடும்ப நிம்மதியும் புதைகுழிக்குப் போய் அனைவரும் வெறுக்கும் இந்தப் பழக்கத்துக்கு நிரந்தர விடை கொடுக்கும் வகையில் மன உறுதியைக் கொண்டு, அதைக் கடைப்பிடித்துப் பாருங்கள்; உங்கள் மீது பிறருக்குள்ள மரியாதை சிகரம் தொடும்; மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.

பொதுவாகவே நமது நாக்கு என்பது மிகவும் முக்கியமானது. எத்தகைய நண்பனாக இருந்தாலும் அவர்களை நொடிப் பொழுதில் எதிரியாக்கும் வல்லமை படைத்தது நாக்கு.  இந்தப் புத்தாண்டு முதல் யாருடைய மனதையும் காயப்படுத்தாமல், இனிமையாக மட்டுமே பேசுவோம்.

இன்றைய பெண்களில் பெரும்பாலோர் தொலைக்காட்சி தொடர்களுக்கு அடிமையாகி விட்டனர். குடும்பத்தினரின் விருப்பத்தை விட, குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதைவிட அவர்கள் தொலைக்காட்சி தொடர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் அதிகம்.  தொலைக்காட்சி தொடர்களை கடமையாகப் பார்க்காமல் பொழுதுபோக்காகக் கருதும் மனப் பாங்கு அவசியம். முக்கியமான பணிகள் இருக்கும்போது தொலைக்காட்சி தொடர்களைப் புறக்கணியுங்கள்.

வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே வாங்கி வீண் செலவைக் கட்டுப்படுத்துங்கள். தேவையில்லாத பொருள்கள் வாங்கி பண விரயம் செய்யப் போவதில்லை என உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியமானது தன்னம்பிக்கை; தன்னம்பிக்கை உள்ளோர்தான் வாழ்க்கையில் சாதித்துள்ளனர் என்பதை நம்பத் தொடங்குங்கள். ஆக்கச் சிந்தனையைக் கடைப்பிடித்து, புத்தாண்டு முதல் எதிர்மறைச் சிந்தனையை விட்டொழியுங்கள். நல்ல புத்தங்களைப் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்வதும் சிறந்தது.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல் நலம் என்பது மிகவும் முக்கியம். சத்தான உணவுகளைச் சாப்பிட்டு உடல் நலத்தைத் தொடர்ந்து பேணுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நினைவில் கொண்டு புத்தாண்டில் (2020) அடியெடுத்து வைப்போம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மக்களாட்சிக்கான கல்வி இயக்கம் எப்போது?

மக்களாட்சிக்கான கல்வி இயக்கம் எப்போது? By க. பழனித்துரை  |   கடந்த 20 ஆண்டுகளில்தான் உலக வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான நாடுகள் மக்களாட்சிக்குள் வந்து செயல்பட ஆரம்பித்துள்ளன. எனவேதான், ஒட்டுமொத்தமாக மக்களாட்சி நாடுகள் என்று கூறாமல், மக்களாட்சி நாடுகள், மக்களாட்சிப்படுத்தும் நாடுகள் என்று இரண்டாகப் பகுத்து அந்த ஆராய்ச்சி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, இந்த ஆய்வுகள் அனைத்தும் குடிமக்களின் மக்களாட்சி பற்றிய புரிதல் குறித்தும், மக்களாட்சியைப் புரிந்து பயன்படுத்தும் ஆற்றல் குறித்தும்தான் அதிக அளவில் விவாதித்திருக்கின்றன.
மக்களாட்சிக்குள் புதிதாக நுழைந்த நாடுகள் தேர்தல்கள் குறித்தே விவாதித்து வருகின்றன. தேர்தலும், தேர்தலால் உருவாகும் ஆட்சி மாற்றங்களும் குறித்த விவாதங்களை முன்னிறுத்தி, தேர்தல்தான் மக்களாட்சி என்று மக்களிடம் பதிய வைத்து வருகின்றன அரசியல் கட்சிகள் என்ற கருத்தினை இந்த ஆராய்ச்சி அறிக்கைகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

உலகம் முழுவதும் மக்களை முன்னிலைப்படுத்தி கள ஆய்வு செய்ததில் மக்களாட்சி குறித்து பொதுமக்கள் கொண்டுள்ள கருத்தாக்கங்கள் எவ்வளவு வேறுபாடுகள் நிறைந்ததாகவும், முரண்பாடுகள் நிறைந்ததாகவும் இருக்கின்றன என்பதை இந்த ஆய்வு அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்த ஆய்வுகளிலேயே மிகப் பெரிய ஆய்வை நடத்தியது ஐ.நா. நிறுவனம். 2013}ஆம் ஆண்டில் 194 நாடுகளில் ஜனநாயகம் குறித்த மக்கள் கருத்துகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது ஐ.நா. அனைத்து நாடுகளிலும் நாட்டு முன்னேற்றத்துக்கு, மக்கள் விரும்புவது, "மக்களாட்சி முறை' எனப் பதிவு செய்துள்ளது; உலகின் 94 சதவீத மக்கள்  மக்களாட்சி முறையில் வாழ்வதைத்தான் விரும்புகின்றனர்.

இந்த ஆய்வு அறிக்கைகள் பல விசித்திரமான முடிவுகளைக் கொண்டு வந்துள்ளன. பல நாடுகள் வேகமாக மக்களாட்சிக்குள் வந்தாலும், அதை நடத்த உருவாக்கப்பட்ட அமைப்புகள் எதேச்சாதிகாரமாகச் செயல்படுவதும், மக்களின் செயல்பாடுகளில் மக்களாட்சியின் உட்கூறுகளான அடிப்படை அலகுகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், உரிமைகள்,  நீதி, எதிர்க் கருத்தை மதித்து நடத்தல், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல், சட்டத்தின்படி ஆட்சி, மக்களின் பங்கேற்பு போன்றவற்றை நிராகரித்துச் செயல்படுவதையும் இந்த அறிக்கைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

வலுவுள்ள ஜனநாயக நாடுகள் முடிவெடுக்கும் தளங்களில் மக்கள் பங்கேற்பு என்பதை பிரதானப்படுத்தும் நிலையில், புதிதாக மக்களாட்சிக்கு வந்த நாடுகளில் மக்களாட்சியில் பயணிக்க விரும்பும் மக்கள், பங்கேற்பு முறை முடிவெடுக்கும் பழக்கத்தை விரும்பாமல் தலைவர்களுக்கே அந்த அதிகாரங்களைத் தாரை வார்க்கும் பழக்கத்தை ஆய்வு அறிக்கைகள் எடுத்தியம்புகின்றன.

பங்கேற்பு ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்து எந்தப் புரிதலும் இல்லாமல் மக்கள் இருப்பதையும் ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. மக்களாட்சி முறையே சிறந்த முறையிலான ஆட்சி என்று கூறும் மக்கள், ஜனநாயகக் கூறுகள் குறித்த புரிதல் இல்லாமல், தாங்களும் அந்த மக்களாட்சியின் விழுமியங்களை இழந்து, மக்களாட்சி அமைப்புகளும் மக்களாட்சிக் கூறுகளை இழப்பதைப் பார்த்துக்கொண்டு மக்களாட்சியில் இருப்பதாக மக்கள் மகிழ்ந்து இருப்பதுதான் புதிர் என இந்த ஆய்வு அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

சீனா,  வியத்நாம் போன்ற நாடுகளில் வாழும் மக்களும் தாங்கள் மக்களாட்சியில் வாழ்வதாகவே கருதி அது குறித்து தங்களது கருத்துகளைக் கூறியுள்ளனர். மக்களாட்சி முறைதான் மக்களுக்கு நல்லது என்று மக்கள் கூறினாலும், எது மக்களாட்சி, எது மக்களாட்சிக்கு விரோதமான எதேச்சாதிகார ஆட்சி என்று பிரித்துப் பார்க்க முடியாதவர்களாகத்தான் மக்கள் இருக்கிறார்கள் என ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

மக்களாட்சியில் இல்லாத மக்கள் அரசை மதிப்பீடு செய்யும்போது, சேவைகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அரசு பூர்த்தி செய்து விடுகிறது என்ற பதிலை நிறைவுடன் கூறுகின்றனர் என ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இத்தகைய நாடுகளில் வாழும் மக்கள், மக்களாட்சியில் இயங்கும் நாடுகளில் வாழும் மக்களைவிட அரசின் மீது நம்பிக்கையுடன் வாழ்கின்றனர், நிறைவுடன் வாழ்கின்றனர் என இந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேற்கூறிய கருத்துகள் அனைத்தும் ஒரு கேள்வியை நம் சிந்தனையில் எழுப்புகிறது. மக்களாட்சி குறித்து பொதுமக்கள் எப்படிப்பட்ட புரிதலைக் கொண்டுள்ளனர்?  மக்களாட்சி குறித்த புரிதலை பொதுமக்களுக்கு  யார் ஏற்படுத்துகின்றனர்? அந்தப் புரிதலுக்கு ஏற்ப மக்களாட்சியில் அவர்கள் செயல்படுகின்றார்களா என்பதுதான் அந்தக் கேள்விகள்.

எனினும், மக்களாட்சியில் வாழும் மக்களைவிட, எதேச்சாதிகார ஆட்சியில் வாழும் மக்கள் அரசின் மீது அதிக நம்பிக்கையை வைத்துள்ளனர். தேர்தல் நடைபெறுகிறது, தொடர்ந்து ஆட்சி மாறுகிறது; ஆனால், மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
மக்களுக்குச் சென்று சேரவேண்டிய பலன்களை யாரோ எடுத்துச் செல்கின்றனர். ஏனெனில்,  மக்களாட்சியைப் புரிதலுடன் மக்கள் பயன்படுத்தவில்லை. இதன் விளைவு, மக்களாட்சியை ஒருசில வர்க்கத்தினர் பயன்படுத்தி, தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர். அது மக்களாட்சியை மதிப்பிழக்கச் செய்யும் செயல்.

மக்களாட்சி முறையில் பல்வேறு முறைகள் உலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் இவை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. மக்களாட்சி முறையில் செயல்படும் அரசுகள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி ஒட்டுமொத்த மக்களின் நல்லாதரவையும்  பெற்றுள்ளன.

அதே நேரத்தில் மக்களாட்சி நடைபெறும் சில நாடுகளில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக்கூட அரசை எதிர்த்துப் போராட வேண்டிய சூழலுக்கு மக்கள்  தள்ளப்படும் நிலை உள்ளது. இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் பல்வேறு நிலைகளில் மக்களாட்சி நடைபெறும் நாடுகள் செயல்படுகின்றன.
எனவே, இந்த மக்களாட்சி நாடுகளை வகைப்படுத்தவும் தரப்படுத்தவும், ஒப்புநோக்கவும், ஒரு விரிவான முறைமையியலை உருவாக்கி ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுகளை குறைந்தபட்ச மக்களாட்சிக் கூறுகளை வைத்தும், அதிகபட்ச மக்களாட்சிக் கூறுகளை வைத்தும் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கைகளில் குறைந்தபட்ச மக்களாட்சியிலிருந்து அதிகபட்ச மக்களாட்சி வரை தரம் பிரித்து விளக்கப்பட்டுள்ளது.  இதில், மக்களாட்சி விரிவடையும்போது,  சமுதாயத்துக்கு மக்களாட்சி தரவேண்டிய நற்பயன்களைப் பார்க்க முடிகிறது. ஆனால், மக்களாட்சி விரிவடைவது சாதாரண நிகழ்வு அல்ல. இந்தச் செயல்பாடுகளை ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து ஜனநாயகப்படுத்துதல் என்ற செயல்பாட்டை இயக்கமாக உருவாக்கி பல நாடுகளில் உயர்நிலையை மக்களாட்சி அடைந்துள்ளது.

சுதந்திரத்துக்கு எப்படிச் சமுதாயம் போராடுகிறதோ, அதே நிலையில் மக்களாட்சிக்கும் போராடினால்தான் ஒரு நிலைத்த தரமான மக்களாட்சியை உருவாக்க முடியும். சுதந்திரப் போராட்டத்தைவிட கடுமையான போராட்டம் என்பது மக்களாட்சிக்கானது என்பதை அறியாது இருந்ததால்தான் பல நாடுகளில் குறைந்தபட்ச மக்களாட்சியுடன் மக்கள் ஏங்கி நிற்கின்றனர்.

இந்த ஆய்வுகளில் மக்களாட்சியின் கூறுகளான தேர்தல், வாக்குரிமை, பேச்சுரிமை, சமத்துவம், நீதி, சுதந்திரம், மக்களாட்சிக்கான அமைப்புகளை நிறுவுதல், அவற்றை முறையுடன் இயக்குதல், சட்டத்தின்படி ஆட்சி, பங்கேற்பு, குடிமைப் பண்பு, நியாயம், பொறுப்புடன் நடத்தல், எதிர்க் கருத்தை மதித்துச் செயல்படுதல், மனித உரிமைகளை உள்வாங்கி நடைமுறைப்படுத்துதல், ஊழலில்லா ஆட்சி } நிர்வாகத்தை ஏற்படுத்துதல், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யாதிருத்தல், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுதல் முதலானவற்றை பின்புலத்தில் வைத்து ஆய்வுகளை மேற்கொண்டு நாடுகளின் நிலையை உலக அரங்கில் அரங்கேற்றியுள்ளன இந்த ஆய்வு அறிக்கைகள்.

நம் நாட்டைப் பொருத்த அளவில் சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்களாட்சி குறைந்தபட்ச நிலையில் இருப்பதுதான் வியப்பாக உள்ளது. சுதந்திரம் பெற்றவுடன் சட்டத்தின்படி ஆட்சி என்பதை மக்கள் ஏற்று, சிரமங்களையெல்லாம் அமைதி காத்து அரசுடன் இணைந்து செயல்பட்டனர்; ஆனால், இன்று இந்தியாவில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட  மக்கள் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள்; இந்தியப் பொருளாதாரம் ஒரு வளர்ந்த பொருளாதாரம்; இருந்தபோதும், சட்டத்தின்படி ஆட்சி என்பதைப் புறக்கணிப்பதும், தேர்தலைத் தாண்டி மக்களாட்சியை விரிவுபடுத்த முடியாமல் இருப்பதும், 72 ஆண்டுகால அரசுகளின் செயல்பாடுகள் மூலம் குறைந்தபட்ச வசதிகளைக்கூட ஏற்படுத்தித் தர முடியவில்லை என்பதும் மக்களாட்சியை முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

இருந்தபோதிலும், மக்களாட்சிக்கான பல அடிப்படைக்கூறுகள் இந்தியாவில் தொடர்ந்து செயல்படுவது பாராட்டுக்குரியது என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சூழலில் பல அடிப்படை மக்களாட்சிக் கூறுகளை நம் அரசியல் கட்சிகளும், அரசும் தங்கள் செயல்பாடுகளில் கடைப்பிடிக்காமல் இருப்பது என்பது பாராட்டக்கூடிய அம்சம் அல்ல. எனவே, நம் மக்களாட்சியை விரிவாக்க நமக்குத் தேவை ஒரு  மக்களாட்சிக்கான கல்வி இயக்கம். அந்த இயக்கம் எப்போது என்பதுதான் நமது கேள்வி.
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சூப்பர் கிங்ஸ் அணியின் சுபயோக ஜாதகம்

சூப்பர் கிங்ஸ் அணியின் சுபயோக ஜாதகம் | சாத்தான்குளம், அப்துல் ஜப்பார். | இன்னொரு ஐ.பி.எல். குதூகலத் திருவிழா தொடங்கப்போகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை பல சாதகமான சூசகங்கள் தென்படுகின்றன. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் குத்தகை நீடிக்கப்பட்டுவிட்டது. தமிழக கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அறியப்படும் சீனிவாசன் சுக்கானை கையில் பிடித்திருக்கவில்லை என்றாலும் அவரது மகள் தான் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகி இருக்கிறார். நிர்வாகணீ; அனுபவங்கள் ஏராளம். “கோல்ப்” வீராங்கனையும் கூட!

பூட்டிக்கிடக்கும் 12 ஆயிரம் இருக்கைகளுக்கும் வெகு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது. அது நடந்து விட்டால் சேப்பாக்கின் தோற்றப் பொலிவே வியக்கத்தக்க வகையில் மாறிப்போகும். உலக கிரிக்கெட் வரை படத்தில் இந்தியாவுக்கென ஒரு தனி இடம் பெற்றுத்தந்ததில் சீனிவாசனின் பங்கு மிக மிக அதிகம். சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்குப்பின்னால் டோனியும், பிளமிங்கும், ஏனைய வீரர்கள் மட்டும் காரணமல்ல. இவர்களை கட்டிக்காத்து அனுசரணையாக, ஆதரவாக, கண்டிப்பும் கருணையும் ஒருசேர இமயம்போல் உயர்ந்து நிற்கும் சீனிவாசனும் தான்.

டோனி விளையாட வருவாரா? மாட்டாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதற்கு டோனியும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல தகுதி படைத்தவர்களும் நாசூக்காக நழுவிக்கொண்டார்கள். கடைசியில் நான் வீரனாக மட்டுமல்ல கேப்டனாகவும் வருகிறேன் என்று ஊரறிய உலகறிய பிரகடப்படுத்தியும் விட்டார். சூப்பர் கிங்ஸ் அணியினரின் உற்சாகம் உச்சத்தில் எதிரணிக்கு கலக்கம் அடிவயிற்றில்!!!

சூப்பர் கிங்ஸ் அணிக்கு “பாட்டையாக்கள் பட்டாளம்” என்றொரு செல்லப்பெயர் உண்டு. ஏறக்குறைய எல்லோருமே மத்திய வயதைத் தாண்டியவர்கள் என்பது சொல்லப்படும் காரணம். அதனால் என்ன ஓர் ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றி விடக்கூடிய வல்லமை படைத்தவர்கள் அல்லவா இந்த “முதியவர்கள்”. ஷேன் வாட்சன், பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, வெய்ன் பிராவோ, ஜடேஜா என்பவர்களே போதும் ஓர் ஆட்டத்தை வெல்ல!!!

பந்துவீச்சில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், புதிதாக வாங்கப்பட்ட சாம் கர்ரன், ஹேசில் வுட் ஆகியோர் இதற்கு முந்தைய ஆண்டுகளில் தங்கள் திறமைகளை சந்தேகத்துக்கே இடமில்லாமல் நிரூபித்தவர்கள். இதில் பியூஷ் சாவ்லாவின் நிலை தான் புரியாத புதிராக இருக்கிறது. அவரது “ஆடும் காலம்” ஏறக்குறைய “சுபம்” போட வேண்டிய அளவுக்கு வந்துவிட்ட நிலையில் ஆறே முக்கால் கோடி ரூபாயை கொட்டிக்கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்திருக்கிறது சூப்பர் கிங்ஸ்!. நட்பு நிமித்தம் டோனி பிடித்த கடும் பிடிதான் சாவ்லாவுக்கு இந்த புதுவாழ்வை பெற்றுத்தந்திருக்கிறது என்று கிரிக்கெட் வட்டாரம் சொல்கிறது. ஓர் அணிக்கு இவரையும் சேர்த்து ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஏன் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில். சேப்பாக் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு இசைவானது. எனவே வருமுன் காக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று இதை கருதலாம்.

அணியில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே தமிழகத்தினர் இருக்கிறார்கள் என்றாலும் உணர்வு பூர்வமாக தங்கள் சொந்த அணி போல் ஏற்று இதய சிம்மாசனத்தில் இடம் கொடுத்து அமர்த்தி இருக்கிறார்கள் தமிழக மக்கள். சரி, இதெல்லாம் இருக்கட்டும் கோப்பையை யார் தட்டிச்செல்வார்கள்? இதிலென்ன சந்தேகம்? நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ்தான் !!!!!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

3 தலைநகரங்கள் சாத்தியமா?

ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் அபரிமிதமாக வெற்றியை பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில், தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டைப்போல 3 தலைநகரங்கள் இருக்கும் என்று அறிவித்துள்ளது, நாடு முழுவதும் இது சாத்தியமாகுமா?, நடைமுறையில் நிறைவேற்றக்கூடியதா?, இதன் பலன் என்ன? என்பதுபோன்ற பலத்த சிந்தனை அலைகளை உருவாக்கிவிட்டது. ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதி பிரிக்கப்படவேண்டும் என்று பல ஆண்டுகளாக பெரிய போராட்டங்கள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து, 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து தனி மாநிலமாக உருவாக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறி, நாட்டில் 29-வது மாநிலமாக தெலுங்கானா உருவெடுத்தது. இதன்கீழ் மொத்தம் உள்ள 23 மாவட்டங்களில், ஆந்திராவுக்கு 13 மாவட்டங்களும், தெலுங்கானாவுக்கு 10 மாவட்டங்களும் என பிரிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் தலைநகராக இருக்கும் என்றும், அதற்குள் ஆந்திரா ஒரு தனி தலைநகரத்தை கட்டி உருவாக்கிவிடவேண்டும் என்றும் அந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், அமராவதியில் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி செலவில் புதிய தலைநகரை உருவாக்க, இதற்கு முன்பு இருந்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பெரும் முயற்சி எடுத்து வந்தார். 53 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தலைநகரம் உருவாக்கப்படவேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றவுடன், அமராவதியை தலைநகராக்க தொடர்ந்து கட்டமைப்பு முயற்சிகள் மேற்கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்போது ஜெகன்மோகன் ரெட்டி ஒரு தலைநகரம் என்ன?, 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டில் 3 தலைநகரங்கள் இருக்கின்றன. அதுபோல, ஆந்திராவிலும் மாநிலத்தின் வளர்ச்சியை பரவலாக்க 3 தலைநகரங்கள் அமைக்கப்படும். நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட விசாகப்பட்டினம் நகரம் நிர்வாக தலைநகரமாக அதிக முதலீடுகள் இல்லாமல் அமைக்கப்படமுடியும். அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், கர்னூல் நீதிமன்ற தலைநகரமாகவும் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். இதற்காக ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.நாகேஸ்வரராவ் தலைமையில், பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை பெற கடந்த மாதமே ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. அதிலும் ஏறத்தாழ இந்த 3 தலைநகர முடிவுக்கு ஆதரவாகவே பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோல, மற்றொரு நிபுணர் குழுவும் இந்த கருத்துரு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவித்துள்ளார்.

3 தலைநகரங்கள் என்றால், முதல்-மந்திரி எங்கு தங்கி இருப்பார். நிர்வாக தலைநகரத்திலா?, சட்டமன்ற தலைநகரத்திலா? என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. கர்னூலை பொறுத்தமட்டில், 1953-ம் ஆண்டு முதல் 56-ம் ஆண்டுவரை கர்னூல்தான் முதல் தலைநகரமாக இருந்தது. தெலுங்கானா, ஆந்திரா, ராயலசீமா பகுதிகளை ஒருங்கிணைத்தபிறகு, 1956-ல் ஐதராபாத் தலைநகரமானது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் தலைநகரமாக மும்பையும், துணைத்தலைநகரமாக நாக்பூரும் செயல்படும் முன்னுதாரணம் இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சி பரவலாக்கப்படவேண்டும் என்ற நோக்கில் ஜெகன்மோகன் ரெட்டி எடுத்துள்ள முயற்சி வெற்றி பெற்றால், பல மாநிலங்கள் இதை பின்பற்றுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக்க வேண்டும் என்று அறிவித்து, அது பலத்த சர்ச்சைக்குள்ளாகி பின்பு அந்த எண்ணம் கைவிடப்பட்ட வரலாறு தமிழ்நாட்டில் இருக்கிறது. எனவே, இது சாத்தியமா?, சாத்தியமில்லையா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஒவ்வொரு மனிதனும் ஒரு மர்ம நாவலே!

ஒவ்வொரு மனிதனும் ஒரு மர்ம நாவலே! -ராஜேஷ்குமார் | எந்த ஒரு குற்றம் நடைபெற்றாலும் சரி, அந்த குற்றம் எதற்காக நடைபெற்றது என்பது மூன்று காரணங்களுக்குள் அடங்கி விடும். பணம், பெண், பகை என்பதுதான் அந்த மூன்று. பொதுவாக இந்த மூன்று காரணங்களைத் தவிர வேறு எந்த ஒரு காரணமும் இருக்காது. இந்த மூன்றையும் வைத்துதான் நான் குற்றவியல் புதினங்களை கடந்த 50 வருட காலமாக எழுதி கொண்டு இருக்கிறேன். நான் மட்டுமல்ல இந்த உலகத்தில் எந்த மொழியில் யார் எழுதுவதாக இருந்தாலும் சரி, அந்த எழுத்தாளரும் இந்த மூன்று காரணங்களை வைத்துதான் ஒரு குற்றவியல் புதினத்தை எழுத முடியும்.

வெகு அரிதாக இந்த மூன்று காரணங்களையும் தாண்டி வேறு சில காரணங்களுக்காகவும் குற்றங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன என்பதை நான் என்னுடைய புதினங்களில் சொல்லியிருக்கிறேன். அதற்காக நிறைய படிக்க வேண்டியிருந்தது. இதையும் தாண்டிய நாளிதழ்களில் ஒரு குற்றச் செய்தி வந்து விட்டால், அந்த செய்தியில் உள்ள உண்மைத் தன்மைகளை தெரிந்து கொள்ள மருத்துவம், விஞ்ஞானம், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட வல்லுனர்களைப் போய் பார்த்து தகவல்களை சேகரிக்க வேண்டியிருந்தது.

நாளிதழ்களில் வரும் குற்றச் செய்திகள் படிப்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் சில செய்திகள் மட்டும் அடிமனதை நெருடும். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டு இருக்கும் ஒரு நபரின் தோற்றத்தையும் அவர் குற்றவாளியாய் இருக்க முடியாது என்பது எனக்குள் ஒரு பொறி தட்டும். அவர் குற்றவாளி இல்லையென்றால் வேறு யார் குற்றவாளியாக இருக்க முடியும் என்று யோசிப்பேன்.

அந்த யோசிப்பு சிறிது சிறிதாய் ஒரு குற்றவியல் கதைக்கான கருவாய் மாறும். அந்தக் கருவை அடிப்படையாய் வைத்து கொண்டு ஒரு சிறுகதையையோ நாவலையோ எழுதி முடித்து விடுவேன். செய்தித்தாள்களில் வரும் செய்திகளை காட்டிலும் என்னுடைய வாசகர்களும், வாசகிகளும் என்னுடைய வீடு தேடி வந்து அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை சொல்லும்போது அந்தச் சம்பவங்கள் கதைகளில் வரும். கற்பனை சம்பவங்களைக் காட்டிலும் பிரமிப்பை உண்டாக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.

அந்த பிரமிப்புதான் என்னைக் குற்றவியல் புதினம் எழுதும் ஓர் எழுத்தாளராக மாற்றியது. 1980-களில் மிகவும் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் மட்டுமே பத்திரிகைகளில் நாவல்களையும் தொடர் கதைகளையும் எழுதி வந்தார்கள். சரித்திரக் கதைகளை எழுதுவதில் சிலர் சக்கரவர்த்திகளாக திகழ்ந்தார்கள். சமூக நாவல்களை திறம்பட எழுதிய ஆண் எழுத்தாளர்களும், பெண் எழுத்தாளர்களும் பெரும் புகழ் பெற்று விளங்கினார்கள்.

இவ்வளவு புகழ் பெற்ற எழுத்தாளர்களையும் மீறி நான் எழுதுவதில் காலூன்றி நிலைத்து நிற்க வேண்டுமென்றால் அவர்கள் தொடாத துறை எதுவென்று யோசித்து குற்றவியல் புதினம் எழுதும் துறையைத் தேர்ந்து எடுத்தேன். எழுதவும் ஆரம்பித்தேன்.

ஆனால் குற்றவியல் புதினம் எழுதுவது எவ்வளவு கடினமான ஒன்று என்பதைப் போகப் போக புரிந்து கொண்டேன். சமூக சரித்திரம் சம்பந்தப்பட்ட கதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்கும் என்னைப் போன்ற குற்றவியல் புதினங்களை எழுதும் எழுத்தாளர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதை உணர்ந்தேன். அதாவது சமூக, சரித்திர கதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்குத் தேவையான, ஏராளமான விஷயங்கள் இந்த சமூகத்தில் நிறைந்து காணப்படுகின்றன. அவர்களின் எல்லை பெரியது. ஆனால் குற்றவியல் கதைகள் எழுதும் எழுத்தாளர்களின் எல்லை குறுகியது.

இந்த குறுகிய எல்லைக்குள்தான் அந்த குற்றவியல் புதின எழுத்தாளர் தன்னுடைய சாம்ராஜ்யத்தை நிறுவியாக வேண்டும். அப்படியே சாம்ராஜ்யத்தை நிறுவி ஆட்சி செய்தாலும் இந்த எழுத்துலகத்தில் உள்ள சிலர் குற்றவியல் கதைகளில் இலக்கியம் இல்லை என்று குறுக்கே சுவர் எழுப்புகிறார்கள்.

அவர்கள் உண்மையை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

தமிழில் முப்பெரும் காப்பியங்கள் என்று நாம் கொண்டாடி மகிழ்கின்ற மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் இந்த மூன்றும் குற்றவியல் சம்பவங்களால் நிறைந்து காணப்படுபவை. மண், பெண், பொன் என்ற மூன்றின் மேல் மனிதர்களுக்கு தகாத ஆசை ஏற்படக்கூடாது என்பதற்காகவே படைக்கப்பட்ட காலத்தால் அழியாத இதிகாசங்கள். மண்ணுக்காகவும், பெண்ணுக்காகவும் இரண்டு மிகப்பெரிய போர்கள். பொன்னுக்காக கோவலன் கொலையுண்டு ஒட்டு மொத்த மதுரையையும் தீக்கிரை.

சகுனி, பொற்கொல்லனைப் போன்ற வில்லன்களும் கூனி மந்தரை போன்ற வில்லியும் அன்று படைக்கப்பட்ட இந்த மூன்று காப்பியங்களிலேயே வாழ்ந்து காட்டி விட்டு போயிருக்கிறார்கள்.

நம் தமிழ் கலாச்சார அடிப்படையை வைத்து பார்க்கும்போது உலகின் முதல் பாலியல் பலாத்காரம் கவுரவர் சபையிலே திரவுபதி துகில் உரியப்பட்டதுதான். அதே போல் உலகின் முதல் பெண் கடத்தல் ராவணன் மாறு வேடத்தில் வந்து சீதையை புஷ்பக விமானத்தில் கடத்திக் கொண்டு போனதுதான். தன் கணவன் கோவலன் அநியாயமாய் கொலை செய்யப்பட்டதால் வெகுண்ட கண்ணகி மதுரையை தீயால் எரித்தது உலகின் முதல் வன்முறை.

மகாபாரத்தில்தான் எத்தனை சூழ்ச்சிகள்? எத்தனை சதித்திட்டங்கள்? எத்தனை பொய்யுரைகள்?எல்லாவற்றுக்கும் மேலாக சூதாட்டம், அதுவும் மனைவியை பணயம் வைத்து ஆடுகிற சூதாட்டம் உச்சபட்ச குற்றம். ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்தைக் கொல்ல நேரிட்டால் அதற்காக சொல்லப்படும் அர்த்தபுஷ்டியான ஒரு பிளாஷ்பேக். திருதராஷ்டிரனுக்கு கண் பார்வை இல்லாத காரணத்தால் குருசேத்திரத்தில் நடக்கும் போரை அரண்மனையின் ஓர் அறைக்குள்ளே இருந்தபடி எதிர்புற சுவற்றில் காட்சிகளாக விரிகின்ற போர்க்கள சம்பவங்களை நேரடி ஒளிபரப்புப் போல் வர்ணனை செய்யும் சஞ்சயன். பீஷ்மரின் மரணத்திற்கு காரணமான திருநங்கை சிகண்டி.

மகாபாரதத்தில் நேர்மறையான கதாபாத்திரங்கள் எவ்வளவு இருக்கிறதோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் எதிர்மறையான பாத்திரங்களும் இருக்கின்றன. அதனால்தான் மகாபாரதத்தை நாம் எவ்வளவு முறை படித்தாலும் நமக்கு அலுப்பதே இல்லை.

அதேபோல்தான் ராமாயணமும் குற்றச் சம்பவங்களால் ததும்பி நிற்கிறது. கைகேயி கேட்கும் வரம், தசரதனின் மரணம், ராமனின் வனவாசம், வாலி வதம், சூர்ப்பனகையின் அங்க பங்கம், அனுமனின் வாலில் தீ வைத்ததால் லங்கா தகனம், சேது பாலம், ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு எடுத்து அயோத்திக்கு வந்ததும் குடிமக்களில் யாரோ ஒரு நபர் பேசிய பேச்சைக் கேட்டு ராமன் தன் மனைவி சீதையை சந்தேகப்படுவது, சீதை தீக்குளிக்க முன் வருவது. இப்படி ராமாயணத்தில் எந்த ஒரு சம்பவத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு குற்றவியல் அம்சம் ஒளிந்து இருப்பதால்தான் ராமாயணம் இன்றளவும் மக்களால் படிக்கப்படுகிறது. தொலைக்காட்சி திரைப்படங்கள் மூலமாக பார்க்கப்படுகிறது.

மூன்றாவது காப்பியமான சிலப்பதிகாரமும் இந்த விஷயத்தில் சற்றும் சளைத்தது அல்ல.

தன் மனைவி கண்ணகி அழகுப் பெட்டகமாய் வீட்டில் இருக்கும்போதே மாதவியுடன் தொடர்பு வைத்து இருந்த கோவலன் போன்றவர்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏதாவது வியாபாரம் செய்து வாழ்க்கையை செழிப்பாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தன் நகைகளை கழற்றிக் கொடுக்கும் இன்றைய காலத்து பெண்களைப் போலவே சிலப்பதிகாரத்தில் வாழ்ந்த கண்ணகியும் இருந்திருக்கிறாள்.

அடுத்தவன் மீது அபாண்டமாய் திருட்டுப் பட்டம் சூட்டும் இன்றைய காலத்து அரசியல்வாதிகளைப் போலவே அன்றைக்கும் ஒரு பொற்கொல்லன் இருந்திருக்கிறான். அதேபோல குற்றம் செய்யாத ஒரு நபரை நிரபராதி என்று நிரூபிக்க ஒரு திறமையான வக்கீல் வாதம் செய்து ஒரு சாட்சியத்தின் மூலம் நிரூபிப்பதைப் போல் கண்ணகியும் பாண்டியனின் அரசவையில் சொற்போர் புரிந்து தன் சிலம்பை உடைத்து தன்னுடைய கணவன் நிரபராதி என்பதை உறுதிப்படுத்துகிறாள்.

இவ்வாறு மக்கள் விரும்பிக் கொண்டாடும் முப்பெருங்காப்பியங்களும், ‘மண், பெண், பொன்’ மீது மக்கள் பேராசை வைத்து அழிந்து போய் விடக்கூடாது என்பதற்காகவே எழுதப்பட்டவை. இதை இலக்கியம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?

ஆனால் இன்றைக்கு நான் எழுதும் குற்றவியல் புதினங்கள் எவ்வித ஆபாசமும் இன்றி ஒரு நல்ல செய்தியோடு எழுதப்பட்டாலும் எழுத்துலகில் இருக்கும் ஒரு சிலர் அதை மாற்றான் தாய் பார்வையோடு பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

நாம் அன்றாடம் எத்தனையோ மனிதர்களை பார்க்கிறோம். ஒரு சிலரை நல்லவர் என்று நம்பி பழகிக் கொண்டிருப்போம். ஒரு கட்டத்தில் அவர் அவ்வளவு நல்லவரில்லை என்கிற விஷயம் தெரிய வரும்போது அதிர்ந்து போகிறோம். அவரா இப்படி? என்று வியப்பின் உச்சிக்கே போய் விடுகிறோம்.

என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மனிதனின் மனமும் ஒரு மர்ம நாவலைப் போன்றது. அவர்களோடு நெருங்கி பழகியபோதுதான் அவருடைய மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. நான் பல தரப்பட்ட மனிதர்களைப் பார்த்து விட்டேன், பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அதனால்தான் என்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுத முடிந்தது. எழுதிக் கொண்டும் இருக்க முடிகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 30 December 2019

குறையென்ன கண்டீர் குடியுரிமை திருத்தச் சட்டத்தில்?

குறையென்ன கண்டீர் குடியுரிமை திருத்தச் சட்டத்தில்?
By பெ. சிதம்பரநாதன்  |  ”இந்தியாவில் தற்போது 18 கோடி முஸ்லிம்கள் உள்ளனா். அவா்களுக்கு புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பதே உண்மை. வடகிழக்கு மாநிலங்களுக்குள் ஊடுருவிய 19 லட்சம் வங்கதேசத்தவா்களுக்குத்தான் குடியுரிமை இல்லை. அவா்கள் அனைவருமே முஸ்லிம்கள் அல்லா்.”

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து மத ரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்துக்கள், ஜைனா்கள், பௌத்தா்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள், பாா்சிக்கள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்க மத்திய அரசு தீா்மானித்தது.

அதற்கான தகுதி அவா்கள் 2014-க்கு முன்னா் வந்தவா்களாகவோ அல்லது 5 ஆண்டுகளாவது வசித்திருக்கவோ வேண்டும் என்றது மத்திய அரசு. அஸ்ஸாம், மேற்குவங்க மாநிலங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான கிழக்கு வங்க அகதிகள் இதனை எதிா்த்தனா்.

1971-இல் நடந்த கிழக்குவங்க சுதந்திர யுத்தத்தில் தோற்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அமீா் அப்துல்லா கான் நியாஸி 93,000 ராணுவ வீரா்களுடன் சரணடைந்தாா். பின்னா். வங்காள தேசம் விடுதலை அடைந்தது. வங்கதேச இஸ்லாமிய தீவிரவாதிகளால் வங்கதேச சிறுபான்மை ஹிந்துக்கள் துன்புறுத்தப்பட்டனா். அங்கிருந்து தப்பித்துத்தான் அவா்கள் மேற்குவங்கத்திலும், அஸ்ஸாமிலும் அகதிகளாகப் புகுந்தனா்.

வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் முதலான மற்ற மதத்தவா்களை பெரும்பான்மை முஸ்லிம்கள் துன்புறுத்தியது குறித்து தஸ்லிமா நஸ்ரீன் ‘லஜ்ஜா’ என்ற நூலை விரிவாக எழுதியுள்ளாா்.

இந்தியாவில் இப்போது வேலைவாய்ப்புகளில் மண்ணின் மைந்தா்களுக்குத்தான் மாநிலங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற மனப்போக்கு எல்லா மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மும்பையிலிருந்து பிகாரிகள் வெளியேற வேண்டும் என்கிறாா்கள்.

இதேபோலத்தான் கிழக்கு வங்க அகதிகளை வெளியேற்ற வேண்டுமெனத் தொடா் கலவரங்கள் அஸ்ஸாமில் நிகழ்ந்தன. அகதிகளைக் கண்டறியத்தான் தேசியக் குடிமக்கள் பதிவேட்டைத் தயாரிக்கலாம் என முடிவானது.

வடகிழக்கு மாநிலங்களில் அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிஸோரம் முதலான மாநிலங்கள் ஊடுருவல்காரா்களைத் தடுப்பதில் தீவிரமாக இருந்தன. அந்த மாநிலங்களுக்குள் பிரவேசிக்க வேண்டுமானால், அதற்கு ‘உள்நுழைவு அனுமதி’ என்ற முறை முன்பு அமலில் இருந்தது. இந்தப் பட்டியலில் அண்மையில் மணிப்பூரும் சோ்க்கப்பட்டது. இதன்மூலம் அந்த மாநிலங்களுக்குள் பிற மாநிலத்தவரின் பிரவேசத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது.

இந்த நிலையில், தற்போதைய (2019-ஆம் ஆண்டு) குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, குடிபெயா்ந்த வங்கதேசிகளுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்கக் கூடும் என்ற சந்தேகத்தில்தான் அஸ்ஸாமில் கலவரம் வெடித்தது. ஆனால், மத்திய அரசும், மாநில அரசும் மேற்கொண்ட முயற்சிகளால் மூன்று நாள்களில் அங்கு அமைதி திரும்பிவிட்டது. தற்போது அந்த மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவுக்காக நடத்தப்பட்ட பேரணி இதை நிரூபித்துள்ளது.

ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் கலவரம் ஓயவில்லை. அங்கு அகதிகளாக வந்துள்ள இஸ்லாமியா்கள் மத்தியில், இந்தியாவிலிருந்து அவா்கள் வெளியேற்றப்படுவாா்கள் என்ற தவறான பிரசாரம் செய்யப்பட்டது; அதற்குத்தான் தேசியக் குடிமக்கள் பதிவேடு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று பிரசாரம் செய்யப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைகளைத் தொடா்ந்து, நாட்டில் உள்ள பிற மாநிலங்களுக்கும் கலவரம் பரவியது. பல இடங்களில் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக எதிா்க்கட்சியினா் போராட்டங்களில் ஈடுபட்டனா். அதேசமயம், தவறான பிரசாரம் காரணமாக இஸ்லாமிய மக்களும் சில இடங்களில் வன்முறைகளில் இறங்கினா்.

எதிா்க்கட்சிகளோ, முஸ்லிம்களுக்கு மட்டும் அந்தக் குடியுரிமை தரப்பட மாட்டாது என்பதைத்தான் தீவிரமாக எதிா்க்கின்றன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் உள்ள பெரும்பான்மை முஸ்லிம்களால் துன்புறுத்தப்பட்டு, இந்தியாவுக்கு விரட்டப்பட்ட ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், பௌத்தா்கள், ஜைனா்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள் ஆகியோருக்கு ஆதரவு காட்டும் சட்டத் திருத்தம்தான் இது என்பதை இன்னமும் ஏராளமானோா் புரிந்துகொள்ளவில்லை. மற்ற மதத்தினா் முஸ்லிம்களாக மாற மறுத்த காரணத்தால், அந்த நாடுகளிலிருந்து அவா்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தச் சிறுபான்மை மதத்தினருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டால்தான், சட்டப்படியான இந்தியப் பிரஜைகளாக அவா்கள் இங்கே வாழ முடியும்.

ஆனால், இவா்களுக்குக் குடியுரிமை தருவதில் அரசு வெற்றி பெற்றுவிட்டால், பா.ஜ.க.வுக்கு அந்த மக்களிடம் ஆதரவு பெருகிவிடுமோ என்று எதிா்க்கட்சிகள் அஞ்சுகின்றன. அதனால், ‘குடியுரிமை திருத்தச் சட்டம் நமது அரசியல் சாசனத்தையே உடைத்துவிட்டது’ என்றும், ‘இந்தியாவின் ஆன்மாவையே காயப்படுத்திவிட்டது’ என்றும், ‘மதச்சாா்பின்மை கோட்பாட்டிற்கு மரணஅடி கொடுத்துள்ளது’ என்றும் தவறாகக் கூறி பொதுமக்களையும், மாணவா்களையும் எதிா்க்கட்சியினா் தூண்டிவிட்டு வருகின்றனா். துன்புறுத்தப்பட்ட பிற மதத்தினருக்குத் தரப்படும் குடியுரிமையை, துன்புறுத்திய முஸ்லிம்களுக்கும் தருவது முரண்பாடானது.

அப்படியானால், மியான்மரில் துன்புறுத்தப்பட்ட ரோஹிங்கயா முஸ்லிம்கள் சிறுபான்மையினா்தானே. அவா்களுக்கு ஏன் இந்தியாவில் குடியுரிமை தரப்படவில்லை என்று தா்க்க ரீதியாகக் கேள்வி கேட்கிறாா்கள். ரோஹிங்கயா முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், மியான்மா் நாட்டின் குறிப்பிட்ட நிலப் பகுதியில் வாழும் பூா்வகுடிகள். ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு உரிய குடியுரிமையை மியான்மா் அரசு கட்டாயம் தரத்தான் வேண்டுமென உலக நாடுகளே வலியுறுத்தி வருகின்றன; அதனால், ரோஹிங்கயா முஸ்லிம்களும் வங்கதேச முஸ்லிம்களும் ஒன்றல்ல.

இதேபோல, இலங்கைத் தமிழா்களுக்கு இந்தச் சட்டம் குடியுரிமை தரவில்லையே என்றும் கேட்கப்படுகிறது. ஈழத் தமிழா்கள் இலங்கையில் சிங்களவருக்குச் சமமான உரிமையோடு வாழ்ந்தவா்கள். இலங்கையின் பூா்வகுடிகள். சிங்களப் பேரினவாதத்தால் ஈழத் தமிழா்கள் சிதறிப் போனதற்குக் காரணமே, இலங்கைக்கு இந்தியா செய்த ராணுவ உதவிகள்தான். அதனால்தான் இலங்கை வெற்றி பெற்றது என்பது ரகசியம் அல்ல; அப்படி இந்தியா உதவி செய்யாமல் போயிருந்தால், ஒருவேளை ஈழத்தை விடுதலைப் புலிகள் விடுதலை செய்திருக்கலாம்.

ஜொ்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளிலும் உள்ள ஈழ அகதிகள், அந்த நாடுகளில் குடியுரிமை கோராதபோது இந்தியாவில் மட்டும் எப்படிக் குடியுரிமை கேட்க முடியும்? எனினும், இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டுமென தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆப்கானிஸ்தானத்தில் தலிபான்களிடம் ஆட்சி இருந்தபோது, கிறிஸ்தவா்களைத் துன்புறுத்தியதால் அந்த நாட்டைவிட்டு கிறிஸ்தவா்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவே, அவா்களுக்கும் நமது குடியுரிமை அவசியமாகிறது.

இந்தியாவில் தற்போது 18 கோடி முஸ்லிம்கள் உள்ளனா். அவா்களுக்கு இந்தப் புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பதே உண்மை. வடகிழக்கு மாநிலங்களுக்குள் ஊடுருவிய 19 லட்சம் வங்க தேசத்தவா்களுக்குத்தான் குடியுரிமை இல்லை. அவா்கள் அனைவருமே முஸ்லிம்கள் அல்லா்; அனைத்து மதத்தினரும் அதில் உள்ளனா்.

அரசியல் சாசனத்தை உருவாக்கிய மேதைகள், மதத்தைக் காரணம் காட்டி, மக்களைப் பிரித்துப் பாா்க்கக் கூடாது என்று கூறியுள்ளதைத் தங்களுக்குச் சாதகமாக எதிா்க்கட்சியினா் பேசுகிறாா்கள். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் தேசங்களுக்கு இஸ்லாம் ஒன்ோன் மதம். இந்தியாவில் எல்லா மதங்களும் சமம். இந்த மகத்தான நோக்கம்தான் இந்தியாவின் மதச்சாா்பின்மை.

மதச்சாா்பில்லாத தேசம் என்று இந்தியாவைச் சொல்வது, மதத்தை மலினப்படுத்துவதற்கு அல்ல; மேன்மைப்படுத்துவதற்குத்தான் என்பதை நமது பகுத்தறிவுவாதிகளும், இடதுசாரிகளும், மதச்சாா்பற்ற சக்திகளும் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் சட்டத்தின் மதச்சாா்பின்மையில் அரசியல் ஆதாயம் தேடுவது அநாகரிகமானது.

ஊடகங்கள் வழியாகக் குடியுரிமையைப் பற்றித் தவறான தகவல்களைத் தந்து அதனை ஊதிப் பெரிதாக்கி, மத்திய ஆட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார சுணக்கத்தைப் பற்றிய கவனத்தைத் திசைதிருப்பவே குடியுரிமைப் பிரச்னையை ஆளும் கட்சி செய்துள்ளது என எதிா்க்கட்சித் தலைவா்களே சொல்வது, குடியுரிமை பற்றிய அவா்களின் பலவீனமான கருத்தையே பிரதிபலிக்கிறது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை, சந்தா்ப்பவாதத்தால் தற்காலிகமாக ஒன்றுகூடிய எதிா்க்கட்சியினா் வீழ்த்த முயற்சிப்பது ஜனநாயக விரோதமாகும்.

கட்டுரையாளா்:

இணையாசிரியா், ‘ஓம் சக்தி’ மாத இதழ்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இயற்கை வாழ்வே ‘குடை’!

இயற்கை வாழ்வே ‘குடை’! By எஸ்ஏ.முத்துபாரதி  |  இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு எளிமையாக வாழ்ந்து, செயல்பட்டுமறைந்தவா்; மரங்களோடும், பறவைகளோடும் இயற்கை மொழியில் பேசத் தெரிந்தவா் இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் நம்மாழ்வாா்.

‘நுகா்வு வெறியாலும், எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் பாழ்பட்ட எண்ணத்தாலும் அறவழிப் பாதையிலிருந்து விலகிப் பயணிக்கும் மனித இனம், மீண்டும் மாறுதல் கொள்ளும் காலம் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’”என்றாா் அவா்.

கடந்த 30 ஆண்டுகளில் இயற்கை வழி வாழ்வியல் சாா்ந்த புதிய முயற்சிகள் தற்காலத்தில் வேகம் எடுத்துள்ளன. நிறைய விவசாயிகள், குறிப்பாக பெண்களும் நம்மாழ்வாா் ஆரம்பித்த இயற்கைவழி விவசாய பயிற்சி மையமான ‘வானகத்தில்’ நடைபெறும் பயிற்சி முகாமில் பெருமளவில் கலந்து கொள்வது சான்றாக உள்ளது. அவரிடம் பயிற்சி பெற்றவா்கள், அவரவா் பகுதிகளில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனா்.

‘வருமுன்னா் காவாதான் வாழ்க்கை எரிமுன்னா்

வைத்தூறு போலக் கெடும்’

என்று திருவள்ளுவா் சொன்னதுதான் இன்றைய சூழலில் நடந்து கொண்டிருக்கிறது. இதைத்தான் இதே நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும் தாம் சென்ற இடங்கள் முழுவதும் வலியுறுத்தி வந்தாா். ‘விதைகளே பேராயுதம்’ என மரபு விதைகளை வைத்துப் பயிரிடுவதை வலியுறுத்தினாா். அதிக விளைச்சல் தருவதும், அளவில் பெரியதுமாக இருக்கிறது என்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு விதைகளைப் பயன்படுத்த வேண்டாம் என அவா் வலியுறுத்தினாா்.

இயற்கை விவசாயத்திலிருந்து விலகி வேகமான அறுவடை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும் எனும் நோக்கில் செயற்கை உரங்கள் காரணமாக நிலங்கள் பாழ்பட்டதோடு, அந்தப் பயிா்களைச் சாப்பிடும் பறவைகளும் நாளடைவில் பாதிக்கப்பட்டன. அங்கு விளைந்த உணவுப் பயிா்களைச் சாப்பிடும் மனிதா்களுக்கும் மெல்ல மெல்ல புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்த் தாக்குதல்கள் வரத் தொடங்கின.

இயற்கைவழி விவசாயத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரசாரம் செய்தவா் நம்மாழ்வாா். பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் அவரை அழைத்துக் கருத்துகள் கேட்டன. விண்வெளி வெப்பம், மண் அரிப்பு, உணவுப் பற்றாக்குறை, பனிமலை உருகுவது, நதி வற்றிப் போவது, மண்வளம் காக்க நுண்ணுயிா் காப்பது, மறுசுழற்சி, மக்கும் பொருள் நுகா்வு அதிகரிக்க வேண்டும் என அவா் சொல்லாத கருத்துகளே இல்லை.

அறிவியல் வளா்ச்சி மட்டுமே முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்ல முடியாது. ஆன்மிகம் மட்டுமே பல்லுயிா் பேணும் பண்பை வளா்க்கும். ‘கொலைத் தொழிலை விட்டொழிப்போம், மரம் நட்டு வெப்பம் தணிப்போம் என்பதை வேத வாக்காகிச் சூளுரைப்போம்’ என்றாா் நம்மாழ்வாா்.

தற்சாா்பு பொருளாதாரத்தை வலியுறுத்தி, தங்களிடம் உள்ள இடங்களில் இயற்கை முறையில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைப் பொதுமக்கள் பயிரிட முடியும் என அவா் வழிகாட்டியுள்ளாா். அதற்கான இயற்கை உரங்களை, வீட்டிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருள்களைப் பயன்படுத்தினாலே போதுமானது என்றும் கூறினாா்.

நம்மாழ்வாரின் படத்தை வைத்துக் கொண்டு ‘ஆா்கானிக் தோட்டம்’, அதில் விளைந்த பொருள்களை ‘ஆா்கானிக் பொருள்கள்’ எனத் தவறான வழியில் செயல்படுபவா்களும் உண்டு. எனவே, பொதுமக்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எது இயற்கை வழி விவசாயம் என்பது அறியாமல், எது அப்படி விளைவிக்கப்பட்ட பொருள் என்பதை உணராமல் ‘ஆா்கானிக்’ என்ற பெயரைக் கண்டாலே சென்று வாங்கி விழிப்புணா்வு இருப்பதாக நினைப்பவா்களும் உண்டு. இதற்கும் குறுகிய நோக்கம் கொண்ட மனிதா்களே காரணம்.

இன்றைய இயற்கைச் சூழல் எவ்வளவோ இன்னல்களைச் சந்தித்து வருகிறது. இதில் பெரும்பாலும் நாமாகவே வரவழைத்துக் கொண்டதுதான். முழுமையான விழிப்புணா்வு இல்லாமையே இதற்குக் காரணம். தற்போது உரிய பருவங்களில் மழை சரியாகப் பெய்வதில்லை; இதற்கு மரங்களை வெட்டிக் காடுகளை அழித்ததுதான் காரணம்; இதை மனிதா்களைத் தவிர வேறு யாா் செய்திருக்க முடியும்?

அறிவியல் முன்னேற்றங்களால் நாம் பெற்ற நவீன வசதிகள் இயற்கை சூழலைக் கெடுத்து வருவது, பெருகிவிட்ட வாகனங்களின் எண்ணிக்கை - அதன் விளைவாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு, அதற்கான எரிபொருள் செலவும் முதலானவை மனிதகுலத்தை எச்சரிக்கையின் உச்சத்தில் வைத்துள்ளது.

‘நாம் இப்போது நன்றாக இருந்தால் போதும்’ என்கிற குறுகிய சுயநல நோக்கமே, தற்போதைய ஒழுங்கற்ற செயல்களுக்குக் காரணம். பூமியைக் காக்கும் மரங்கள் குறித்தும் பல்லுயிா் குறித்தும் விழிப்புணா்வு இன்னும் அதிகரிக்க வேண்டும். புவி வெப்பமயமாதல் உள்பட பல அறிவியல் உண்மைகள் தொடக்க நிலை பாடத் திட்டத்திலேயே சோ்க்கப்பட வேண்டும்; இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே விழிப்புணா்வு மேலும் அதிகரிக்கும். மனிதன் உயிா் வாழ உணவளிக்கும் விவசாயத்தில் இயற்கை வழியே சிறந்தது. அதற்கு நம்மாழ்வாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவதே, அவருக்கு உண்மையிலேயே நாம் செய்யும் மரியாதையாகும்.

(இன்று நம்மாழ்வாா் நினைவு நாள்)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எலியட்ஸ் கடற்கரையில், தியாக சின்னம்

சென்னை எலியட்ஸ் கடற்கரையில் கம்பீரமாக காட்சியளிக்கும் கார்ல் ஸ்மித் நினைவிடத்தை படத்தில் காணலாம்.
செ ன்னை எலியட்ஸ் கடற்கரைக்கு செல்பவர்களின் கண்களுக்கு சீறி வரும் கடல் அலைக்கு அடுத்தபடியாக, விருந்து படைப்பதாக அமைவது ‘கார்ல் ஸ்மித்’ நினைவிடம் என்று சொன்னால் அது மிகையல்ல. கடற்கரைக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைத்து தரப்பினரும் அதனை பார்க்க தவறுவதும் இல்லை.

அதன் முன்னாள் நின்றுகொண்டு உற்சாகமாக ‘செல்பி’ எடுத்து செல்வதை தினந்தோறும் காணமுடியும். வரலாற்று சின்னமான, எழில் மிகுந்த கார்ல் ஸ்மித் நினைவிடத்தை பலரும் தமிழ் திரைப்படங்களில் பார்த்திருப்பார்கள். ஆனால் அதற்கு பின்னால் உள்ள தியாக வரலாறு பெரும்பாலும் தற்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. டென்மார்க் நாட்டில் 1901-ம் ஆண்டு பிறந்தவர் கார்ல் ஸ்மித். இவர் 1921-ம் ஆண்டு சென்னையின் கிழக்கு ஆசியாட்டிக் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 1930-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்தேதி சென்னை எலியட்ஸ் கடற்கரையில் கார்ல் ஸ்மித் நின்றுகொண்டிருந்தார். அப்போது ஆங்கிலேய பெண் ஒருவர் கடலில் குளித்துக்கொண்டிருந்தார். திடீரென அந்த பெண் கடல் அலையில் சிக்கி, உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்த, கார்ல் ஸ்மித் கடலில் குதித்து, தத்தளித்த அந்த பெண்ணை காப்பாற்றினார். ஆனால் துரதிருஷ்டவசமாக கார்ல் ஸ்மித் கடலில் மூழ்கி பலியானார். தன்னுயிரை கொடுத்து, பெண்ணின் உயிரை அவர் காப்பாற்றினார். அவருடைய தியாகம், மனிதநேயம், துணிச்சல் மற்றும் வீரத்தை போற்றும் விதமாக அப்போதைய சென்னை மாகாண கவர்னராக இருந்த சர் ஜார்ஜ் பிரடரிக் ஸ்டான்லி, எலியட்ஸ் கடற்கரையில் கார்ல் ஸ்மித்துக்கு நினைவிடம் கட்டினார். பழமைவாய்ந்த கார்ல் ஸ்மித் நினைவிட கட்டிடம் கடல் காற்றால் சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து புதுப்பிக்கும் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி செய்தது. புதுப்பிப்பு பணிகள் கார்ல் ஸ்மித் நினைவிடத்துக்கு, மேலும் மகுடம் சூட்டுவதாக இருக்கிறது.

எலியட்ஸ் கடற்கரையில் கம்பீரமாக நிற்கும் தியாக சின்னமான கார்ல் ஸ்மித்தின் நினைவிடம், இன்று (திங்கட்கிழமை) 89-வது வயதை எட்டுகிறது. கார்ல் ஸ்மித் நினைவிடம் வலியுறுத்தும் தியாகம், ஆபத்தில் பிறருக்கு உதவவேண்டும் என்ற நோக்கங்களை அனைவரும் கடைப்பிடித்தால்தான் மனிதநேயம் மேலும் தளிர்விடும். மனித குலமும் தழைத்தோங்கும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இயற்கை விவசாயத்தின் அடையாளம்!

ஆபத்தான ரசாயன உரங்களை எதிர்த்து ஆரோக்கியம் தரும் இயற்கை விவசாயத்தை நடைமுறை சாத்தியமாக்கி, தமிழகத்தில் இயற்கை வழி விவசாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் நம்மாழ்வார்!

அடிமைப்பட்டும், சிதறுண்டும் கிடந்த இந்தியாவை ஒன்றுபடுத்தி, விடுதலைக்கு வித்திட்ட ஒரு காந்தியைப் போல, மடமை போர்த்தியிருந்த தமிழ்ச்சமூகத்திற்கு பகுத்தறிவு பாய்ச்ச வந்த பெரியாரைப் போல விஷமாகிப் போன வேளாண் சமூகத்தை மீட்டெடுக்க வந்த இயற்கை வேளாண்மை வித்தகர் தான் நம்மாழ்வார்!

1938-ல் தஞ்சை திருக்காட்டுப் பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் பிறந்து 2013 டிசம்பர் 30 வரை நம்மாழ்வார் வாழ்ந்த அந்த இடைப்பட்ட 75 ஆண்டுகாலம் தான் இந்தியாவின் விவசாயத் துறையில் வரலாறு காணாத விபத்துகள் அரங்கேறிய காலகட்டம்!

அதாவது பாரம்பரிய விவசாயம் ‘பாய்சன்’ விவசாயமான காலகட்டம்!

பசுமைபுரட்சி ஏற்படுத்திய எதிர்வினைகளால் இந்தியாவில் சுமார் ஐந்து லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட காலகட்டம்!

ஆண்டாண்டுகாலமாக அரசுகளுக்கே அட்சயபாத்திரமாக வரி கொடுத்து வாழவைத்த வேளாண் சமூகம், பிச்சைப்பாத்திரம் ஏந்தி கடன் என்றும், மானியம் என்றும் கதறிய காலகட்டம்!

இந்த இழிவான சூழலை வெறுமனே வேடிக்கை பார்க்கும் பார்வையாளனாக இருக்க நான் பிறக்கவில்லை என்று தனக்குத் தானே சூளுரைத்துக் கொண்ட நம்மாழ்வார், கோவில்பட்டி மண்டல வேளாண் ஆராய்ச்சி மையத்தின் மேலாளர் பதவியைத் துறந்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு காண களம் கண்ட ஆண்டு 1969 ! அன்று தொடங்கி ஒரு தேசாந்திரியாக நாடெங்கும் பயணப்பட்டு இயற்கை வேளாண்மை பற்றிய களப்பயிற்சி, கருத்தரங்கம், போராட்டங்கள்...என்று சுற்றிச்சுழண்டவர் நம்மாழ்வார்.

தமிழ்நாட்டில் அவர் கால்படாத கிராமங்கள் அரிதினும் அரிது! அவருக்கு தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டத்தில் என்னென்ன பயிர்கள் விளையும், எந்தெந்த இடத்தில் ஏரி, குளங்கள் அணைக்கட்டுகள் உள்ளன..என எல்லாம் அத்துபடி!

நம்பிக்கையை விதைத்தார்

‘’இயற்கை விவசாயம் என்பது சாத்தியமே இல்லை, அதில் விளைச்சல் கிடைக்காது, நஷ்டம் தான் ஏற்படும்...’’ என்று விவசாயிகளின் பொது புத்தியில் படிந்திருந்த நம்பிக்கையை பொடிப்பொடியாகத் தகர்த்ததில் தான் நம்மாழ்வார் அனைவராலும் வியந்து பார்க்கப்பட்டார். ‘’இயற்கை விவசாயம் செலவில்லாதது, பாரம்பரிய விதைகளே பாதுகாப்பானது, அதில் கிடைக்கும் உணவே சத்தானது, இயற்கை தரும் கொடைக்கு மேலாக வேறுயாரும், எவரும் நமக்கு ஒரு போதும் தந்துவிட முடியாது! இயற்கையை அழித்துப் பெறும் எதுவுமே ஆரோக்கியமற்றது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட..!’’ என இடைவிடாது பிரசாரம் செய்து வந்தார் நம்மாழ்வார்!

‘இந்தியாவில் ஆண்டுக்கு 500 லட்சம் டன் ரசாயன உரங்கள் நிலத்தில் கொட்டப்படுகிறது...! இதனால், கடந்த ஐம்பது ஆண்டுகளில் நமது நிலத்தின் மூன்றில் ஒரு பங்கு மலடாகிவிட்டது. அது போல பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என கொடிய நச்சுமருந்துகள் லட்சக்கணக்கான டன்கள் பயிர்களில் தெளிக்கப்படுகின்றன..! இதனால் நாம் உண்ணும் உணவே நஞ்சாகிவிடுகிறது..! இதை சாப்பிடுவதால் நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்... இந்த நச்சு சூழலில் இருந்து நாம் விடுபட வழியே இல்லையா...?’ என்று தவியாய் தவித்த விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன நம்மாழ்வாரின் பயிற்சி வகுப்புகள்!

பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு அவர் பயிற்சியளித்தார்.பயிற்சி பெற்றவர்கள் வெற்றிகரமான விவசாயிகளாக வலம் வந்து, நஷ்டத்திலிருந்தும், கஷ்டத்தில் இருந்தும் விடுபட்டு, மிக லாபகரமான தொழிலாக விவசாயத்தை மாற்றிக் காட்டினார்கள். கேளம்பாக்கம் ரங்கநாதன், அறச்சலூர் செல்வம், மதுராந்தகம் ஜெயச்சந்திரன், திருக்கழுக்குன்றம் தெய்வசிகாமணி, பசுமை நாயகன் உமாநாத்..என்று பட்டியல் போட்டால் பக்கங்கள் போதாது! நம்மாழ்வாரின் பயிற்சியில் பங்கெடுத்த ஏராளமான இளைஞர்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில் லட்சக்கணக்கில் சம்பாதித்த இளைஞர்கள் தங்கள் வேலையைத் துறந்து இயற்கை விவசாயத்தில் களம் கண்டு சாதித்துக்காட்டினார்கள்! தமிழகம் முழுமையும் ஆயிரக்கணக்கில் ‘ஆர்கானிக் ஷாப்’ என்ற இயற்கை அங்காடிகள் தொடங்கப்பட்டு இன்று வெற்றிகரமாக இயங்குவதற்கு நம்மாழ்வாரே மூலகாரணம்!

‘‘சத்து மிகுந்த பாரம்பரிய நெல் ரகங்களை நாம் தொலைத்துவிட்டோம். அதை தேடி சேகரித்து மீண்டும் பாரம்பரிய விவசாயத்தை தழைக்க செய்ய வேண்டும்..’’ என்று திருத்துறைப்பூண்டி ஜெயராமனுக்கு பயிற்சியளித்தார். அவருக்கு ஒரு நல்ல குழுவையும் உருவாக்கித் தந்து ஆண்டுக்காண்டு நெல் திருவிழாவை சிறப்பாக நடத்த ஊக்கப்படுத்தினார்! இதனால் தொலைந்து போன 168 பாரம்பரிய நெல்ரகங்கள் கிடைத்தது. இதனால் திருத்துறைப்பூண்டி ஜெயராமனுக்கு ‘நெல்’ ஜெயராமன் என்ற பெயர் வந்தது.

நம்மாழ்வார் கரூர் மாவட்டம் வானகம் என்ற இடத்தில் ஒரு மாதிரி பயிற்சி பண்ணையை உருவாக்கி பயிற்சி தந்ததோடு நிற்கவில்லை.சுமார் 250-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களோடு தன்னை இணைத்துக் கொண்டு இடையுறாது களப்பணிகள் செய்தார்.

சிறுதானியங்கள் குறித்த சிறப்பான விழிப்புணர்வு இன்று கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு வித்திட்டவர் நம்மாழ்வார் தான்! பஞ்சகவ்யா, அமிர்த கரைசல், தேமோர் கரைசல்..போன்ற இயற்கை உரங்கள் குறித்த புரிதலை தமிழகம் முழுமையும் உருவாக்கியதில் ஆழ்வாருக்கு முக்கிய பங்குண்டு! இயற்கை வேளாண்மை குறித்து 15 புத்தகங்கள் எழுதியுள்ளார். நம்மாழ்வாரின் தொண்டை பாராட்டி திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகம் அவருக்கு 2007-ல் கவுரவ டாக்டர் பட்டம் தந்தது!

இயற்கை விவசாயத்தை பரப்ப, பாரம்பரிய பயிர்களின் சிறப்பை குறிப்பாக பனை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த நம்மாழ்வார் அவ்வப்போது நீண்ட பாதயாத்திரை பயணங்கள் மேற்கொண்டார். மரபணு மாற்றப்பட்ட விதைகள் ஆபத்தானவை, அதில் விளையும் உணவுப்பொருட்கள் ஆபத்தானவை என்று இடையுறாது பிரசாரம் செய்தார்.விவசாய நிலத்தை சூழலை கெடுக்கும் தொழிற்சாலைகளுக்கு கொடுக்க கூடாது என்று அவர் போராடினார்.

பன்னாட்டு நிறுவனம் ஒன்று நமது நாட்டு வேப்பமரத்திற்கு காப்புரிமை பெற்றுவிட்ட செய்தி அறிந்து கொந்தளித்துப் போன நம்மாழ்வார் அதற்காக ஜெர்மன் நீதிமன்றம் சென்று வாதாடி வேம்பின் உரிமையை (மே-9, 2000) இந்தியாவிற்கு பெற்றுத் தந்தார். சுனாமி பாதித்த நாகப்பட்டினம் மாவட்டம் மீண்டும் புத்துயிர் பெற அரும்பாடுபட்டு உழைத்தார். தமிழகம் மட்டுமின்றி மற்ற இந்திய மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து பேசியும், களப்பணிகள், பயிற்சிகள் தந்துள்ளார்.

கேரளா இன்று இயற்கை வேளாண்மையில் சிறந்தோங்க வித்திட்டது கேரளாவில் 2007-ம் ஆண்டு அப்போதைய கேரள முதல்-மந்திரி அச்சுதானந்தன் கலந்து கொண்ட விழாவில் நம்மாழ்வார் பேசிய பேச்சு தான். கர்நாடகா, ஆந்திரா விவசாயிகளுக்கும் அங்கு சென்று பயிற்சி தந்துள்ளார். இந்தோனேசிய விவசாயிகளுக்கு பயிற்சி தந்து அங்கு 30 மாதிரி பயிற்சி பண்ணைகள் உருவாக வித்திட்டார்.

தனது ஐம்பதாண்டுக்கும் மேலான விவசாய தொண்டின் மூலமாக நம்மாழ்வார் தற்போது தமிழக இயற்கை விவசாயத்தின் ஒரு அடையாளச் சின்னமாகவே நிலைத்துவிட்டார்!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday 29 December 2019

குளிர்காலத்தில் உங்கள் உடல் எடை அதிகரிக்கும்

குளிர்காலத்தில் நமது உடல் எடை வழக்கத்தை விட சற்று அதிகரித்துவிடும். மற்ற பருவ காலங்களை விட சர்க்கரை, நெய், வெண்ணெய் சேர்க்கப்பட்ட பல காரங்களை அதிகமாக சாப்பிட விரும்புவதும், உடற்பயிற்சிகள் செய்வதற்கு சோம்பேறித்தனம் கொள்வதும், அதிகமாக சாப்பிடுவதும், அதற்கு இணையாக இல்லாமல் குறைவான அளவில் கலோரிகள் எரிக்கப்படுவதும் உடல் எடை அதி கரிப்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

குளிர்காலத்தில் உடல் குளிர்ச்சியடைவதால் உடலில் வெப்பத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக நிறைய பேர் சூடாக சாப்பிட விரும்புவார்கள். அப்படி சாப்பிடும் உணவுகள், பலகாரங்களில் இனிப்புதான் அதிகமாக சேர்ந்திருக்கும். இனிப்புகளில் அதிக கலோரிகள் நிரம்பியிருக்கும். அவை உடல் வெப்பத்தை அதிகப்படுத்த துணைபுரியும். ஆனால் அதற்கேற்ப உடலில் கலோரிகள் எரிக்கப்படாததால் உடல் எடை அதிகரிக்க தொடங்கும்.

குளிர்காலத்தில் விடிந்த பின்பும் போர்வைக்குள் முடங்கி கிடப்பதற்குத்தான் நிறைய பேர் விரும்புவார்கள். வழக்கத்தை விட சற்று கூடுதல் நேரம் தூங்கவும் விரும்புவார்கள். குளிர் காலத்தில் கரடிகளை போலவே மனிதர்களும் கலோரிகளை உடலில் சேர்த்துவைப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடு கிறார்கள். அதை உறுதிபடுத்தும் விதமாக பெரும்பாலானோர் வழக்கத்தை விட குளிர்காலத்தில் 200 கலோரிகள் அதிகமாக உட்கொள்ளவும் செய்கிறார்கள்.

அதிகாலைவேளையில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள், ஜிம்முக்கு செல்பவர்கள் கூட குளிர்காலத்தில் படுக்கையில் இருந்து எழுந்திருப்பதற்கு சோம்பேறித்தனம் கொள்வார்கள். தாமதமாக எழுவதும், உடல் இயக்க செயல்பாடு குறைந்து போவதும் எடை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடுகிறது.

குளிர்காலத்தில் சூரிய கதிர்கள் உடலின் மீது குறைவாகவே விழும். சூரிய ஒளி குறைந்துபோவதால் சில ஹார்மோன் சுரப்புகளில் மாற்றம் ஏற்படுகிறது. அதன் காரணமாக எல்லா நேரத்திலும் தூக்க உணர்வு எட்டிப்பார்க்கும். மேலும் உடலில் மெலடோனின் ஹார்மோன் அளவு அதிகரிப்பது பசியை தூண்டி அதிகமாக சாப்பிட வைக்கும். அதுவும் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடும்.

குளிர்காலத்தில் வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்கும். உடலில் வெப்பநிலையை அதிகப்படுத்தும்விதமாக அதன் செயல்பாடு அமைந்திருக்கும். வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதற்கு அதிக உணவு தேவை. அதனால் குளிர்காலத்தில் கலோரி குறைவான உணவு வகைகளை தேர்ந் தெடுத்து சாப்பிடுவது நல்லது.

குளிர்காலத்தில் எடை அதிகரிப்பதை தவிர்ப்பதற்கு சூப் உள்ளிட்ட திரவ உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். அவ்வப் போது எழுந்து நடமாடி உடல் இயக்க செயல்பாட்டை அதிகப்படுத்த வேண்டும்.

காலை நேரம் மட்டுமின்றி ஓய்வு கிடைக்கும் நேரங்களிலும் சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சைக்கிள் ஓட்டினால் மன அழுத்தம் குறையும்

சைக்கிள் ஓட்டுவதற்கு எல்லா குழந்தைகளும் ஆசைப்படும். வயது அதிகரிக்கும்போது சைக்கிள் ஓட்டும் ஆர்வம் குறைந்துபோய்விடும். ஆனால் தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது ஒரு மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்கு ஈடானது. இளமை தோற்றத்துடன் மிளிர்வதற்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சி பலன் கொடுக்கும். சருமம், எலும்புகள் மற்றும் பிற உறுப்புகளும் சைக்கிள் ஓட்டுவதால் புத்துணர்ச்சி பெற்று இளமைக்கு வழிவகுக்கும்.

உடல் இயக்க திறனும் அதிகரிக்கும். சைக்கிள் ஓட்டும்போது வேகமாக சுவாசிப்பீர்கள். அதனால் உள்ளிழுக்கும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். அது ஆரோக்கியத்திற்கு ஏற்றது. சைக்கிள் ஓட்டுவது ஏரோபிக் உடற் பயிற்சியுடன் தொடர்புடையது. இதயநோய்களுக்கான அபாயத்தை குறைக்க உதவும். மூளையில் செரோடோனின், டோபமைன் பினைல்தைலமின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து எல்லா நேரமும் மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதற்கும் வழிவகை செய்யும்.

உடல் பருமன் காரணமாக நீரிழிவு, கல்லீரல் நோய் பாதிப்புகள் நேரும். தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது உடல் பருமன் பிரச்சினையில் இருந்து விடுபட வழிவகை செய்யும். சைக்கிள் ஓட்டும்போது ஏராளமான கலோரிகள் செலவாகுவதால் உடல் கட்டுக்கோப்பாக மாறும்.

நீரிழிவு நோயாளிகள் சைக்கிள் ஓட்டுவதற்கு முன்னும், பின்னும் சர்க்கரையின் அளவை சரிபார்ப்பது அவசியம். சைக்கிள் ஓட்டுவது மன அழுத்தத்திற்கான அபாயத்தை வெகுவாக குறைப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. முதுமை பருவத்தில் எலும்புகள் பலவீனமடைவதால் வலி தோன்றும். எழுந்திருக்கக்கூட நிறைய பேர் சிரமப்படுவார்கள். அவர் களுக்கு மிதமான, பாதுகாப்பான சைக்கிள் பயிற்சி ஏற்றது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 28 December 2019

பாலியல் வன்முறைக்குத் தீர்வு என்ன?

பாலியல் வன்முறைக்குத் தீர்வு என்ன? By முனைவர் இரா. கற்பகம்  |   நிர்பயா வன்கொடுமையின் வடு இன்னும் ஆறவில்லை. அதற்குள் அடுத்தடுத்து தெலங்கானாவிலும் கோவையிலும் பெண்கள் மீது வன்முறை நடந்துள்ளது.

கால்நடை  பெண் மருத்துவரைக் கொலை செய்துவிட்டனர் படுபாவிகள். தில்லியில் 55 வயதுப் பெண்ணை இருபத்தி இரண்டு வயதுக் கொடூரர் வன்கொடுமை செய்து கொலையும் செய்துவிட்டார். ஆந்திரத்தில் 60 வயதுப் பெண்  பலாத்காரத்துக்குப் பின் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவை வெளியில் தெரிந்தவை. வெளியில் வராமல் தினம் தினம் நம் நாட்டில் எத்தனை சிறுமியர், பதின்ம வயதினர், முதிய பெண்கள் இப்படி சீரழிக்கப்படுகிறார்கள்  என்று நினைத்துப் பார்த்தால் மனம் கொதிக்கிறது.
கோவை சம்பவம் நடந்தது இரவு எட்டு மணி அளவில். பலரும் நடமாடும் ஒரு பூங்காவுக்கு அருகில். சீரநாயக்கன்பாளையம் என்பது கோவை நகரின் மையத்தில் உள்ள பகுதி. இங்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்றால், சட்டம், ஒழுங்கு, தனி மனித ஒழுக்கம், சமூக அக்கறை, பெற்றோரின் பொறுப்புணர்வு - இவை எல்லாவற்றையுமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியே ஆக வேண்டும்.

 இந்தக் குற்றங்களில் பெரும்பாலும் குற்றவாளிகள் 20 முதல் 30 வயதுக்குள் இருப்பது கவலை அளிக்கிறது. இளவயதினர் இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுவதற்குக் காரணம், அவர்களது மனங்கள் சிதைந்து விகாரப்பட்டுப் போனதே. அதற்கான காரணிகளை ஆராய்வது மிகவும் அவசியம்.
திரைப்படங்கள் பெண்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிக்கின்றன. ஒரு பெண் நடந்து சென்றால், அவள் பின்னால் ஆண்கள் கூட்டம் பல்லிளித்துக்கொண்டு பாட்டு பாடிக்கொண்டு போவதாகவும், அதை அந்தப் பெண் ரசிப்பதாகவும் காலங்காலமாகக் காட்டி வருகிறார்கள்.  இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச நடனங்கள், இயற்கைக்கு முரண்பாடான உறவுகள் என்று இளைய தலைமுறையை திரைப்படங்கள் சீரழித்து விட்டன.

திரைப்படங்களின் அடியை ஒற்றி, சமூகச் சீரழிவுக்கு தொலைக்காட்சி துணை செய்கிறது. "பெண்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிப்பது குற்றம்' என்று சட்டம் சொல்கிறது. அதற்குத் தண்டனையும் உண்டு. ஆனால், "கீழ்த்தரம்' என்பதன் அளவீடு மாறிவிட்டதாகத் தெரிகிறது.

அழகு என்பதைத் தாண்டிக் கவர்ச்சி வந்தது; கவர்ச்சி என்பதைத் தாண்டி  ஆபாசம் வந்தது; இன்று ஆபாசம் என்பதைத் தாண்டி அருவருப்பு வந்திருக்கிறது. திரையில் பார்க்கும் அருவருப்பான ஆடைகளையும் உறவுகளையும் பார்த்து மக்களின் மனங்கள் விகாரப்பட்டுப் போனதன் நேரடி விளைவே பாலியல் வன்முறைக்கு பெண்கள் உள்ளாவது.

வலைதளங்கள், இணையதளம், செல்லிடப்பேசி  மூலமாக எளிதில் கிடைக்கும் தடையற்ற ஆபாச விஷயங்கள் இளைஞர்களை மட்டுமின்றி எல்லா வயதினரின் மனங்களையும் சிதைத்து விட்டன. ஆண்கள் வயது வித்தியாசமின்றி பாலியல் கொடுமையில் ஈடுபடுகிறார்கள்; பெண்கள் வயது வித்தியாசமின்றி பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். ஆண்கள் மனது எவ்வளவு விகாரப்பட்டிருந்தால் இத்தகைய நிகழ்வுகளைக் குற்றம் எனத் தெரிந்திருந்தும், அவற்றைப் படம் பிடித்துத் தைரியமாக வலைதளங்களில் வெளியிடுவார்கள்? இன்னும் கொடுமை கூட்டுப் பாலியல் வன்முறைகள்.

இத்தகைய நிலைக்கு மதுவும் காரணம். மது அருந்துவது அந்தஸ்தின் அடையாளம் எனும் எண்ணம், கையில் தாராளமாகப் புழங்கும் பணம், தாங்கள் போற்றும் திரை நட்சத்திரங்கள் திரையில் குடிப்பதை முன்னுதாரணமாகக் கொள்ளும் போக்கு, உல்லாசமாகத் திரிய எளிதில் கிடைக்கும் இரு சக்கர வாகனங்கள், வெட்டி நண்பர்கள் கூட்டம், இருண்டு கிடக்கும் சாலையோரங்கள்,பாதுகாப்பற்ற பணியிடங்கள் - இவையாவும் பெண்களுக்கு எதிராகத் திரண்டு நிற்கின்றன. எந்தவித வருத்தமும் தெரியாமல், எந்தவித உடல் உழைப்பும் இல்லாமல் இளைஞர்கள் தினவெடுத்துக் கிடக்கிறார்கள். இவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த நமது கல்வித் திட்டமோ,அரசோ, ஆன்மிகவாதிகளோ, அரசியல்வாதிகளோ, தலைவர்களோ முனையவில்லை. பெற்றோர்கள் இவர்களைக் கட்டுப்படுத்துவதும் இல்லை.

 நமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் நாம் மறந்ததும் ஒரு காரணம். அமைதியும் அடக்கமும் கூடிய நம் விழாக்கள் எல்லாம் இப்போது ஆர்ப்பாட்டமும் களியாட்டமுமாக மாறிவிட்டன. காதலர் தினமும், புத்தாண்டுக் கேளிக்கைகளும், திருமண விழாவில் "சங்கீத்' என்ற பெயரில்  பாட்டும், ஆட்டமும், குடியும், கூத்தும் நமது கலாசாரம் அல்லவே.

இத்தகைய வெறியாட்டங்களில் எல்லாம் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் சேர்வது தீங்கைத் தாங்களாகவே வரவழைத்துக் கொள்வதாக அல்லவோ ஆகிறது? திரை நட்சத்திரங்களைப் பார்த்துத் தாங்களும் அவர்களைப் போலவே அரைகுறை ஆடை அணிந்து, ஆணும் பெண்ணும் கட்டுப்பாடின்றிப் பழகுவது, போகக்கூடாத இடத்துக்கு போகக்கூடாத நேரத்தில் போவது- இவை ஆண்களுக்கு எந்த விதத்திலும் தீங்கு விளைவிப்பதில்லை; பெண்களுக்கே தீங்கு விளைவிக்கின்றன.

குடும்பம் என்ற பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வருவதும் ஒரு காரணி என்றே கூற வேண்டும். நம் கலாசாரத்தில் குடும்ப அமைப்பு என்பது முக்கியமான அங்கம் வகிக்கிறது. இளையவர்களை வழிநடத்த பெற்றோர்களும், வீட்டுப் பெரியவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் சில சமயம் கசப்பாக இருந்தாலும், தங்கள் நன்மைக்கே என்பதை இளைஞர்கள் உணர்ந்தால் நல்லது. இளையவர்கள் தங்களை முன்மாதிரியாகக் கொள்ளும் வகையில் தங்கள் நடவடிக்கைகளை பெரியவர்களும் அப்பழுக்கில்லாத வண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
அரசின் மெத்தனமும், பொதுமக்களின் சமூக அக்கறையின்மையும், சட்டம் மிக மெதுவாகச் செயல்படுவதும் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்கக் காரணம். நிர்பயா குற்றவாளிகள் இன்னும் தூக்கில் போடப்படாமல் இருக்கிறார்கள்.

காரணங்கள் எவையாக இருப்பினும் அவற்றுக்குத் தீர்வு காண நாம் முயற்சிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெண்கள் மீதான குற்றங்களுக்குக் காரணங்களை மதுரை உயர்நீதிமன்றம் ஆராய்ந்து, அவற்றைப் பட்டியலிட்டு, அவற்றை எதிர்கொள்ளத் தகுந்த வழிமுறைகளையும் அறிக்கையாகச் சமர்ப்பிக்க அரசுக்கு அறிவுறுத்தியது; அதன் நிலை தெரியவில்லை.

பெண்கள் மீதான பார்வை மாறவேண்டும். பெண்களை இழிவாகக் காட்டுவதை திரைப்படங்கள் உடனடியாக நிறுத்தவேண்டும். அப்படிச் செய்யாத நிலையில், அரசு தலையிட்டு மிகக் கடுமையான தணிக்கை விதிகளைச் செயல்படுத்த வேண்டும். தணிக்கைக் குழுவில் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களை மட்டும் உறுப்பினர்களாக்குவது சரியன்று. பெண்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள், ஓய்வு பெற்ற நேர்மையான குடிமைப் பணி அதிகாரிகள், பெண்கள் பிரச்னைகளை அலசும் ஊடகவியலாளர்கள், சமுதாயத்தில் போற்றும் நிலையிலுள்ள ஒழுக்கசீலர்கள் ஆகியோரையும் சேர்த்து நியமித்தால் திரைப்படங்களின் தரம் உயரும்.

ஆண்களும் பெண்களும் சேர்ந்து கல்லூரியில் பயில்வதும், பணி நிமித்தம் நேரம் காலம் பார்க்காமல் ஒன்றாக வேலை செய்வதும், பயணம் செய்வதும் இன்று அவசியமாகிவிட்ட நிலையில், இருவருமே ஓர் எல்லை வகுத்துக் கொண்டு பழக வேண்டியதும் அவசியமாகிறது. ஆண்கள் சட்டென்று அணுக முடியாதபடி பெண்கள் ஒரு நெருப்பு வளையத்தை அணிந்து கொள்வது நல்லது. பெண்ணுரிமை என்ற பெயரில் ஆண்கள் செய்யும் தவறுகளையெல்லாம் பெண்களும் செய்வது சரியல்ல.

ஆண், பெண் இருவருக்குமே ஆடைக் கட்டுப்பாடு தேவை. ஆதிமனிதர்கள் அரைகுறை ஆடை அணிந்து திரிந்தார்கள்; நாகரிக மனிதர்களாகிய நாமும் அப்படிச் செய்யலாமா? கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் கூடாது. இது பல சமயம் பெண்களை இழிவுபடுத்தும் விதமாய் அமைந்துவிடுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள், எல்லாவற்றிலுமே வேலை நேரம் மிக அதிகமாய் உள்ளது. குடும்பத்தினரோடு செலவிடும் நேரம் குறைந்து விட்டது. இதனால், குழந்தைகளின் பிரச்னைகள் குறித்துப் பெரியவர்கள் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். கூடா நட்பில் விழுகிறார்கள்.

செல்லிடப்பேசியிலும், கணினியிலும் ஆழ்ந்து தேவையற்ற வக்கிரங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். வாரிசுகளுடன் கூடுதல் நேரத்தை பெற்றோர் செலவழித்து அவர்களை இவற்றிலிருந்து திசை திருப்ப வேண்டும். குடும்பத்தோடு  பார்க்கக் கூடியவையாக இருந்தால் மட்டுமே திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்க வேண்டும்.
சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்குத் தற்காப்புக் கலைகளைச் சொல்லித் தரவேண்டும். காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ள "காவலன்' செயலியை தங்களது அறிதிறன்பேசியில் பெண்கள் பதிவிறக்கம் செய்து பெண்கள் ஆபத்து சமயத்தில் பயன்படுத்தலாம். அதிக ஆள் நடமாட்டமில்லாத நேரம், இடங்கள் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும்.

ஆண்களின் பார்வை மாறும் வரை, அரசு முனைப்போடு செயல்படும்வரை, சட்டம் வேகமாக வேலை செய்யும் வரை, மக்கள் சமுதாயத்தின்மீது அக்கறை காட்டும் வரை,  தங்கள் பாதுகாப்பை  தாங்களாகவே பெண்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பது உண்மை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மகாத்மா விரும்பிய சுயராஜ்யம்

மகாத்மா விரும்பிய சுயராஜ்யம் By ஐவி. நாகராஜன்  |   சுயராஜ்யத்தின் உண்மையான தன்மையை கிராம மக்கள் முழுமையாகப் பெற வேண்டும் என்ற வகையில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் போதிய அதிகாரங்கள் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மகாத்மா காந்தி வலியுறுத்தி வந்தார்.

மகாத்மா காந்தியின் இந்த வலியுறுத்தலின் அடிப்படையில், கிராம ஊராட்சிகளின் அமைப்பு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 40-ஆவது பிரிவில்  அறிமுகப்படுத்தப்பட்டது.

தன்னாட்சியின் அங்கங்களாகச் செயல்படும் வகையில் உரிய அதிகாரங்கள் கொண்ட அமைப்பாக கிராம பஞ்சாயத்துகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்போதைய அரசுகள் நடவடிக்கை எடுப்பதில்லை. 500, அதற்கும் மேல் மக்கள்தொகை கொண்ட கிராமங்கள் அல்லது குக்கிராமங்களில் கிராம பஞ்சாயத்துகளை அமைக்க, அப்போதைய "மதராஸ் கிராம பஞ்சாயத்துக்கள் சட்டம் 1950' வழிவகை செய்தது.

கட்டாய அடிப்படைத் தேவை சார்ந்த சில பணிகளும் பல விருப்புரிமைப் பணிகளும் கிராம பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், அனைத்துக் கிராமங்களும் இந்தப் பஞ்சாயத்துகளில் இடம்பெறவில்லை. இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய சமூக வளர்ச்சித் திட்டம் என்று தொடங்கப்பட்டபோது, உள்ளூர் சமுதாயங்களை வளர்ச்சிப் பாதையில் ஈடுபடுத்தும் வகையில் ஒரு திறன்மிகு அமைப்பு சார்ந்த நடைமுறையின் தேவை அப்போது உணரப்பட்டது. ஆனால், 1950-க்கு பிந்தைய காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சமூக வளர்ச்சித் திட்டம் தொடர்பான பஞ்சாயத்துராஜுக்கான ஆய்வுக் குழு (பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி), மூன்று அடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நிறுவப் பரிந்துரைத்தது.

பல்வந்த்ராய் மேத்தா குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1958-இல் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் அனைத்துப் பகுதிகளிலும் கிராம ஊராட்சிகள் அமைவதற்கு வழிவகுத்தது. அதன்படி, 12,600 கிராம ஊராட்சிகள் ஏற்படுத்தப்பட்டன.

இப்போது தமிழகத்தில் மாவட்ட அளவில் 3-ஆவது அடுக்கு கொண்டுவரப்படவில்லை. மாறாக, தமிழ்நாடு மாவட்ட வளர்ச்சிக் குழுக்கள் சட்டம் 1958-ன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட வளர்ச்சிக் குழு ஏற்படுத்தப்பட்டது. வளர்ச்சி நிர்வாகத்துக்கென பெரிய வருவாய் மாவட்டங்கள் இரண்டு வளர்ச்சி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 73-ஆவது திருத்தத்தைத் தொடர்ந்து, 1992-ஆம் ஆண்டு  இயற்றப்பட்ட தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994-ல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்ற மூன்று அடுக்கு பஞ்சாயத்துராஜ் முறையை நிர்ணயித்துள்ளது. இதைத் தொடர்ந்து 1998-ஆம் ஆண்டு அனைத்துக் கிராம நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடந்தது.

இந்த அரசியல் சாசன திருத்தத்தால் மாநில அரசு விரும்பினால் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தலாம் என்ற முறையை மாற்றி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் தேர்தல் நடத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. மாநிலத்தில் சுயராஜ்யம் கோரும் அரசியல் கட்சிகள் தேசிய அரசியலிலும், கிராம அரசியலிலும் பங்கேற்பது என்பது அவர்கள் கட்சியின் கொள்கையையும், பலத்தையும் நிரூபிப்பதற்காகவே என்றாலும், இந்த முயற்சி காலம் காலமாக சமூக நீதி மறுக்கப்பட்டு வரும் அடித்தட்டு மக்களின் உள்ளூர் அளவிலான சுதந்திர அரசியல் எழுச்சிக்கு சாவு மணி அடிப்பது போன்றதாகிவிட்டது.

இதன் காரணமாகவே கிராம ஊராட்சிகளுக்கு அரசியல் கட்சிகளின் சின்னம் ஒதுக்கப்படுவதில்லை. அரசியலமைப்புச் சட்ட 73-ஆவது அரசியல் சாசனப் பிரிவின் கீழ் மத்திய, மாநில அரசுகளுக்கு இணையான அந்தஸ்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு  வழங்கப்படுகிறது. எனினும்,  மக்களோடு மிக நெருக்கமாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மட்டுமே சாலை அமைக்கவும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அமைப்பாகவும், தெருவிளக்குகளைப் பராமரிக்கவும் மாநில அரசு பயன்படுத்தி வந்துள்ளது.
ஊரக உள்ளாட்சிக்கு சட்டபூர்வ கல்வி, சுகாதாரம் பொது விநியோகம், நிலச் சீர்திருத்தம் உள்ளிட்ட 29 துறைகளுக்கான அதிகார பரவலாக்கம் என்பது அளிக்கப்படவில்லை. மத்திய அரசிடமிருந்து கூடுதலான நிதிப் பகிர்வைக் கோருவதிலும், சர்வதேச வங்கிகளிடமிருந்து நிதி பெறுவதிலும் ஆர்வம் காட்டும் மாநில அரசு, உள்ளாட்சிகளுக்கு மட்டும் மிக குறைந்த அளவிலேயே நிதி வழங்கி வருகிறது. இந்த நிதியும் முழுமையாக குறிப்பிட்ட நிதியாண்டுக்குள் உள்ளாட்சி அமைப்புகளைச் சென்று சேர்வதில்லை.

உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டின் மூலம் பெண்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலில் பங்கேற்பதையும், தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட ஊராட்சிகள், மாவட்டத் திட்டமிடல் குழுக்கள் அதிகாரமுள்ள செயல்படும் அமைப்பாக மாற்றப்பட வேண்டும். கிராம சபை மூலம் கீழிருந்து திட்டமிடல் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். உள்ளாட்சிகள் வெறும் செயல்படுத்தும் அமைப்புகளாக இல்லாமல் மக்கள் முடிவெடுக்கும் அமைப்புகளாக இருக்க வேண்டும். சமூக நீதி, நிலையான வளர்ச்சிக்கான புதிய சிந்தனையும் கொள்கையும் உருவாக மத்திய அரசும், மாநில அரசும் வழிவிட வேண்டும்.

தமிழக ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது; இரண்டாவது கட்டத் தேர்தல் திங்கள்கிழமை (டிச.30) நடைபெற உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சியில் மக்களாட்சி மலர்வதை மாநிலத் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் என அனைவரும் உறுதி செய்வது அவசியம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வெற்றிக்கு இரண்டு திறன்கள்

வெற்றிக்கு இரண்டு திறன்கள் | சோம வள்ளியப்பன் | கு ருபிரசாத் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இவருடைய பெயரை கூகுளில் தேடினால், பல பக்கங்களுக்கு தகவல்கள், புகைப்படங்கள் வருகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த குருபிரசாத் இப்போது, நாடு முழுவதும் மட்டுமல்ல உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் பிரபலம். சச்சின் தெண்டுல்கரை விரும்புகிறவர்கள், கவனிக்கிறவர்கள் பாராட்டும் நபர் ஆகியிருக்கிறார், குருபிரசாத்.

சில நாட்களுக்கு முன்பு சச்சின் தெண்டுல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோள், ‘இந்த நபர் இருக்கும் இடம் தெரியவில்லை. இவரை சந்திக்க விரும்புகிறேன். நெட்டிசன்கள் எனக்கு உதவ முடியுமா?’ என்பதுதான். சச்சின் சந்திக்க விரும்பும் நபர்தான், குருபிரசாத்.

கிரிக்கெட் உலகில் பெரும் சாதனையாளர், பலகோடி ரசிகர்களை பெற்றிருக்கும் ஒரு பிரபலம், இப்படி வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு குருபிரசாத் என்ன செய்துவிட்டார்? நிகழ்ந்தது இதுதான். 2001-ம் ஆண்டில் இலங்கையுடனான கிரிக்கெட் தொடர் பந்தயத்தின் ஒரு போட்டி சென்னையில் நடந்து இருக்கிறது. அப்போது விளையாட வந்திருந்த அணி வீரர்களில் ஒருவரான சச்சின், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, அங்கு பாதுகாவலராக வேலை செய்துகொண்டிருந்த குருபிரசாத் என்பவர், அவர் மிகவும் விரும்பி ரசிக்கும் கிரிக்கெட் ஆட்டக்காரரான சச்சின் அவருடைய அறையை விட்டு வெளியே வந்து லிப்டில் போக காத்திருப்பதைப் பார்த்திருக்கிறார்.

சச்சினை நெருங்கிய குருபிரசாத், “நான் உங்கள் ரசிகன். எனக்கு உங்கள் கையெழுத்து வேண்டும்” என்று கேட்டிருக்கிறார். சினேக பாவத்துடன் சச்சின் ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருக்கையில், “ஒரு நிமிடம் உங்களுடன் கிரிக்கெட் குறித்து பேசலாமா?” என்று கேட்டிருக்கிறார். “ம் .. சொல்லுங்கள்” என்றிருக்கிறார் சச்சின்.

“நீங்கள் ‘எல்போ கார்டு’ அணிந்து மட்டையை சுழற்றும் போது, அது உங்களுக்கு இடையூறாக இருக்கிறது. அதன் காரணமாக நீங்கள் அவுட் ஆகிறீர்கள். அந்த கார்டின் வடிவத்தை மாற்றி அமைக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார். சச்சினுக்கு வியப்பு. “உலகிலேயே நீங்கள் ஒருவர்தான் இந்த விஷயத்தை சரியாக கவனித்து சொல்கிறீர்கள்! எப்படி? என்று கேட்டிருக்கிறார்.

“நான் உங்களுடைய தீவிர ரசிகன். நீங்கள் அவுட்டாகும் விதங்களை, அந்த குறிப்பிட்ட பந்துவீச்சுகளை பதிவு செய்து, பலமுறை ‘ரீவைண்ட்’ செய்து பார்ப்பேன். அப்போது இதை கவனித்தேன்” என்று சொல்லியிருக்கிறார். சச்சின் உடனே அவரது அறைக்குப் போய், அந்த ‘எல்போ கார்டு’ வடிவத்தை மாற்றியமைத்து பார்த்திருக்கிறார். பின்னர் அது நிரந்தரமாக மாற்றியமைக்கப்பட்டு சச்சினுக்கு பலனுள்ளதாக அமைந்திருக்கிறது. அதனால்தான் சச்சின் அவரது டுவிட்டர் பக்க வேண்டுகோளுக்கு, ‘ஒரு தற்செயலான சந்திப்பு மறக்க முடியாதது ஆகலாம்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். அப்போதே குருபிரசாத் இந்த நிகழ்வை அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். சச்சினின் டுவிட்டர் வேண்டுகோளை பார்த்த குருபிரசாத்தின் உறவினர் ஒருவர், தகவல் சொல்ல, இப்போது சேதி, அதே ஓட்டல் நிர்வாகம் மூலம் சச்சினுக்கு போய்விட்டது. சச்சின் குருபிரசாத்தை சந்திக்கவிருக்கிறார்.

குருபிரசாத்துக்கு இப்போது தனிமதிப்பு, பாராட்டுகள், புகழ். தவிர சச்சினுடனான அறிமுகம். இவையெல்லாம் எப்படிக் கிடைத்தன?

படிப்பில், தொழில், வியாபாரத்தில், வேலையில், கலைகளில் என்று பலரும் செய்யும் எதிலும் வெற்றிபெற விரும்புகிறோம். குருபிரசாத் பெற்றிருக்கும் இந்த வாய்ப்பும் வெற்றியும் சில செய்திகளை உள்ளடக்கியிருக்கின்றன. நுணுகிப் பார்த்தால் அவற்றைக் கண்டுபிடிக்கலாம்.

எவ்வளவோ நபர்கள் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள். சிறந்த ஆட்டக்காரர்களின் அபிமானிகளாக இருக்கிறார்கள். குருபிரசாத் ரசித்ததுடன் தொடர்பானவற்றை உன்னிப்பாக கவனித்திருக்கிறார். நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்திருக்கிறார். இப்படி ஒரு வாய்ப்பு வரும் என்று திட்டமிட்டு செய்யவில்லை. அவருடைய ஈடுபாடு காரணமாக அப்படித் தெரிந்துகொண்டிருக்கிறார்.

பொழுதுபோக்கிற்காக பார்ப்பதிலும் கூர்மை இருந்திருக்கிறது. விவரம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் இருந்திருக்கிறது. இரண்டாவதாக, ஒரு சந்தர்ப்பம் தற்செயலாக கிடைத்தபோது அதை தவறாமல் பயன்படுத்தும் தைரியமும் சச்சினையே ‘ம்.. சொல்லுங்கள்’ என்று கேட்கவைக்கும் அளவு இங்கிதமாக பேசவும் முடிந்திருக்கிறது.

ஆர்வம் காரணமாக மட்டுமே ஒரு வேலையைச் செய்து, உலக அளவில் கவர்ந்து ஈர்த்த மற்றொரு தமிழரின் பெயர் நினைவுக்கு வருகிறதா? ஆம். நாசாவுக்கே, விக்ரம் லேண்டர் விண்கலம், சந்திரனில் விழுந்த இடத்தை சுட்டிக்காட்டிய பொறியாளர் சண்முகா சுப்பிரமணியன் செய்த வேலை நினைவுக்கு வரலாம். சண்முகா சுப்பிரமணியன் அவருடைய ஆர்வமான விண்வெளி குறித்து தொடர்ந்து பார்த்தும் படித்தும் தெரிந்து கொண்டிருந்தவர் விக்ரம் லேண்டர் எங்கே விழுந்திருக்கும் என்பதை எவரிடமும் கேட்டுக் கொள்ளாமலேயே அவராகவே மிக நுட்பமாகவும் தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்து கண்டுபிடித்திருக்கிறார்.

குருபிரசாத்தால் சச்சின் பெற்றிருக்கும் பலன்கள் குறைவானதல்ல. அந்த யோசனை காரணமாக ‘எல்போ கார்டு’ வடிவமைப்பை மாற்றி, அதனால், பல சந்தர்ப்பங்களில் அவுட் ஆவதைத் தவிர்த்து, ஓட்டங்கள் குவித்து, வெற்றி, பணம், புகழ் எல்லாம் பெற்றிருக்கிறார். சச்சின் வெற்றிகரமானவராக இருப்பதற்கான காரணங்களில் சிலவற்றை இந்த நிகழ்வின் மூலமும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

சச்சினுக்கு உதவிய அந்த மாற்றம் நிகழ்ந்தது எப்படி? சச்சினுக்காக வேலை செய்யும், அதற்காக சம்பளம் பெறும் பல வல்லுனர்கள் சொல்லாததை, அப்படிப்பட்ட ‘காப்பான்’கள் தயாரிக்கும் நிறுவன வல்லுனர்கள் கண்டுகொள்ளாதவைகளை, ஒரு ரசிகர் கண்டறிந்து சொல்லியதால் அது சாத்தியமானது. ஒரு சாதாரண ரசிகரிடம் இருந்த அந்த பலன்தரும் யோசனை பிரபலமான சச்சினை அடைய முடிந்தது எப்படி? தங்கியிருக்கும் விடுதியின் பாதுகாப்பு பணியாளரை கேட்டால் ஆட்டோகிராப் போட்டுக் கொடுப்பது பல பிரபலங்களும் செய்வதுதான். ஆனால், அடுத்து கிரிக்கெட் குறித்து நான் ஒன்று உங்களுக்கு சொல்லட்டுமா என்று அப்படி ஒரு மனிதர் கேட்க, ‘ம்.. சொல்லுங்கள்’ என்று கேட்டுக் கொள்ளும் மனப்பாங்கு சச்சினுக்கு இருக்கிறது. சாதாரண ரசிகர் சொல்லும் ஆலோசனையை கேட்டுக்கொள்ள சம்மதிப்பது, கேட்டுக்கொள்வது, ஏற்றுக்கொள்வது, வெளிப்படையாக பாராட்டுவது, அந்த ஆலோசனையை நடைமுறைப்படுத்துவது, நினைவு வைத்து, அது குறித்து பொதுவெளியில் எழுதுவது, நன்றி சொல்வது, சந்திக்க விரும்புவது என்று, சச்சினிடம் இருக்கும், வெற்றியை உறுதி செய்யும், குணநலன்களும் பண்புகளும் ஏராளம்.குறிப்பாக செய்வதென்பதையும், அக்கறையுடன் செய்வதும் சொல்லப்படும் ஆலோசனைகளை கேட்பதும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் இரண்டு குண நலன்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எலும்பு தின்னும் ஒட்டகம்

எலும்பு தின்னும் ஒட்டகம்

முனைவர் வே. ஞானப்பிரகாசம்,

முன்னாள் துணைவேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.

பொதுவாக ஒட்டகம் பாலைவனத்தில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான ஒட்டகங்கள் உள்ளன. இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகளால் ஒரு திமில் ஒட்டகங்கள் அவற்றின் பால், இறைச்சிக்காகவும், சுமைகளை ஏற்றிச் செல்லவும், வண்டி இழுக்கவும் வளர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் பண்டைக்காலத்திலேயே ஒட்டகங்கள் இருந்தன என்பதற்கு அகநானூற்றில் சான்றுகள் உள்ளன.

ஒட்டகத்தின் உடல் எடை 250-லிருந்து 680 கிலோ வரை இருக்கும். இதன் உயரம் 7 முதல் 8 அடி வரை இருக்கும். இவை சராசரியாக 30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டவை. 200 கிலோ வரையிலான எடையை சுமந்து கொண்டு 50 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கக் கூடியது. கொதிக்கும் மணலிலும் கடுமையான வெப்பத்திலும் உணவின்றி, நீரின்றி 8 நாட்கள் வரை இருக்கும். அதன் எடையில் 22 சதவீதம் இழந்த பின்னும் உயிர் வாழும் தன்மை கொண்டவை. கடும் குளிர் காலத்தில் உணவின்றி, நீரின்றி ஆறுமாதம் வரை கூட இருக்கும். மேய்வதற்கு புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10 மாதங்களுக்கு தேவையான அளவு சேமித்து கொள்ளும். இடையில் நீர் கூட அருந்தாமல் இருக்கமுடியும். நீர் அருந்தாமல் சில மாதங்கள் இருந்தாலும் மீண்டும் நீர் அருந்தும்போது ஒரே மூச்சில் 100 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும் குணம் கொண்டது. இவ்வாறு நீரைக் குடித்தவுடன் 10 நிமிடங்களில் அதன் உடலில் தேவையான நீர்ச்சத்து பெற்று விடும்.

‘பாலைவனத்துக் கப்பல்’ என்று அழைக்கப்படும் ஒட்டகம் பாலைவன சூழலில் வாழ வசதியாக அதன் உடல் உறுப்புகளான ரோமம், தோல், கண், காது, மூக்கு, வாய், கால்கள், பாதம், திமில் ஆகியவை அமையப்பெற்றுள்ளன. ஒட்டகத்தின் ரோமமும், தோலும் அப்படி ஒரு தடிமனானது மட்டுமின்றி அதற்கு சிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது. அது மட்டுமல்ல, கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை சுயமாக மாற்றிக்கொள்ளும். இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனிநிலையில் கடுங்குளிர்காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது. அதேநேரம், கடும் கோடை வெப்பக்காலங்களில் கடும் வெயில் கொளுத்தும்போது, வெப்பம் கடத்தா தன் தடிமனான தோலினாலும், தன் உடல் வெப்பநிலையை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கிறது. இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும் தடுக்கப்படுகிறது. இதன் மூக்கமைப்பானது, சுவாசித்து வெளியே அனுப்பும் காற்றில் உள்ள ஈரத்தில், மூன்றில் இரண்டு பகுதியை வெளியேற விடாமல் தடுத்து விடும் அமைப்பு உடையது. மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட தன் மோப்ப சக்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது.

பாலைவனம் என்றாலே புழுதிக் காற்று, மணற்புயல் பிரசித்தம். அப்படி, மணலோடு சேர்ந்து காற்று வீசும் போது ஒட்டகம் மூக்கை மூடிக்கொள்ளும். அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மணலோ தூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது. அதன் இரண்டடுக்கு கண் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றன் உள் ஒன்றாக கோர்த்துக்கொண்டு மணற்புயலிலிருந்து கண்ணிற்கு முழுப்பாதுகாப்பு அளிக்கிறது.

ஒட்டகத்தின் கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்பு வாகனத்தின் வைப்பர் போல செயல்பட்டு கண் பரப்பை சுத்தப்படுத்தி கூடுதலாய் கண்களுக்கு பாதுகாப்பை அளிக்கிறது. கண்ணிலும் அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பு அமைப்பும், புருவமும் பாலைவனத்து சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது..! அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது. பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்.

பல தமிழ் அறிஞர்கள், பண்டைய இலக்கியத்தில் விலங்குகள் குறித்து பாடப்பட்டுள்ள பாடல்களை ஆய்வு செய்து, அவை குறித்து விரிவாக எழுதி உள்ளனர். அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அவர்கள் தொழிலால் வேறுபட்டதினால், அவர்களுடைய விளக்கங்கள் கால்நடை மருத்துவ அறிவியல் உண்மைகளுக்கு மாறுபட்டவையாக உள்ளன. உதாரணமாக, அகநானூறில் வரும் ஒரு பாடலில் பாறைகளில் உலர்ந்து கொண்டிருக்கும் செம்மறி ஆட்டின் வெள்ளை எலும்புகளை தின்று ஒட்டகம் தன் பசியை தீர்த்து கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. “குறும்பொறை உணங்கும் தகர் வெள்ளென்பு கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் கல் நடுங் கவலைய கானம் நீந்தி” (அகம் 345, 1719) இது பற்றி விளக்கம் அளித்த ஒரு தமிழ் அறிஞர், ஒட்டகம் எலும்பை தின்பதாக புலவர் கூறி இருப்பது செவி வழி செய்தியாக தோன்றுகிறது. ஒட்டகம் எலும்பை தின்பது உண்மையன்று என்று எழுதி உள்ளார்.

ஆனால், கால்நடை மருத்துவ நோய் தீர்ப்பியல்படி, ஒட்டகம் எலும்பை தின்னும் என்பது உண்மையே. தனது உணவின் மூலம் போதுமான அளவு பாஸ்பரஸ் தாது சத்து கிடைக்காவிட்டால், ஒட்டகம் எலும்பை தின்று இக்குறையை போக்கி கொள்ளும் என்பது உண்மையே. இந்நோய் இன்றும் இந்தியாவில் ஒட்டகம் அதிகமுள்ள ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் காணப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் , பிகானீரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் ஒட்டக ஆராய்ச்சி நிலையத்தில் இந்நோய் பற்றிய பல ஆராய்ச்சிகள் செய்ய பட்டுள்ளன. ஆகவே, பண்டைய தமிழ் புலவர்கள் ஒட்டகம் பற்றி பாடியுள்ள பாடல் அறிவியல் பூர்வமாக சரியானதே.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday 27 December 2019

ஜனநாயகம் - ஒரு தரம், இரண்டு தரம்...

ஜனநாயகம் - ஒரு தரம், இரண்டு தரம்...| By தி. இராசகோபாலன்  |   நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் சாயம் இழக்கின்றன என்றால், ஊராட்சி மன்றங்கள் சாரம் இழந்துவிட்டன என்பது பொருள். உள்ளாட்சி அமைப்புகள் எஃகுபோல்  செயல்பட்டால்தான், மக்களாட்சி மகத்துவம் பெறும். இந்தியாவில் கி.மு. 1700-க்கு முன்பேயே பஞ்சாயத்து முறை நடைமுறையில் இருந்ததாக ரிக் வேதம் கூறுகிறது. 

"ஸர் சார்லஸ் மெட்கஃபே' எனும் இங்கிலாந்து நாட்டு வரலாற்றறிஞர், "5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியக் கிராமங்கள் தன்னிறைவு பெற்ற குடியரசுகளாகத் திகழ்ந்தன.  அதனால், பஞ்சாயத்து ராஜ்ய அமைப்பை ஏற்றுச் செயல்பட, கிராமங்கள் தயாராக இருந்தன.  அந்த அமைப்பைப் பிரிட்டிஷாராகிய நாம் எக்காரணம் கொண்டும் குலைத்துவிடக் கூடாது' என எழுதியுள்ளார்.

கி.பி. பத்தாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட உத்தரமேரூர் கல்வெட்டு, சோழராட்சியில் கிராமப் பஞ்சாயத்துகள் பக்குவமாய்ச் செயல்பட்டதைச் செவ்வனே எடுத்துச் சொல்கின்றன.  சோழ மன்னர்களுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைக் கிராமப் பஞ்சாயத்துகளே வசூலித்துச்  செலுத்தியிருக்கின்றன.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் உரிய தகுதிகளை அந்தக் கல்வெட்டு வரையறுத்துச்  சொல்லுகிறது.  "உத்தரமேரூர் 30 சேரிகளைக் கொண்டிருந்தது.  35 வயதுக்குக் குறைந்தவர்களும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஊர்ப் பஞ்சாயத்தின் பிரதிநிதிகளாய் இருக்க முடியாது.  ஒருமுறை உறுப்பினராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஓராண்டு காலமே பொறுப்பு வகிக்கலாம்.  அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் பிரதிநிதியாய் வர முடியாது.  ஒருமுறை பதவிக்கு வந்தவரின் மகன், அடுத்த நான்கு ஆண்டுக்குள் பொறுப்புக்கு வரக்கூடாது.  அவரின் சகோதரர் மூன்று ஆண்டுகளுக்குள் பதவிக்கு வரக்கூடாது.
கொலை, திருட்டு, கற்பழிப்பு போன்ற மாபாதகங்களைச் செய்தவர்களும், அரசாங்கக் கணக்கில் மோசடி செய்தவர்களும், குறிப்புகளை மன்னருக்கு அனுப்பத் தவறியவர்களும் தேர்தலில் நிற்கத் தகுதியற்றவர்கள் ஆவர் என்பன அந்தக் கல்வெட்டு தரும் வழிகாட்டல்கள் ஆகும்.  குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்படும் செய்தியையும் அந்தக் கல்வெட்டு கூறுகிறது.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே, கிராம ராஜ்யத்தை மகாத்மா காந்தியடிகள் வற்புறுத்தியிருக்கிறார்.  "இந்தியாவின் ஜீவன் கிராமங்களிலேதான் உள்ளது.  கிராமத்து மக்கள் உண்ணுவதற்குரிய உணவுக்கும், உடுப்பதற்குரிய உடைக்கும் யாரையும் நம்பியிருப்பதில்லை.  அவர்களுடைய தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்கின்றனர். 
ஒரு சிலர் அதிகாரத்தைப் பெறுவதால் அல்லாமல், அனைவரும் அந்தத் திறனைப் பெறுவதுதான் சுயராஜ்யம்; ராம ராஜ்யம் என்றார் தேசப் பிதா.

சட்ட மேதை அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 40-ஆவது ஷரத்து உள்ளாட்சி அமைப்பின் முக்கியத்துவத்தை வரையறுக்கிறது.  "அரசு, கிராமப் பஞ்சாயத்துகளை அமைக்க நடவடிக்கை எடுக்கும்.  மேலும், அவை சுயாட்சி அமைப்புகளாகச் செயல்படுவதற்குத் தேவையான அதிகாரங்களையும் ஆணை உரிமைகளையும் அரசே வழங்கும் என்பது, விடுதலை பெற்ற இந்தியா உள்ளாட்சிக்கு ஊன்றிய வித்தாகும்.

40-ஆவது ஷரத்து குறித்துப் பேசிய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, "உண்மையான மாற்றம் கிராமத்தின் உள்ளே இருந்துதான் வருகிறது; கிராமத்து மக்களிடம் இருந்துதான் வருகிறது; வெளியிலிருந்து சுமத்தப்படுவதில்லை என்றுரைத்தார்.

செம்மையாக நடந்து கொண்டிருந்த உள்ளாட்சித் துறையை, இந்த நாட்டுக்குள் அடியெடுத்து வைத்த கிழக்கிந்திய கம்பெனி சீர்குலைத்தது.  கி.பி. 1765-ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனிக்கு நிதி வேண்டும் என்பதற்காகப் பஞ்சாயத்துகளைக் கலைத்துவிட்டு, திவான்களையும், பட்வாரிகளையும் நியமித்தது. 
என்றாலும், 1882-ஆம் வைசிராயாக இருந்த லார்டு மேயோவும், ரிப்பன் பிரபுவும், கிராமப் பஞ்சாயத்துகளுக்குப் புத்துயிர் கொடுத்து, அவை வசூலிக்கும் வரியை மட்டும் காலனி ஆதிக்கத்துக்கு வரும்படியாகப் பார்த்துக் கொண்டனர்.
வைசிராய் ஏட்டளவில் குறிப்பிட்டதைத் திடமாக ஏற்று, நாட்டிலே நடைமுறைப்படுத்தியவர் ரிப்பன் பிரபு. அதனால் சுரேந்திரநாத் பானர்ஜி அவரை "இந்திய உள்ளாட்சித் துறையின் தந்தை எனப் பாராட்டினார்.

1956-இல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட "பல்வந்த் ராய் மேத்தா குழுவினர் அண்மைக்காலம் வரை நடைமுறையில் இருந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி எனும் மூன்றடுக்கு அமைப்பினை நமக்கு அறிமுகப்படுத்தினர்.  அடுத்து அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 73, 74-ஆவது சட்டத் திருத்தங்கள், பட்டியலினத்தாருக்கும், மலைவாழ் மக்களுக்கும், பெண்களுக்கும் உரிய ஒதுக்கீட்டை வரையறை செய்தது.  இன்னும் 29 செயல்திட்டங்களையும் பரிந்துரை செய்தன.

இப்போது பஞ்சாயத்து நாளாக ஏப்ரல் 24-ஆம் தேதியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். வாயளவில் பேசப்பட்டுக் கொண்டிருந்த பஞ்சாயத்து அமைப்புக்குப் புத்துயிர் கொடுத்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.  "தில்லியிலிருந்து ஒரு யானையைக் கிராமத்துக்கு அனுப்பினால், அதனுடைய வால் மட்டும்தான் கிராமத்துக்குப் போய் சேருகிறது எனப் பலவற்றை உள்ளடக்கி நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பேசினார்.

என்றாலும், கிராமப் பஞ்சாயத்து முறை வெற்றி பெற வேண்டும் என்று களத்தில் இறங்கியவர் முன்னாள் குடியரசுத் தலைவர்  அப்துல் கலாம்.  "இந்தியாவில் 5,83,000 கிராமங்கள் இருக்கின்றன.  70 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர்.  இந்தியாவை முன்னேற்ற வேண்டுமென்றால், கிராமங்கள் முன்னேற வேண்டும்.  கி.பி.2020-இல் இந்தியா நல்லரசாக, வல்லரசாக மாற வேண்டும் என்றால், கிராமங்கள் முன்னேற வேண்டும். கிராமங்கள் முன்னேறினால்தான், மாவட்டங்கள் முன்னேறும்.  மாவட்டங்கள் முன்னேறினால்தான், மாநிலங்கள் முன்னேறும்.  மாநிலங்கள் முன்னேறினால்தான், நாடு முன்னேறும் என்றார் கலாம்.

கிராமத்து மக்கள் வசதிகளை எதிர்பார்த்து, நகரங்களுக்கு இடம்பெயராமல், நகரத்து வசதிகளைக் கிராமத்துக்குக் கொண்டுவந்து, தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வதற்குப் "புறா' (Provision of Urban Amenities to Rural Areas)  என்றொரு திட்டத்தை  அப்துல் கலாம் கொண்டுவந்தார். 
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வல்லத்தைச் சுற்றி 65 கிராமங்கள் இருக்கின்றன. அங்கிருக்கின்ற பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி மாணவர்களை அப்துல் கலாம் நெறிப்படுத்தி பல பஞ்சாயத்துத் திட்டங்களை நிறைவேற்றினார்.  அவற்றுள், அங்கிருந்த  165 நீர்நிலைகள்  மாணவர்களால் தூர்வாரப்பட்டு, பாய்மடை - வடிமடைகளைத் தூய்மைப்படுத்தி, அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் ததும்பி நிற்கும்படியாகச் செய்தார்.  கிராமங்களில் கிடைக்கும் கச்சாப் பொருள்களை வைத்துச்  சிறுதொழில்கள் சிறக்கும்படிச் செய்தார். மேலும், அங்குள்ள கைவினைஞர்களுக்கு, "மைக்கோ பாஷ்' நிறுவனம் பயிற்சி அளிக்கும்படியும் பணித்தார்.

இவ்வாறு மேதைகளாலும், வல்லுநர்களாலும் காலம் காலமாக போற்றி வளர்க்கப்பட்ட உள்ளாட்சிப்பதவிகள், இன்று கட்சி அரசியலால் ஒரு தரம், இரண்டு தரம் என்று ஏலம் விடப்படுகின்றன.  வெற்றி வாய்ப்புடைய வேட்பாளர்கள் சொந்த கட்சிக்காரர்களாலேயே கடத்தப்படுகிறார்கள். 
இதை முன்கூட்டியே ஊகித்து அறிந்த தீர்க்கதரிசியாகிய பாபு வினோபா பாவே, "உள்ளாட்சி அமைப்புகளில் கட்சிகளைக் கழற்றி எறிய வேண்டும்; கட்சி அரசியல் என்பது மக்களைப் பிளவுபடுத்துகிறது; மக்களின் ஒற்றுமையைக் குலைக்கிறது; மக்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது' என்றார். 

கிராம சமுதாயத்தைப் பிளவுபடாத ஒரே சமுதாயமாகக் கட்டிக் காக்க விரும்பினால், பஞ்சாயத்து ராஜ் அமைப்பில், அரசியல் கட்சிகள் தலையிடாமல் ஒதுங்கி நிற்க வேண்டும் என இப்போதைய நிலைக்கு, அப்போதே சொல்லிவைத்தார் அண்ணல் வினோபா பாவே அவர்கள்.
பாபு வினோபா பாவே அவர்கள் பாடிய பல்லவிக்கு அனுபல்லவி போல், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்  இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடும் , "கட்சி சார்பற்ற முறையில் பஞ்சாயத்துத் தேர்தலை அணுகுவது, பஞ்சாயத்துச் சபைகள் சுமுகமாக இயங்குவதற்கு வழி செய்யும் எனக் கூறியிருக்கிறார்.

சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்காளர்களை  வேட்பாளர்கள் காசுக்கு விலைக்கு வாங்குகிறார்கள்; உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களைத் தவறு செய்பவர்களாக  வாக்காளர்கள் மாற்றுகிறார்கள்.
மகளிர் வார்டுகளில் ஆடவர்கள் நிற்க முடியாதபோது, தம் மனைவியருக்குக் கையெழுத்துப் போடக் கற்றுக் கொடுத்துக் களத்தில் இறக்குகிறார்கள்.  இது, மகாபாரதத்தில் சிகண்டியை முன்னிறுத்தி அர்ச்சுனன் பின்னிருந்து அம்பு விட்டுப் பீஷ்மரை வதம் செய்தது போலிருக்கிறது.  இங்கு பீஷ்மரைப் போல் பஞ்சாயத்து முறை வதைபடுகிறது.  இதை 24.04.2015 அன்று பிரதமர் மோடி, இந்தியாவிலுள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சித் தலைவர்களை அழைத்து, அந்தத் தவறைச் செய்ய வேண்டாம்  என அறிவுறுத்தினார்.

ஊராட்சி, பஞ்சாயத்து முறை பால் தரும் பசுவைப் போன்றது.  பணத்துக்காகவும், பதவிக்காகவும் அந்தப் பசுவைக் கொன்று விடாதீர்கள்.
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பா.ஜ.க.வின் முதல் தோல்வி

பா.ஜ.க.வின் முதல் தோல்வி | By ஜெ. ராகவன்  |  இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., நடந்து முடிந்துள்ள ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால், கடந்த ஓராண்டில் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ள ஐந்தாவது தோல்வி இதுவாகும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களை வென்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸுக்கு 16 இடங்களும், ராஷ்ட்டிரீய ஜனதாதளம் கட்சிக்கு ஓரிடமும் கிடைத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 25 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பி) 3 இடங்களிலும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் 2 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்-எல்) தலா ஓர் இடத்திலும் வென்றுள்ளன. சுயேச்சைகள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 2018-ஆம் ஆண்டு இறுதியில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது.
கடந்த நவம்பர் மாதம் மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. - சிவசேனைக் கூட்டணி அதிக இடங்களில் வென்றிருந்த போதிலும், யார் முதல்வர் என்ற பிரச்னையில் இரு கூட்டணிக் கட்சிகளும் மோதல் போக்கைக் கடைப்பிடித்தன. முடிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் புதிய கூட்டணியை அமைத்து சிவசேனை ஆட்சியைப் பிடித்தது. இந்த விவகாரத்திலும் பா.ஜ.க.வுக்கு தோல்விதான் கிடைத்தது.

அண்மையில் ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிக இடங்களில் வென்ற பா.ஜ.க., பிராந்திய கட்சிக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆசை காட்டி அங்கு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வலியுறுத்தியும், அயோத்தியில் விரைவில் ஸ்ரீராமருக்கு ஆலயம் கட்டப்படும் என்று பேசியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு கட்டத்தில் மக்களின் மனநிலையை அறிந்த அமித்ஷா, குடியுரிமை திருத்தச்சட்டம் தேவைப்பட்டால் மறுபரிசீலனை செய்யப்படும் என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், அது மக்களிடம் எடுபடவில்லை.

ஜார்க்கண்ட மாநிலம் உருவானது முதல் பெரும்பாலும் பா.ஜ.க.தான் ஆட்சியில் இருந்தது. கடந்த தேர்தலில் முதல் முறையாக பழங்குடியினர் அல்லாதவரான ரகுவர் தாஸ் முதல்வரானார். ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையும், பழங்குடியினர் அல்லாத முதல்வர் மீதான அதிருப்தியும் தோல்விக்குக் காரணம். பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையும் பா.ஜ.க. தோல்விக்கு வழிவகுத்து விட்டது. இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு உள்ளூர் பிரச்னைகளே காரணம் என பா.ஜ.க. சமாளித்த போதிலும், மாநில முதல்வர் ரகுவர் தாஸ் , தேர்தல் தோல்விக்கு தாம் முழுப் பொறுப்பு ஏற்பதாக அவசரம் அவசரமாக அறிவித்தார்.

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களைப் போல ஜார்க்கண்டில் சிறிய அரசியல் கட்சிகளை வளைத்துப் போடும் பா.ஜ.க.வின் முயற்சியும் தோல்வி அடைந்துவிட்டது. பா.ஜ.க.வின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சுதேஷ் மஹதோ தலைமையிலான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் இந்த முறை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. இதேபோல ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அண்மைக் காலமாக பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார், பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இதே நிலை தொடருமானால், அடுத்துவரும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடுமா என்பதே சந்தேகம்.

2014-இல் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த போதிலும் 2015-ஆம் ஆண்டு பிகாரில் நடைபெற்ற தேர்தலில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தன. இந்தத் தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணி முறிந்துபோனதால் நிதிஷ்குமார், பா.ஜ.க.வுடன் கைகோத்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது வேறு விஷயம்.

ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் தோல்வியை அடுத்து, மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மீதான ஈர்ப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. மேலும், எதிர்க்கட்சியினர் மீண்டும் ஒன்று இணைய வேண்டும். அப்படி இணைந்துவிட்டால் பா.ஜ.க. ஒன்றும் தோற்கடிக்க முடியாத கட்சியல்ல என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சியின் தலைவர்களும் கூறத் தொடங்கியுள்ளனர்.
மத்தியில் மோடியின் ஆட்சிக்கு ஆதரவு இருந்தாலும், மாநிலங்களில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்து வருவதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். "காங்கிரஸ் கட்சியை முழுமையாக இருக்குமிடம் தெரியாமல் ஒழிப்போம்' என்று கோஷம் போட்டு வந்த பா.ஜ.க.வுக்கு இது சோதனைக் காலம்தான்!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday 26 December 2019

அரசியலை நோக்கி நடிகர்கள்

அரசியலை நோக்கி நடிகர்கள் | By உதயை மு. வீரையன்  |   உலகம் ஓடுகிறது. பணம், பதவியை நோக்கி ஓடுகிறது. ஒருவரைப் பார்த்து ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு ஓடுகின்றனர்.

எதற்கும் சாதாரண மனிதர்கள் சரியில்லை. பணமும், பேரும் படைத்த சினிமா கதாநாயகர்களே பொருத்தம். அதனால்தான் அவர்களை ஊடகங்கள் துரத்துகின்றன. அரசியலுக்கு வரும்படி அழைக்கின்றன.

மக்கள் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களாம். தங்களுக்கான முதலமைச்சர்களை தியேட்டர்களில், கட்-அவுட்களில் தேடுகிறார்கள். அவர்கள் வந்தால்தான் ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற முடியும் என்கிறார்கள். அவர்களே எல்லாத் திரைப்படங்களிலும் கெட்டவர்களை ஒழித்து, மக்களைக் காப்பாற்றுகிறார்கள் என்பதால் தங்களையும் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது சரிதானா?

கட்சிகள் நடத்தி அனுபவப்பட்ட சிலர், இந்தப் பெரிய நடிகர்களைச் சந்தித்து யோசனை சொல்லி வருகின்றனர். இந்த மக்களை நம்பி இருக்கிற பணத்தையும் இழக்கத் தயாராக இல்லாத நடிகர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

தமிழ்நாட்டை இரண்டு திராவிட இயக்கங்களும் கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்கின்றன. இரண்டு கட்சிகளின் தலைவர்களும் காலமாகிவிட்ட நிலையில், ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், அதனைப் பூர்த்தி செய்ய சினிமா உலகத்திலிருந்து தலைவர்களைத் தேடுகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறதா, இல்லையா என்பது ஊடகங்களின் விவாதப் பொருளாகி விட்டது.
அரசியல்வாதிகளின் புதிய புதிய வாக்குறுதிகளும், மக்களின் புதிய புதிய நம்பிக்கைகளும் வாக்கு வங்கியைத் தொடர்ந்து பராமரிக்கின்றன. மக்களுக்குத் தெரியாமல் மக்களை ஏமாற்றுவதே அரசியலில் ராஜதந்திரமாகிறது.

திரை கதாநாயகர்கள் சிலர் முதலமைச்சர் கனவு காண்பதற்குக் காரணம், எம்.ஜி.ஆரின் வெற்றிதான். அவரே கலையுலகத்தையும் ஆண்டார், பின்னர் அரசியலையும் ஆண்டார். அவரைப் போல் இரண்டையும் ஆட்சி செய்தவர் அவருக்கு முன்பும் இல்லை; அவருக்குப் பிறகும் இல்லை. வெற்றியின் கதாநாயகன் அவர்.

திரைப்படத்தின் தோற்றமும், வளர்ச்சியும் மனித நாகரிகத்தையே புரட்டிப் போட்டது. ஊமைப் படங்களின் காலம் முடிந்து, 1931-ஆம் ஆண்டு முதல் பேசும் படங்கள் தயாரிக்கப்பட்டன. முதல் பேசும் படத்தில் நடித்த பெருமையை டி.பி.ராஜலட்சுமி பெற்றார். புதிய வரலாற்றை உருவாக்கினார். முதல் படம் "காளிதாஸ்'. அதனைத் தொடர்ந்து "வள்ளித் திருமணம்' வெளிவந்து வெற்றி கண்டது.

முதல் பேசும் படத்தில் நடித்த டி.பி.ராஜலட்சுமி 1936-இல் "மிஸ் கமலா' என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். அதன் கதை, வசனம், இயக்கம் எல்லாம் அவரே. தொடர்ந்து மதுரை வீரன், இந்தியத் தாய் ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

இவரைத் தொடர்ந்து ஏழிசை மன்னன் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், டி.கே.சண்முகம் என்னும் இந்த வரிசையில் வந்தவரே எம்.ஜி.இராமச்சந்திரன் என்னும் எம்.ஜி.ஆர். 1936-இல் "சதிலீலாவதி' படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர்., 1978-ஆம் ஆண்டு வரை 42 ஆண்டுகள் திரையுலகை ஆட்சி செய்தார். திரையுலக வரலாற்றில் வேறு எந்த நடிகரும் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்ததில்லை.
மிகவும் வறிய நிலையிலிருந்து மேலே வந்தவர் எம்.ஜி.ஆர். எனவே, மக்களின் ரசனையை நன்கு அறிந்திருந்தார். அதற்குத் தக்க கதையைத் தேர்ந்தெடுத்து அவர் நடித்ததால், அவர் படங்கள் வெற்றி மேல் வெற்றி பெற்றன. அவர் பாடும் பாடல்களும் அவ்வாறே பட்டி தொட்டி எங்கும் பாமர மக்களால் முணுமுணுக்கப்பட்டன. எங்கும் அவர் நடித்த திரைப்படங்களின் பாடல்களே ஒலிபரப்பப்பட்டன.

1947-க்குப் பிறகு 1956 வரை அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் "ராஜகுமாரி', "மர்ம யோகி', "மருத நாட்டு இளவரசி', "சர்வாதிகாரி', "குமாரி', "ஜெனோவா', "மலைக்கள்ளன்', "குலேபகாவலி', "அலிபாபாவும் 40 திருடர்களும்', "மதுரை வீரன்' என்னும் ராஜாராணி படங்களும், "அந்தமான் கைதி', "என் தங்கை', "நாம்', "கூண்டுக்கிளி', "தாய்க்குப் பின் தாரம்' முதலான சமூகக் கதைகளும் மக்களால் வரவேற்கப்பட்டன.

அவர் தொழிலாளியாகவும், விவசாயியாகவும், போலீஸ் அதிகாரியாகவும், படகோட்டியாகவும், ரிக்ஷாக்காரராகவும் நடித்து மக்களைக் கவர்ந்தார். "ஆயிரத்தில் ஒருவன்', "எங்க வீட்டு பிள்ளை', "நான் ஆணையிட்டால்', "பெற்றால் தான் பிள்ளையா' ஆகியவற்றைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த 100-ஆவது படமாக ஜெமினியின் "ஒளி விளக்கு' 1968-இல் வெளிவந்தது.
1969-இல் "அடிமைப் பெண்', "நம் நாடு', 1972-இல் "இதய வீணை' - இவ்வாறு கலையுலகில் வெற்றியின் உச்சத்தில் இருக்கும்போதே அவர் அரசியல் கட்சியிலும் இயங்கி வந்தார். அவர் தி.மு.க.வின் பொருளாளராகவும் தொடர்ந்தார்; அவருக்கும் கட்சியின் தலைவர்  மு.கருணாநிதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

1972 அக்டோபர் 10 அன்று கூடிய தி.மு.க. பொதுக்குழு, கட்சியை விட்டு எம்.ஜி.ஆரை வெளியேற்ற தீர்மானம் நிறைவேற்றியது. 16.10.1972-இல் அண்ணா திமுக என்ற தனிக்கட்சி தொடங்கப் போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார். அவர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் படம் 1973 மே மாதம் திரைக்கு வந்தது.
தமிழ்நாட்டில் அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவை 31.1.1976-இல் மத்திய அரசால் கலைக்கப்பட்டது. 1977 ஜூன் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் அண்ணா திமுக 127 இடங்களில் வெற்றி பெற்றது. 1977 ஜூன் 30 அன்று எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனார்.

அதுவரை அவர் நடித்து முடித்திருந்த, "இன்று போல் என்றும் வாழ்க', ஏ.பி. நாகராஜனின் "நவரத்தினம்',  "மீனவ நண்பன்' ஆகியவை 1977-ஆம் ஆண்டிலும், "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' 1978-ஆம் ஆண்டும் வெளிவந்தன. அரசாங்கப் பொறுப்பில் அமர்ந்த பிறகு, பிரதமர் மொரார்ஜியின் அனுமதி பெற்று தொடர்ந்து சினிமாவில் நடிக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் நடிக்கவில்லை.

அவர் 1977, 1980, 1985 ஆகிய மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். 1987 டிசம்பர் 24-ஆம் தேதியன்று அவர் மறையும் வரை முடிசூடா மன்னராகவே ஆட்சி புரிந்தார். அவரது முன் மாதிரி இன்றும் நினைக்கப்படுகிறது. இனியும் நினைக்கப்படும்.

அவர் காலத்தில் அவருக்கு இணையாக திரையுலகில் மின்னியவர் சிவாஜி கணேசன். அதே காலத்தில் அவரும் அரசியலில் ஈடுபட்டார்;
அவர் வெற்றியைப் பெறவில்லை. இதனை நினைத்துப் பார்த்தால் இக்கால நடிகர்கள் அரசியலுக்குள் நுழைய அஞ்சவே செய்வர். ஒவ்வொரு நாணயத்துக்கும் இரண்டு பக்கம் உண்டு அல்லவா?
மக்களாட்சி என்பது மக்களுக்காக உழைப்பது. தம் உடல், பொருள், உயிரை நாட்டுக்காக அர்ப்பணிப்பது. அது தொழில் அல்ல, தொண்டு. இப்படித்தான் அக்காலத்தில் அரசியலுக்கு வந்தனர். உழைத்து உழைத்து உருக்குலைந்து போனார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். சேர்த்த செல்வம் எல்லாம் அவருக்குப் பின் மக்கள் உடைமையானது. கல்வி நிலையங்களாகவும், கட்சி நிறுவனமாகவும் காட்சியளிக்கின்றன. குடும்பத்துக்கென எதையும் ஒதுக்கி வைக்காமையால், அவர் மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உரியவராகிறார்.

இப்போது ஒரு படத்தில் நாயகனாக நடித்து வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த நொடியே எம்.ஜி.ஆராகவே எண்ணிக் கொள்கின்றனர். இவர் பேசிய ஒரு வசனத்தால் பாராட்டப்படுகிறார். அந்த ஒரு வசனமும் கதாசிரியர் எழுதிக் கொடுத்தது என்பதை ரசிகர்கள் மறந்து விடுகின்றனர்.

ரசிகர் மன்றம் அமைப்பதற்கு முன் இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? பெற்று வளர்த்தவர்களுக்குத் தேநீர் கூட வாங்கிக் கொடுக்காத இளைஞர்கள் நடிகர்களின் கட்-அவுட்களில் பால் அபிஷேகமும், பீர் அபிஷேகமும் செய்கிறார்கள். இந்த மூடத்தனத்தையும், அடிமைத் தனத்தையும் தன்னலத்திற்காக வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கிறார்கள். அதனை ஊடகங்களும், சில உபதேசிகளும் தூண்டி விடுகின்றனர்.

அரசாங்கத்தின் அரியாசனத்தில் அமர்வதென்பது, புலியின் மேல் சவாரி செய்வது போன்றது. "அதிகார பீடத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வும் இல்லை. உல்லாச வேளையும் இல்லை' என்றார் முதல் பிரதமர் பண்டித நேரு.
உண்மையான அரசியல்வாதிகள் நிலை இப்படித்தான் இருக்கிறது. அரசியலையே முழுநேர வணிகமாகக் கொண்டவர்களுக்கு இது பொருந்தாது. அரசியலும் ஒரு தொழிலாக மாறிவிட்டதால்தான் லஞ்சமும், ஊழலும் பெருகி விட்டது. அவற்றை ஒழித்துவிட்டே மறுவேலை என்று பேசும் பேச்சு தேர்தலோடு முடிந்து விடுகிறது.

அரசியல் அனைவருக்கும் பொதுவானது. நல்லவர்கள் அரசியலுக்கு வருவது பொது நலனுக்கு நல்லது. எல்லோருக்கும் என்பதால் திரையுலகத்தினரும் வரலாம். மக்களுக்கு உண்மையாக உழைக்க வருகிறவர்களை வரவேற்க வேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது சரியல்ல.
"உங்களுக்காகப் பணியாற்ற எங்களுக்கு உத்தரவிடுங்கள்' என்பது கேட்பதற்கு அருமையாக இருக்கிறது. வாக்காளர்களுக்குப் பெருமையாகவும் இருக்கிறது. ஆனால் உண்மை எட்டாக்கனியாக இருக்கிறது. இது சாதாரண மக்களுக்கும் எட்டும் கனியாக எப்போது வரப்போகிறது?
கட்டுரையாளர்:
எழுத்தாளர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நரகம் இல்லாத நகரத்தை நோக்கி...

நரகம் இல்லாத நகரத்தை நோக்கி... | பேராசிரியர் தி. ஜெயராஜசேகர்  |   மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடி நீண்ட காலமாக நகரங்களுக்குக் குடிபெயர்வதனால் அதிகரித்து வரும் நகரமயமாக்கல், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்தம் நல்வாழ்வு பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் தனி மனிதன் முதல்  அரசாங்கம் வரை அனைத்துத் தரப்பினருக்கும் கடுமையான அழுத்தம் கொடுக்கிறது.

சுத்தமான நீர், சுகாதாரம், கழிவு மேலாண்மை இல்லாத நகர அமைப்புகள் காலரா, வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்களின் காரணிகளாக பொது சுகாதாரத்துக்கு சவாலாக விளங்குகிறது. நகர வாழ்வோடு தொடர்புடைய சமூகம், சுற்றுச்சூழல், பழக்கவழக்கம் சார்ந்த காற்று மாசுபாடு, மோசமான உணவு, உடல் செயல்பாடு முதலானவை வாழ்வியல் சார்ந்த நோய்களின் மூலமாக விளங்குகின்றன. சாலை பாதுகாப்பு, வன்முறை முதலானவையும்  மனநலப் பிரச்னைகளின் ஆரம்பப் புள்ளிகளாக விளங்குகின்றன.

ஆரோக்கியம் என்பது மருத்துவ சேவைகளுக்கு அப்பாற்பட்ட வீட்டு வசதி, சுகாதாரம், போக்குவரத்து, எரிசக்தி அமைப்புகள், பசுமைப் பூங்காக்கள் போன்ற உள்கட்டமைப்பினையும் வேலைவாய்ப்பு, கல்வி, சத்துணவினையும் சார்ந்திருக்கிறது.

ஒவ்வொரு நாளும் 82 கோடிக்கும் அதிகமான மக்கள் பசியுடன் வாழும் உலகில், நகர மக்களின் ஆரோக்கிய உணவினை தீர்மானிக்கும் காரணிகளாக வறுமை, காலநிலை மாற்றத்தினால் உண்டாகும் உணவுப் பற்றாக்குறை, அறியாமை, சத்தான உணவு கிடைக்காதது, உடல் பருமனை ஊக்குவிக்கும் சூழலில் வாழ்வது, அதிக எண்ணிக்கையிலான துரித உணவு விற்பனை நிலையங்கள்,  அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை, உப்பு கொண்ட உணவை உண்பது போன்றவை திகழ்கின்றன.

மிக நீண்ட நேரம் வேலை செய்பவர்களும் வீட்டு சமையலுக்கு மாற்றாக உண்ண நினைப்பவர்களும்  சாப்பிடுவதற்கு நேரத்தை முதலீடு செய்யத் தவிர்ப்பவர்களும் கொழுப்பு, உப்பு, சர்க்கரை அதிகம் உள்ள உணவு மற்றும் பானங்களை வழங்கும் பல துரித உணவுக் கூடங்களை நாடி ஆரோக்கிய உணவை உறுதி செய்யத் தவறுகின்றனர். சீரான உணவுப் பழக்கவழக்கத்தின்  மூலம் மக்கள் ஆரோக்கியமான உணவினை உறுதி செய்ய முடியும்.

உடல் செயல்பாடு உடல் பருமனைக் குறைத்து உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதய நோய், பக்கவாதம், சர்க்கரை நோய், சில புற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது. உலகெங்கிலும் நான்கில் ஒரு பெரியவருக்கும் நான்கில் மூன்று இளம் பருவத்தினருக்கும் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் உடல் செயல்பாடு இல்லை என்பது தரவுகள் சுட்டிக்காட்டும் உண்மை. பசுமையான இடங்கள் குறைந்த நகரங்களில் உடற்பயிற்சி மூலம் உடல் செயல் பாட்டினை மேம்படுத்த முடியும்.

முதுமையடையும் உலகினில் மற்ற எல்லா வயதினரையும்விட வேகமாக வளர்ந்து வரும் முதியவர்களின் எண்ணிக்கை (60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) தற்போதைய 96.2 கோடியிலிருந்து  2050-ஆம் ஆண்டில்  இரு மடங்காகவும் (210 கோடி) 2100-ஆம் ஆண்டுக்குள் மும்மடங்காக (310 கோடி) உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஆரோக்கியமாக வாழ வீடு, நகர்ப்புற வசதி, பொது போக்குவரத்து, சுகாதாரம்,  சமூக ஆதரவு ஆகியவை  எல்லா வயதினரின் தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாதபோது, நகரங்கள் வளர்ச்சியினை எட்டுதல் கடினமானதாக இருக்கும்.

நம்மில் பத்தில் ஒன்பது பேர் ஒவ்வொரு நாளும் சுவாசிக்கும் மாசுபட்ட காற்று, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களைக் கொல்கிறது. பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு காற்று மாசுபாட்டால் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 8,70,000 அகால மரணங்களுக்கு காரணமான புகையிலைப் புகையினை  புகையில்லா இடங்கள் நிறுவுதல் மூலம் குறைக்கலாம்.

தரமற்ற சாலைகள், வாகனங்கள், வேகம், மது அருந்தி வாகனம் ஓட்டுதல்,  தலைக் கவசம் - சீட் பெல்ட் அணியத் தவறுதல் போன்ற காரணங்களால் ஏற்படும் சாலை விபத்துகள் 5 முதல் 29 வயது வரை உள்ளவர்களின் மரணத்துக்கு முக்கியக் காரணமான அமைகிறது. ஆண்டுதோறும்  13.5 இலட்சம் மனித மரணத்தையும் 5 கோடி மனித உடல் காயத்தையும் ஏற்படுத்தும் சாலை விபத்துகள் குறித்த சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு  ஏற்படுத்துதல்,  விபத்தைத் தொடர்ந்து அவசர சிகிச்சை அளிக்கும் கட்டமைப்பினை வலுப்படுத்துதல் மூலம் சாலை விபத்துகளின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

வறுமை, வேலையின்மை, கூட்டம், ஒலி மாசுபாடு, மோசமான உள்கட்டமைப்பு, பசுமையான இடங்களின் பற்றாக்குறை ஆகிய நகரவாசிகளின் சவால்கள் மன நோயை உருவாக்கலாம் அல்லது தீவிரப்படுத்தலாம். நகர்ப்புற இடங்களை நல்ல மன ஆரோக்கியத்துக்கு உகந்ததாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் மூலம் இந்தச் சவால்களைச் சமாளிக்கலாம்.

ஆரோக்கியத்துக்கு ஆபத்தினை உருவாக்கும் வறுமை, சமூகப் பாதுகாப்பு, குடும்பச் செயலிழப்பு, மனநலப் பிரச்னைகள்,  மதுப்பழக்கம் முதலிய வன்முறையின் விளைவுகள். வன்முறை என்பது இறப்பு, காயங்களைத் தாண்டி புகை பிடித்தல், மது - போதைப்பொருள் பழக்கம், பாலியல் கொடுமைகள், மனநலக் கோளாறுகள், வேலையின்மை போன்ற சமூகப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும்  புற்றுநோய்கள், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், பால்வினை நோய்த்தொற்றுகள் போன்ற நோய்களுக்கான ஆபத்தையும்  அதிகரிக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
மக்கள்தொகை வளர்ச்சியின் தரவுகள் 2050-க்குள் மேலும் 250 கோடி மக்கள் நகரங்களில் வசிப்பார்கள் என்பதைக் கணித்துக் கொடுத்திருக்கிறது. அதனை எதிர்கொள்ளத் தேவையான கொள்கைகள், திட்டங்கள் வடிவமைத்து அதன் மூலம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நகர வடிவமைப்பு சார்ந்த மக்கள் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள் எளிய செயல்பாட்டுத் தளங்களைக் கொண்டதாக தேசிய, உலகளாவிய இலக்குகளை அடையும் வண்ணம் இருக்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts